Saturday, June 23, 2012

19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9


மதுரை நகரம் முழுவதும் மத்தளம் போன்ற இடியுடன் மழை இறங்கிய ஒரு மாலை வேளை. முன்னர் கண்டிராத அளவு மூன்று நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை என்று தெரியாமல் , வழக்கமான மழை என்று நினைத்து கிடைத்த இடங்களில் ஒதுங்கினோர் ஏராளம்.சற்று நேரத்தில் நின்று விடும் என்று காத்திருந்த எண்ணற்ற பேரில் நானும் ஒருவனாய், உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு மாணவனாய், பழங்கானத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்...

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே, "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகிலுள்ள கடையில் நுழையும் மதுரை மக்களின் மனது அறிந்தே, அனைத்து பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் குறைந்தது ஒரு காபி கடையையாவது நீங்கள் மதுரையில் பார்க்கலாம். சூடான பாலில் சுவையான காபி தேநீர் மட்டுமல்ல, அத்துடன் வாடிக்கையாளரை மகிழ்விக்க சங்கீதமும் போடத்தெரிந்த ரசனை மிகுந்தவர்கள் மதுரை டீ கடைக் காரர்கள்.

மழைக்கு ஒதுங்கியவர்களும் காபி குடிப்போருமாய் கூட்டம் நிறைந்திருந்த கூரை வேயப்பட்ட டீக்கடையில் ஒலிக்கத்துவங்கியது "நிலவே நீ வர வேண்டும்..." [என்னருகில் நீ இருந்தால் / Ilayaraja / 1990-91]. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் அற்புதமான கிடார், கூரையிலிருந்து மழை நீர்த்தாரைகள் தரையில் தேங்கியிருந்த தண்ணீர் மேல் விழும் தாளக்கட்டில் துள்ளத் துவங்கியது. மழையின் துளிகள் இந்த கிடாரின் இழையை பிடித்து மனதுக்குள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு.

காலக் கிணற்றின் மீட்க முடியாத ஆழத்தில் வீசப்பட்ட நினைவின் கல்லில் இருந்து கசியும் நீர் போல நம்முள் ஏதோ ஒன்று வழிந்து கொண்டே இருக்கும் இப்பாடல் முழுவதும். அந்த கசிவின் வடிவம் போல‌"bass guitar", மெலிதாக, அனைத்திற்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் நளினம் இளையாராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

முதல் stanza ஆரம்பத்தில் வரும் அந்த புல்லாங்குழல்... அதை வாசிப்பவர் குழலின் துளைகளின் வழியே அனுப்புவது காற்றையா அல்லது நம் காலத்தையா? அல்லது புல்லாங்குழலே காலத்தின் துளைகளால் செய்யப்பட்ட கருவியா? அத்துளைகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய், "அனைத்தும் கடந்து போகும்" என்று நம்மை ஆரத்தழுவுவது போல இருக்கிறது இல்லையா?

"இணைந்து இருந்த சோலைகள் உலகை மறந்த கோலங்கள்" [1st stanza இறுதி இரண்டு வரிகள்] , "கலைந்து பிரிந்த மேகங்கள் இழந்த காதல் சோகங்கள்" [2nd stanza இறுதி இரண்டு வரிகள்] என்ற வரிகளின் பின்னே சட்டென்று சொட்டும் வயலின் துளிகளை தனியே பிரித்தெடுங்கள்...மழை பெய்து ஒய்ந்த வேளையில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். மழையின் துளி ஜன்னலின் மேற்பகுதியிலிருந்து சொட்டி உங்கள் உச்சந்தலைக்குள் இறங்குகிறது...அந்த உணர்வின் ஊடுருவலை ப்ரதிபலிப்பது போலிருக்கும் இந்த வயலின் சொட்டுக்கள்...!

அப்படியே சற்றே பின்னால் நகர்ந்து அதற்கு முந்தைய வரிகளுக்கு அடியில் செல்லுங்கள்... "நீ இன்றி வாடுதே பூஞ்சோலை மலரே...துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே"  1st stanza] , "மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதே என் நோய்க்கு மருந்தே"  [2nd stanza]. இந்த வரிகளின் பின்னே வரும் வயலின் எப்படி இருக்கிறது? தலையில் இறங்கிய நீர்த்துளி காதோரமாய் வழிந்து நம் கன்னத்தை தாங்கியிருக்கும் கைகளில் இறங்கி அந்த துளி, கை முழுதும் பயணம் செய்து முழங்கை வழியே பேருந்தின் ஜன்னல் இரும்பில் வழிந்தோடும் நொடிகள் போன்றது அது. இங்கே வழிவது மழையின் மொழியா? வயலின் ஒலியா? வாழ்க்கையின் துளியா ?

