Thursday, February 23, 2012

11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1

இளையராஜாவின் பாடல்களை கேட்பது எப்படி? வாழ்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும். நினைவின் இழைகளில் காலம் மீட்டும் ஸ்வரம் இசையா? வாழ்வா? இசைவான வாழ்வா? இத்தகைய இழைகளைப் பிடித்து பயணம் போகப் பழகுவதற்கே வருடங்கள் பல தேவைப்படுகிறது.
இப்பயிற்சியில் ஏற்படும் பரிமாணங்களின் அடர்த்தியும் பன்முகத்தன்மையும் இளையராஜாவின் பாடல்களில் நினைவாக பதிவாகிறதோ அல்லது பாடல்களின் பரிமாணங்கள் நிகழ்வில் உராய்ந்து நம் நினைவாக பதிவாகிறதோ...!  . உராய்தல் (friction)  இயற்பியலின் கூறு என்றால், நினைவுகள் உராயும் இசையின்  கூறே இளையராஜாவின் இயற்பியல் எனலாம் ...

நினைத்தாற்போல் கேட்டு விட்டு போவது என்பது இளையராஜாவின் பாடல்களில் முடியாது. ஒரே ஒரு நொடி வந்து போகும் குழலின் ஒலி  கூட அது கேட்கப்பட்ட காலத்தை சுமந்து கொண்டு வருடக்கணக்கில் உலா போகும். ஒரு மரத்தை தச்சன் இழைப்பதை போல அந்த நொடியை மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு, ஸ்வரத்தில் அதை தேய்த்து தேய்த்து... போகப்போக நினைவா ஸ்வரமா என்ற வித்தியாசம் மறந்து  அந்த நொடியிலேயே நனைந்து ஒரு ஏதுமற்ற நிலையை ஏற்படுத்தும் இயலை இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

நாம் படித்த இயற்பியல் அதிகபட்சம் மூன்று பரிமாணங்கள்  அடிப்படையிலானது. வாழ்க்கையோ காலத்தின் பரிமாணங்கள் அடிப்படையிலானது. அந்த பரிமாணங்களை நம் ஞாபக அறையின் நீள அகலத்தில் தேக்கி வைப்பதற்கு தோதான ஒலியலைகளை நமக்கேற்ற ஸ்வரத்தில் நமக்கேற்ற தளத்தில் நமக்கேற்ற விசையாக இசைப்பது இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

ஒரு ஒலிக்கற்றையால் நம் நரம்புகளை நீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் செயலின் வரம்புகளை சீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் நினைவின் விதைகளை தூவி விட முடியும். சில ஒலிக்கற்றைகள் தூக்கம் தரலாம். சில ஏக்கம் தரலாம். ஞாபக வீக்கம் தருபவை சில... துயரம் நீக்கும் மருந்தாய் சில... இப்படி நம் மனக்குடுவை முழுதும் முட்டி மோதும் ஒலிக்கற்றைகள் பாய்ச்சும் அனுபவ ஒளி wave nature அல்ல particle nature அல்ல. இது Einstein பார்த்திராத, விஞ்ஞான தர்க்கங்கள் மீறிய, இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

இயக்கங்களை விளக்குவது இயற்பியல் என்றால்,  மனதின் இயக்கங்களை மயிலிறகால் துலக்குவது இளையராஜாவின் இயற்பியல் எனலாம். காலத்தின் பிணக்குகளை ஸ்வரங்களின் கணக்குகளுக்குள் கட்டிப்போடும் சூத்திரம் இளையராஜாவின் இயற்பியலில் அடிப்படை விதி எனலாம்...

நம் புலன்களுக்கு நலம் பயக்கும் இந்த விதிகளின் விரல்கள் ஐந்து. இவை முறையே வயலின், புல்லாங்குழல், கிடார், வீணை மற்றும் கப்பாஸ். இவ்விரல்கள் தாங்கும் கரங்கள் இரண்டு - தபேலா மற்றும் triplet. விஞ்ஞான உடம்பு நடமாட இயற்பியல் விதி இருத்தல் போல நம் மெய்ஞான உடம்பை புடம் போட இந்த இளையராஜாவின் இயற்பியல் விதியின் விரல்கள் கருவியாகும்...இக்கருவியின் வழியே கசியும் காலத்தை செவிக்குள் ஊற்றி, உடலை உற்சாகப்படுத்தும் செந்நீர் போல் மனதை மகிழ்வூட்டும் நன்னீராய் உயிரெங்கும் ஓடும் ஸ்ருதியாய் படரும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...

