Showing posts with label என் கண்மணி என் காதலி. Show all posts
Showing posts with label என் கண்மணி என் காதலி. Show all posts

Saturday, March 24, 2012

13. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 3

இப்போது போல் நேரத்தை தின்னும் நெரிசல்கள் இல்லாத ஞாயிற்று கிழமைகள் எழுபதுகளில்  இருந்தது. அந்த வருடங்களில் சிறுவன் சிறுமியாக இருந்தவர்கள் சில வரங்கள் பெற்றிருந்தார்கள். அப்படித்தான் நானும்...

எங்கள் வீட்டிற்கு சின்னத்தம்பி என்னும் ஒருவர் iron செய்ய வருவார். Ramesh ratnayake (தலையில் வெள்ளை band கட்டிக்கொண்டு medium pace போடும் இவரை ஞாபகம் இருக்கிறதா?) மற்றும் Arjuna ranatunga இருவரையும் ஏதோ ஒரு வகையில் கலவை செய்தால் இவரின் உருவம் கிடைக்கும். நீங்கள் அறிந்திராத சின்னத்தம்பியை உங்களுக்கு சற்றேனும் அறிமுகம் செய்தாயிற்று. பெரும்பாலும் ஞாயிற்று கிழமை மதியம் எங்கள் வீட்டின் உயர்ந்த வாசல் படிக்கட்டுகளின் அருகில் iron வண்டியை நிறுத்தி முதலில் கரி போடத் துவங்குவார். ஞாயிறு மதியம் தெருவில் ஒரு ஈ குளுவான் கூட இருக்காது.
பருவ காலம் பொறுத்து அனல் காற்றோ மாலை மழை வருவதற்கு முந்தைய வாசனையை நம் மூக்குக்கு அறிமுகப்படுத்தும் மழை காற்றோ வீசும்.
சிலோன் ரேடியோவில் "டாப் 10", "பாட்டுக்கு பாட்டு", "பட வசனம்" [திரைப்படம் முழுதும் வானொலியில் வரும்] என வரிசையாக நிகழ்ச்சிகள்.
இதில் பெரும்பாலும் சின்னத்தம்பி iron செய்கையில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் பால், bottle இல் தான் வரும். மதியம் காபிக்கு வீடு தயாராகும் போது திறக்கப்படும் பாட்டிலின் silver paper மூடியில் வெண்ணை போன்ற ஆடை ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாக்கிற்கு கொடுத்தபடி அவர் iron  செய்வதை பார்ப்பது என் பழக்கம்.
அவர் iron செய்து முடித்தபின் என்னை iron வண்டியில் உட்கார வைத்து ஒரு "ரவுண்டு" கூட்டிப் போய் வருவார். அதற்காகவே வாசலில் காத்துக் கிடந்த ஞாயிற்று கிழமைகள் பல.
இவ்வாறு "ரவுண்டு" போகும் பொழுது   சொல்லி வைத்தது போல் பெரும்பாலும் ஒலிப்பது "சிட்டுக்குருவி" படத்தில் வரும் "என் கண்மணி" பாடல். அதிலும் குறிப்பாக "தேனாம்பேட்டை super market இறங்கு" என்றவுடன் நான் iron வண்டியிலிருந்து குதிப்பதும் வழக்கமாகி போனது. சில சமயம் "என் கண்மணி" இல்லாமல் "உன்ன நம்பி நெத்தியிலே" ஒலிப்பரப்பாகும் பொழுது அந்த ஞாயிறே வீணானது போல் தோன்றும். இன்று வரை, "என் கண்மணி என் காதலி" எங்கு ஒலித்தாலும் அல்லது தேனாம்பேட்டை சிக்னலை எப்போது கடந்தாலும்  அந்த ஞாயிற்று கிழமைகள் நினைவின் செல்களில் பொங்கி அடங்கும். சின்னத்தம்பி முப்பது வருடங்களுக்கு முன் iron செய்த வெள்ளை கலர் பூ design சட்டை ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