குறிப்பு: கடந்த சில நாட்களாக, இளையராஜாவின் பாடல் London Olympics துவக்க விழாவில் இடம்பெறுவதனால் அவருக்கு அங்கீகாரம் என்று வரும் செய்திகள் குறித்த "ஆதங்கம்" படிக்க:
இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

Saturday, June 9, 2012

18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8

TV அரக்கன் ஊருக்குள் புகுந்து நேர‌த்தை தின்ன‌த் துவ‌ங்காத‌ 1980களின் ஆரம்ப வருடங்கள்...அந்த நாட்களில் ஞாயிறு மாலை நேர‌ம் என்பது ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நாம் பார்க்கும் நீர் போல மெதுவாக அழகாக ஊர்ந்து போகும். எங்கள் வீட்டில் பொன்னி என்றொருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் தங்கை காந்தி. சில சமயங்களில் ஒருவருக்கு பதில் மற்றொருவரோ, அல்லது இருவரும் சேர்ந்தே வேலைக்கு வருவார்கள்.

சில ஞாயிறுகளில் இவர்கள் வேலை முடிந்தபின் வீட்டின் சிறார் குழுவை மொட்டை மாடிக்கு அழைத்து போவார்கள். பொன்னி அத்தகைய சமயங்களில் கதை சொல்வார். ஞாயிறு மாலைகளில் மொட்டை மாடியில் கதை கேட்பது பலாச்சுளை சுவை போன்றது என்றால், அப்போது மழை திரண்டு வந்தால், பலாச்சுளை மேல் தேன் ஊற்றியது போல இருக்கும் இல்லையா? அப்ப‌டி ஒரு தேனூறிய‌ ப‌லா போன்ற‌தொரு ஞாயிறு மாலையில் நாங்க‌ள் மொட்டை மாடியில் ஒரு க‌தையை பொன்னி சொல்ல, கேட்க‌த் துவ‌ங்கினோம்.

"இப்ப‌டியொரு இடி இடிக்கும் பொழுதில் ம‌ழைக்கு முன் வீட்டுக்கு போக‌ வேண்டும் என்று அவ‌ன்  வேகமாக‌ நடந்தான்" என்று பொன்னி ஆர‌ம்பித்த‌து ஒரு பேய் க‌தை. சிறுவ‌ய‌தில் நாம் அனைவ‌ருமே பேய் ப‌ற்றி ஒரு முறையேனும் யோசித்தோ ப‌ய‌ந்தோ இருப்போம். வ‌ள‌ர்ந்த‌ பின், ச‌மூக‌த்தில் ப‌ல‌ வித‌ கொடூர‌மான‌ பேய்களுடன் (நம்மையும் சேர்த்து) ப‌ழ‌கி, உண்மையான‌ பேயே தேவ‌லாம் என்று முதிர்ச்சி அடைந்திருப்போம்.

பொன்னி, சொல்லும் க‌தையின் சுவை கூட்ட‌ ச‌ம‌யோஜித‌மாக‌ செய‌ல்ப‌டுவார். பேய் பற்றிய கதை என்பதால், த‌ன் கூந்த‌லின் பின்ன‌லை அவிழ்த்து விட்டுக் கொண்டார். க‌ருத்து க‌விழ்ந்த‌ மேக‌ங்க‌ளின் பிண்ண‌னியில் த‌லைவிரித்திருந்த‌ பொன்னி அந்த‌ சூழ‌லுக்கு ந‌ன்றாக‌வே அச்ச‌மேற்றினார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே, என் இன்னொரு அண்ணன், அப்போது பிரபலமாக இருந்த‌ "உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வ‌ச்ச‌ கிளி" பாட‌லை ("ரோசாப்பூ ர‌விக்கைக்காரி" / SPB ) கேட்டால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார் என்று வீடு முழுதும் அறிந்திருந்தது. இந்தப் பாடலை, பொன்னி கதைக்கு  இடையிடையே பயன்படுத்திக்கொண்டார்.

இந்த‌ பாட‌ல் முழுவ‌துமே இளைய‌ராஜா ந‌ம் ம‌ன‌தை க‌ரும்பு மிஷின் உள்ளே விட்டு பிழிந்தெடுத்திருப்பார். பிழியும் வித‌த்தில் பிழிந்தால், ம‌ன‌ம் ச‌க்கையானாலும் அனுப‌வ‌த்தின் ருசி என்ப‌து அடியிலிருக்கும் பாத்திர‌த்தில் சேரும் க‌ருப்புச் சாறு போலிருக்கும் இல்லையா? பாட‌ல் ஆரம்பத்தில் வ‌ரும் இசையிலேயே சொட்ட‌த் துவ‌ங்கும் சாறு, முத‌ல்  stanza முன்ன‌ர் வரும் "ஆரீராரோ" வில் கொட்டி நிர‌ம்பும்!
மூன்றாவது stanza துவக்கத்தில் வரும் SPBயின் அந்த "தனன..."வும் அதை தொட‌ர்ந்து வ‌ரும் அந்த‌ "Cornet" இசையும், வெறித்த வானத்தின் நடுவே நகரும் ஒற்றை மேகத்தை போல ஒரு சோக நிழல் கவிழும்.