அவற்றை "இளையராஜாவின் இயற்பியல்" [ Physics of Ilayaraja ] என்னும் பகுதிகளில் அனுபவிக்க முயல்வோம்...

Friday, February 10, 2012

10. கமலம் டீச்சர் - 2 / "தீண்டாய்..." / ஹம்பி [ Hampi ]

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், தமிழ் செய்யுட்களை மனப்பாடம் செய்யச்  சொல்லாமல் அந்த வயதுக்கு தகுந்த அர்த்தங்களை புரிய வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் செய்யுள் பகுதியில் இருந்த ஒரு சங்க இலக்கிய பாடலை, தான் நடத்தப் போவதில்லை என்றும் அப்படியே மனனம் செய்து எழுதி விடும்படியும் சொல்லியது அதிசயமாக இருந்தது. "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... " என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியிலும் ஒரு வார்த்தை கூட புரியாததால் ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று இந்த பாட்டின் அர்த்தம் புரியவில்லை என்றேன். கடைசி வரிசையில் இருந்து சில சிரிப்பொலியும் கேட்டது (அவர்களுக்கு அப்போதே சில அரை குறை அர்த்தம் தெரிந்திருந்தது போலும்). அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், "hey boys" என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) "Syllabus போடுபவர்களுக்குத்தான் அறிவில்லை உங்களுக்கு என்ன?" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப்  பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே "Motel" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற "Motel" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற? comedy  போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள்?... ) . அப்படிப்பட்ட கடையிலிருந்து அந்த மார்கழி காலையில், ரசனை குறைவான இழுவையுடன் "கன்றும் உண்ணாது..." என்று  துவங்கியது ஓரளவு நல்ல பாடலான "தீண்டாய் மெய் தீண்டாய்...". முதல் கேட்பிலேயே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்து போகும் இந்த பாடலில் "ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ" , "பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்" என்ற இரண்டு வரிகள் தேறும். இப்பாடலுக்குப்பின் வேடசந்தூர் - மதுரை இடையிலான தூரம் 7 வருடங்கள் ஆனதில் ஆச்சரியமில்லை.

Hampi நகரத்தை நமக்கு அறிமுகம் செய்யும்  இப்பாடலில் தோன்றுவதை விட ஹம்பி ஒரு காலக்கண்ணாடி என்பதை பல வருடங்கள் கழித்து hampi சென்ற போது அதன் ஒவ்வொரு துளி மண்ணும், கல்லும், காற்றும் உணர்த்தியது. பல நகரங்கள், காலத்தை விழுங்கி விட்டது போல் மாயை காட்டி மாறுகையில், hampi நகரை  காலம் விழுங்கி விட்டது போல் நூற்றாண்டுகள் அப்படியே உறைந்து நிற்கும் அதிசயம் அங்கு காணலாம். அங்கிருக்கும் கல்லைத்  தொடுகையில் கூட காலம் கையில் ஒட்டி கொள்கிறது போன்ற உணர்வு...நாங்கள் ஹம்பியில் இறங்கியதிலிருந்தே "நீ பார்க்காத அதிசயத்தை காட்டுகிறேன் வா" என்று மழை என் மனதின் விரல் பிடித்து இழுத்து போனது. மௌனித்திருந்த கல்மண்டபங்களின் கூரைகளிலிருந்து வழிந்த மழை நீர் மண்ணில் பரவி ஊரெங்கும் போட்ட நீர் திரவியத்தின் வாசனையில் முக்கியெடுத்த காட்சிகள் அனைத்துமே நமக்கு "கால மூர்ச்சை" உண்டாக்கும் நொடிகள்.  

"தீண்டாய்..." கேட்கும் பொழுதெல்லாம், பொருந்தாத இடத்தில் மாணவர்களை நிறுத்தக்கூடாது ஆசிரியரும் நிற்க கூடாது என்னும் உயரிய கொள்கை கொண்ட கமலம் டீச்சர் ஞாபகம் வரத்தவறுவதில்லை...