Thursday, February 23, 2012

11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1

இளையராஜாவின் பாடல்களை கேட்பது எப்படி? வாழ்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும். நினைவின் இழைகளில் காலம் மீட்டும் ஸ்வரம் இசையா? வாழ்வா? இசைவான வாழ்வா? இத்தகைய இழைகளைப் பிடித்து பயணம் போகப் பழகுவதற்கே வருடங்கள் பல தேவைப்படுகிறது.
இப்பயிற்சியில் ஏற்படும் பரிமாணங்களின் அடர்த்தியும் பன்முகத்தன்மையும் இளையராஜாவின் பாடல்களில் நினைவாக பதிவாகிறதோ அல்லது பாடல்களின் பரிமாணங்கள் நிகழ்வில் உராய்ந்து நம் நினைவாக பதிவாகிறதோ...!  . உராய்தல் (friction)  இயற்பியலின் கூறு என்றால், நினைவுகள் உராயும் இசையின்  கூறே இளையராஜாவின் இயற்பியல் எனலாம் ...

நினைத்தாற்போல் கேட்டு விட்டு போவது என்பது இளையராஜாவின் பாடல்களில் முடியாது. ஒரே ஒரு நொடி வந்து போகும் குழலின் ஒலி  கூட அது கேட்கப்பட்ட காலத்தை சுமந்து கொண்டு வருடக்கணக்கில் உலா போகும். ஒரு மரத்தை தச்சன் இழைப்பதை போல அந்த நொடியை மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு, ஸ்வரத்தில் அதை தேய்த்து தேய்த்து... போகப்போக நினைவா ஸ்வரமா என்ற வித்தியாசம் மறந்து  அந்த நொடியிலேயே நனைந்து ஒரு ஏதுமற்ற நிலையை ஏற்படுத்தும் இயலை இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

நாம் படித்த இயற்பியல் அதிகபட்சம் மூன்று பரிமாணங்கள்  அடிப்படையிலானது. வாழ்க்கையோ காலத்தின் பரிமாணங்கள் அடிப்படையிலானது. அந்த பரிமாணங்களை நம் ஞாபக அறையின் நீள அகலத்தில் தேக்கி வைப்பதற்கு தோதான ஒலியலைகளை நமக்கேற்ற ஸ்வரத்தில் நமக்கேற்ற தளத்தில் நமக்கேற்ற விசையாக இசைப்பது இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

ஒரு ஒலிக்கற்றையால் நம் நரம்புகளை நீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் செயலின் வரம்புகளை சீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் நினைவின் விதைகளை தூவி விட முடியும். சில ஒலிக்கற்றைகள் தூக்கம் தரலாம். சில ஏக்கம் தரலாம். ஞாபக வீக்கம் தருபவை சில... துயரம் நீக்கும் மருந்தாய் சில... இப்படி நம் மனக்குடுவை முழுதும் முட்டி மோதும் ஒலிக்கற்றைகள் பாய்ச்சும் அனுபவ ஒளி wave nature அல்ல particle nature அல்ல. இது Einstein பார்த்திராத, விஞ்ஞான தர்க்கங்கள் மீறிய, இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

இயக்கங்களை விளக்குவது இயற்பியல் என்றால்,  மனதின் இயக்கங்களை மயிலிறகால் துலக்குவது இளையராஜாவின் இயற்பியல் எனலாம். காலத்தின் பிணக்குகளை ஸ்வரங்களின் கணக்குகளுக்குள் கட்டிப்போடும் சூத்திரம் இளையராஜாவின் இயற்பியலில் அடிப்படை விதி எனலாம்...

நம் புலன்களுக்கு நலம் பயக்கும் இந்த விதிகளின் விரல்கள் ஐந்து. இவை முறையே வயலின், புல்லாங்குழல், கிடார், வீணை மற்றும் கப்பாஸ். இவ்விரல்கள் தாங்கும் கரங்கள் இரண்டு - தபேலா மற்றும் triplet. விஞ்ஞான உடம்பு நடமாட இயற்பியல் விதி இருத்தல் போல நம் மெய்ஞான உடம்பை புடம் போட இந்த இளையராஜாவின் இயற்பியல் விதியின் விரல்கள் கருவியாகும்...இக்கருவியின் வழியே கசியும் காலத்தை செவிக்குள் ஊற்றி, உடலை உற்சாகப்படுத்தும் செந்நீர் போல் மனதை மகிழ்வூட்டும் நன்னீராய் உயிரெங்கும் ஓடும் ஸ்ருதியாய் படரும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...