பாட‌லில் ஆங்காங்கே வ‌ரும் வ‌ய‌லினை நாம் எப்ப‌டி அர்த்த‌ப்ப‌டுத்துவ‌து? வ‌ய‌லினா அது? bowவை வயலின் மீதா இழுக்கிறார் ilayaraja ? கால‌த்தின் க‌ண்க‌ளை மூடியிருக்கும் ஞாப‌க‌ இமைக‌ளின் மீது violin bow வைத்து இழுத்த‌து போல‌ல்ல‌வா  பெருகி வ‌ழிகிற‌து துய‌ர‌த்தின் ஒலி!

க‌தை உச்ச‌க்க‌ட்ட‌த்தை நெருங்கிய‌ பொழுது, அச்ச‌த்தின் பிடியில் அம‌ர்ந்திருந்த‌ எங்க‌ளுக்கு, வாடைக் காற்றில் மொட்டை மாடி வாச‌ல் க‌த‌வு "ப‌ட் ப‌ட்" என்று எழுப்பிய‌ பெருத்த‌ ச‌த்த‌ம் கிலி கிள‌ப்பிய‌தில் விய‌ப்பில்லை. அல‌றி அடித்து ப‌டிக‌ளில் இற‌ங்கிய‌தில் த‌வ‌றி விழுந்து என் முட்டி பெய‌ர்ந்த‌து. விளையாடும் பொழுது விழுந்த‌தாக‌ வீட்டில் நினைத்துக் கொண்டார்க‌ள். "க‌தை கார‌ண‌ம்" வெளியிட்டால் இனி க‌தையே கிடையாது என்று பொன்னி சொல்லிய‌தால், பேய்க்க‌தையால் முட்டி பெய‌ர்ந்த‌ க‌தை எங்க‌ள் அனைவ‌ராலும் பெரியவர்களிடமிருந்து "அமுக்க‌ப்ப‌ட்டது".

பாட்டு வ‌ரிக‌ளின் உள்ள‌ர்த்த‌ம் தெரியாம‌ல், இது ந‌ட‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை, பால் திரிந்தால் பேய் வ‌ரும் என்றும் ("ப‌ட்டியில‌ மாடு க‌ட்டி பால‌ க‌ற‌ந்து வ‌ச்சா..."),க‌ரும்பின் அடியில் இருக்கும் செம்ம‌ண் பார்த்து ("பொங்க‌லுக்கு பூங்க‌ருப்பு...") க‌ரையான் என்றும், க‌ருப்ப‌ட்டி பார்த்தால் ஒரு இன‌ம் தெரியாத‌ ப‌ய‌மும் ("வ‌ட்ட‌க் க‌ருப்ப‌ட்டிய‌ வாச‌முள்ள‌ ரோசாவ‌..."), பிச்சிப் பூவிலும் ம‌லைக‌ளிலும் பேய் இருக்குமென்றும்...வெளியில் சொன்னால் பொன்னியின் க‌தைக‌ள் கிடைக்காது என்ப‌தால் உள்ளேயே வைத்து கொண்டு பயத்துடன் திரிந்த‌ சிறு வ‌ய‌து நாட்க‌ள்...சீக்கிரத்தில் மறக்க முடியாது.

என்னுடன் அமர்ந்து கதை கேட்ட Lakshmi, Jayashree அக்காக்க‌ள் இருவரும் காலத்தின் ஊருக்கு மாற்றலாகிப் "போய் விட்டார்கள்". பொன்னியை பார்த்து இருப‌து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காந்தி அன்று வெள்ளை நிற முழுக்கை ஆண் ச‌ட்டை போட்டுக் கொண்டு "ஒடாத‌ விழ‌ப்போற‌" என்று என் பின்னே ஓடி வந்தது புகை போட்ட காட்சி போலத் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக காதில் விழுவதில்லை. சில மாதங்கள் முன் கோயப்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது ஒரு கடையிலிருந்து எதிர்பாராமல் எழுந்து வந்தது "உச்சி வகுந்தெடுத்து"...சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் போனாலே முக்கால் மணியாகும்.இளையராஜாவின் இசைவாகனத்தில் ஏறினால் கண் சிமிட்டும் நேரத்தில், காத தூரம் காலவெளியில் போகலாமே...அதில் மதுரை சென்னை தூரமெல்லாம் ஒரு தூரமா? எனவே ஒரே நொடியில், கோயம்பேட்டிலிருந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் முப்பதாண்டுகள் எம்பிக் குதித்தேன்...பிச்சிப் பூ நெடியில் வழிந்தோடியது அந்த நொடி...