இந்த பாடல், multi track வசதிகள் இல்லாத காலத்தில் இளையராஜாவால் எப்படி சாத்தியப்பட்டது என்பது புதிர். பல்லவியில் மட்டும் "கப்பாஸ்" வித்தியாசமாக வந்து போகும். கப்பாசை வெவ்வேறு தொனிகளில் கையாள்வதிலும் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.  "என் கண்மணி" வந்த பின், அதற்கு சற்றே பிந்தைய கால கட்டத்தில் மற்றுமொரு பாடல் பெரும்பாலும் ஞாயிறு மதியங்களை நினைவூட்டும் - தர்மயுத்தத்தில் வரும் "ஆகாய கங்கை". இது என் அக்காக்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அவர்களின் "frock"ஐ  பிடித்து இழுத்துக்கொண்டே நான் அவர்களுடன் வீடு முழுதும் ஓடித்திரிந்த ஞாயிறுகளில் மனதில் பதிவான பாடல் இது.  "கமக்கம்" என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் Janaki தரும் ஏற்ற இறக்கத்தை ரசித்தால் போதும். இந்த பாடலை முழுவதும் இயக்குவது கப்பாஸ். இந்த பாடலின் highlight இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் வயலினும் அதற்கு மேல் "உருளும்" கப்பாசும். மகிழ்ச்சியின் தளத்தில் சென்று கொண்டிருக்கும் பாடல் இந்த பத்தே நொடிகளில் ஒரு "haunting" ஏற்படுத்தி "nostalgia" [நினைவின் பின்னூட்டம் என்றால் இன்னும் பொருத்தம்] சவாரி போகச்செய்து விடும். பாடலின் வேக மாறுதல்களுக்கு ஏற்ப கப்பாஸ் இடைவெளி கூடிக்குறைவது இப்பாடலின் மற்றொரு speciality. "சீதா(ப்?) புகழ் ராமன்" என்பதை நாம் எத்தனை  விதமான பொருளில் அர்த்தம் செய்து கொள்ளலாம்? இந்த வரி இது போன்ற ஆழமற்ற வரிகள் கொண்ட காதல் பாடலில் waste செய்யப்பட்டிருக்க வேண்டாம்...

"teynampettai signal" விளையாட்டு முடிந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற என் திருமணதிற்கு சின்னத்தம்பி வந்திருந்தார் - ஒரு customs officer ஆக வளர்ந்து. அந்த பரபரப்பான தினத்திலும் அவர் என் கைகுலுக்கி வாழ்த்த அருகில் வந்த பொது எங்கள் இருவர் மனத்திலும் ஒரே நொடியில் பற்றி கொண்டு இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த முதல் வார்த்தை "என் கண்மணி" பாடல்தான். எங்கோ இருக்கும் எவரோ இருவரின் நினைவுகளின் வடம் கால் நூற்றாண்டு காலமாக கட்டியிழுத்துச் செல்லும் தேர் எது?


இப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பது போன்ற நாட்களின் நினைவுகளில்  மூழ்கித் திளைக்கும் அனைவரின் பார்வையிலும் பத்தாண்டுகளுக்கு முன் வந்த சேரனின் "பாண்டவர் பூமி"  கட்டாயம் பட்டிருக்கும். இதில் ராஜ்கிரண் தன் பிறந்த ஊருக்குப் போவதாக படத்தில் வரும் 15 நிமிடங்கள் நம் தொண்டைக்குள் உருண்டை ஒன்று திரள்வதை நம்மால் தவிர்க்க இயலாது. இப்போதும் எந்த சேனலில் எப்போது "பாண்டவர் பூமி" போடப்பட்டாலும் அந்த 15 நிமிடங்கள் நான் பார்பதுண்டு. நம் வருடங்களை நாம் மீண்டும் மீண்டும் குடிக்க உதவுகிறது அந்த 15 நிமிடங்கள்.

எங்கள் வீட்டில் கேட்கப்பட்டதை போல் இந்த பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் நூற்றுக்கணக்கான ஞாயிறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களில் பலர் இன்று வெவ்வேறு இடங்களில் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்திருக்கக்கூடும். அத்தகைய அனைவரின் அணைத்து விதமான செல்வங்களையும் சேர்த்து ஈடாக வைப்பினும் அந்த ஞாயிறு மதியங்களை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?