அவற்றை "இளையராஜாவின் இயற்பியல்" [ Physics of Ilayaraja ] என்னும் பகுதிகளில் அனுபவிக்க முயல்வோம்...

Friday, February 10, 2012

10. கமலம் டீச்சர் - 2 / "தீண்டாய்..." / ஹம்பி [ Hampi ]

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், தமிழ் செய்யுட்களை மனப்பாடம் செய்யச்  சொல்லாமல் அந்த வயதுக்கு தகுந்த அர்த்தங்களை புரிய வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் செய்யுள் பகுதியில் இருந்த ஒரு சங்க இலக்கிய பாடலை, தான் நடத்தப் போவதில்லை என்றும் அப்படியே மனனம் செய்து எழுதி விடும்படியும் சொல்லியது அதிசயமாக இருந்தது. "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... " என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியிலும் ஒரு வார்த்தை கூட புரியாததால் ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று இந்த பாட்டின் அர்த்தம் புரியவில்லை என்றேன். கடைசி வரிசையில் இருந்து சில சிரிப்பொலியும் கேட்டது (அவர்களுக்கு அப்போதே சில அரை குறை அர்த்தம் தெரிந்திருந்தது போலும்). அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், "hey boys" என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) "Syllabus போடுபவர்களுக்குத்தான் அறிவில்லை உங்களுக்கு என்ன?" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப்  பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே "Motel" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற "Motel" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற? comedy  போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள்?... ) . அப்படிப்பட்ட கடையிலிருந்து அந்த மார்கழி காலையில், ரசனை குறைவான இழுவையுடன் "கன்றும் உண்ணாது..." என்று  துவங்கியது ஓரளவு நல்ல பாடலான "தீண்டாய் மெய் தீண்டாய்...". முதல் கேட்பிலேயே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்து போகும் இந்த பாடலில் "ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ" , "பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்" என்ற இரண்டு வரிகள் தேறும். இப்பாடலுக்குப்பின் வேடசந்தூர் - மதுரை இடையிலான தூரம் 7 வருடங்கள் ஆனதில் ஆச்சரியமில்லை.

Hampi நகரத்தை நமக்கு அறிமுகம் செய்யும்  இப்பாடலில் தோன்றுவதை விட ஹம்பி ஒரு காலக்கண்ணாடி என்பதை பல வருடங்கள் கழித்து hampi சென்ற போது அதன் ஒவ்வொரு துளி மண்ணும், கல்லும், காற்றும் உணர்த்தியது. பல நகரங்கள், காலத்தை விழுங்கி விட்டது போல் மாயை காட்டி மாறுகையில், hampi நகரை  காலம் விழுங்கி விட்டது போல் நூற்றாண்டுகள் அப்படியே உறைந்து நிற்கும் அதிசயம் அங்கு காணலாம். அங்கிருக்கும் கல்லைத்  தொடுகையில் கூட காலம் கையில் ஒட்டி கொள்கிறது போன்ற உணர்வு...நாங்கள் ஹம்பியில் இறங்கியதிலிருந்தே "நீ பார்க்காத அதிசயத்தை காட்டுகிறேன் வா" என்று மழை என் மனதின் விரல் பிடித்து இழுத்து போனது. மௌனித்திருந்த கல்மண்டபங்களின் கூரைகளிலிருந்து வழிந்த மழை நீர் மண்ணில் பரவி ஊரெங்கும் போட்ட நீர் திரவியத்தின் வாசனையில் முக்கியெடுத்த காட்சிகள் அனைத்துமே நமக்கு "கால மூர்ச்சை" உண்டாக்கும் நொடிகள்.  

"தீண்டாய்..." கேட்கும் பொழுதெல்லாம், பொருந்தாத இடத்தில் மாணவர்களை நிறுத்தக்கூடாது ஆசிரியரும் நிற்க கூடாது என்னும் உயரிய கொள்கை கொண்ட கமலம் டீச்சர் ஞாபகம் வரத்தவறுவதில்லை...

Thursday, January 19, 2012

9. கமலம் டீச்சர் - 1

ரெண்டு சுழி மூணு சுழிகளுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்புத் தமிழை சீர் செய்யத் துவங்கியவர் கமலம் டீச்சர். நெற்றி வகிட்டில் குங்குமம் பதித்து மஞ்சள் பூசிய முகத்துடன் புடவையை முழுதாய் போர்த்தி அதன் மறுபுறத்தை இடது கை விரல்களில் பிடித்தபடி வரும் கமலம் டீச்சர் என்னை உளியால் செதுக்கிய வருடங்களில் ஒரு முறை கூட அவர்  வகுப்பறைக்குள் செருப்பணிந்து பார்த்ததில்லை. அறிவின் பலமோ குணமோ - அவர் நடக்கையில் மெட்டியின் சத்தம் பல "rows" வரைக்கும் கேட்கும். சுமார் 5 வருடங்கள் - "பிச்சை புகினும் கற்கை நன்றே" துவங்கி  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" வரை அவர் ஊற்றிய தமிழ், அறிவுக்கு போகும் வழியில் ரத்தத்திலும் ஊறிப்போனது. அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் ஒரு நொடியில் என் ஒரு ஜென்மத்திற்கு தேவையான பாடம் நடத்தியது ஒரு சாட்சி.

அப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்புகளில் தமிழுக்கு சங்கம் மன்றம் தேர்வுகள் உண்டு. அறிவியல், கணக்கு போன்றவற்றை விட தமிழில் அதிக மதிப்பெண் வருவது எனக்கும் வீட்டினருக்கும் விசித்திரமாக இருக்கும். 12 ஆம் வகுப்பு அரையாண்டு முடிந்து, கமலம் டீச்சர் மன்றம் மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளியின் வழக்கமான அரையாண்டு தமிழ் விடைத்தாள்கள் தாங்கி வகுப்பறைக்குள் நுழைந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பது இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கமலம் டீச்சருக்கு  கூடுதலாக ஒரு "அம்மன்" களை வந்து விடும். இப்போது போல் language பாடங்களில் 180, 190 என்றெல்லாம் அப்போது எளிதில் போட மாட்டார்கள். எனது விடைத்தாளை அனைவருக்கும்  முன் தூக்கிப் பிடித்தபடி  நான் 186 வாங்கியிருப்பதாகவும் 2nd paper இல் 96 மதிப்பெண் என்றும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சிலவற்றை வாசித்தும் காட்டி என்னை விடைத்தாள் பெற்று கொள்ள அழைத்தார். அந்த சில நிமிட புகழ்ச்சியில் எனக்கேறிய தலைக்கனத்துடன் அவர் முன் சென்று என் இடக்கையை எனையறியாமல் நீட்ட, ஒரு நொடி என்னையும் இடக்கையையும் மாறி மாறி பார்த்த அவர் விடைத்தாளை வகுப்புக்கு வெளியே வேகமாய் விட்டெறிந்து "போய் எடுத்துக்கோ" என்றார். மாடியிலிருந்த வகுப்பிலிருந்து பறந்து, நடைபாதை தாண்டி கீழே கிரௌண்டில் விழும்படி இருந்த அந்த வேகம் பக்கங்கள் கட்டியிருந்த வெள்ளை நூலை அறுத்து பக்கமெல்லாம் தனித்தனியாக கிடக்க அதை எடுக்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தோம் என்று மனது குறுகிப்போனது. அதன் பின் என்னுடன் அவர் என்றுமே பேசியதில்லை. அன்று பசியில்லை. தவறுக்கும் பசிக்கும் தொடர்புண்டு போலும். இல்லாத பசியை அம்மாவிடம் சொல்லாமல் தட்டுடன் அமர்ந்த பொழுது "ஒளியும் ஒலியும்" இறுதிப் பாட்டு வருவதற்கு சரியாக இருந்தது (நமக்கு பிடித்த பாடல்கள் பெரும்பாலும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் கடைசியாகத்தான் வரும். பாதிப்பாட்டிலேயே "செய்திகள் தொடரும்" slide போட்டு விடுவார்கள்). "kaise kahoon kuch kahna sakoon..." [Ilayaraja / Bhupindar singh / Janaki] என்று துவங்கும் "நண்டு" படத்தின் முழு நீள hindi பாட்டு. "அனைவரின் விதியும் அவரவர்க்குள்; விதியின் விதியோ  அவ்விதிக்குள்" "விதியின் ஸ்வரங்கள் யார் கண்டார்" போன்ற அற்புதமான பொருள் தரும் வரிகள் அடங்கிய இப்பாட்டு [தட்டித் தடுமாறி நான் பாஸ் பண்ணிய hindi இது போன்ற விஷயங்களுக்கு கைகொடுக்கிறது!] "காலச்சலனம்" மிக்கது - கேட்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை தூக்கிகொண்டு போய்விடும். வழக்கமான இளையராஜா 2nd stanza special இந்த பாட்டிலும் உண்டு. ஆண் குரல் ஒரு "flat terrain" இல் பயணித்தாலும் Janaki கொண்டு வரும் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். மாலைப்பொழுதில் பரந்த வெளியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரயிலில் நம்முடன் வரும் பிரமாண்டமான மலைகளுக்கு இடையில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்கள்...அல்லது மரங்கள் மூடிய சாலையில் மழை  பெய்து முடிந்த பின் நடந்து போகையில் கேட்டு பாருங்கள்...

 www.youtube.com/watch?v=yUI1FLexJrY என்ற link போட்ட அந்த புண்ணியவானுக்கு நன்றி.
  
கமலம் டீச்சர் வீசி எறிந்த விடைத்தாள் என் பழைய பெட்டியில் இன்றும் உள்ளது. அன்றைக்குப் பிறகு என்றுமே என் இடக்கை எந்த பொருள் பெறவும் நீண்டதே இல்லை என்பது மட்டுமல்ல... அதன்பின் எப்பொழுதெல்லாம் தலைக்கனத்தின் சாயல் தலை தூக்கும் என்று தோன்றுகிறதோ அதற்கு முன்னரே கமலம் டீச்சர் என் நினைவில் வந்து என்னை குட்டி விட்டு போய் விடுகிறார்.




Tuesday, January 3, 2012

8. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி - 4

கால்கள் தரையில் பாவாமல், நாமே இயக்கி, நாம் நகரும் அனுபவம் நமக்கு பெரும்பாலும் முதல் முறை வாய்ப்பது சைக்கிளில் தான். ஜாதி மத பேதமின்றி உலகமெங்கும் அனைவருமே, தன் உறவுக்கார பையனோ, பக்கத்துக்கு வீட்டு பையனோ முதல் சில நாட்கள் handle bar வளைந்து நாம் சைக்கிளுடன் சாய்கையில் தாங்கிப்பிடிக்கவும் பின்னர் சில நாட்கள் நம்முடன் ஓடிவரவும் அப்பாவின் மேற்பார்வையில் "பாடம்" படித்திருப்போம். 


என் பெரியம்மா ஒருவருக்கு Race course colonyயில்  ஜாகை. நடுவில் ஒரு ground இருக்க நாற்புறமும் இன்றைய "apartment" வகையறாக்களுக்கு முன்னோடியான வடிவத்தில் A,B,C.. "Block"க்குகளாக வீடுகள். Colony வாயிலில் ஒரு பிள்ளையார் கோயில். அதனருகில் ஒரு வாடகை சைக்கிள் கடை (எல்லா கடைகளிலும் ஏன்  துருபிடித்த சில சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அன்று ஒரு புதிர்). ஒரு மணி நேரத்திற்கு 50 paisa வாடகை. ஐந்தாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் முதல் முறை சைக்கிள் ஸ்பரிசம்... திரும்பும்  வளைவுகளில் என் பயிற்சியின்மையை பறைசாற்றும் வகையில் ஒரு பக்கமாய் சரிந்து விழுந்து கொண்டிருக்கும் நொடிகளில் வயிற்றில் ஏற்படும் ஒரு இம்சை... (பயத்தின் சாயல்களுக்கெல்லாம் ஒரே ரேகைதானோ?) சைக்கிள் ஒட்டிப்பார்த்த  பரவசம் அன்றைய நாள் முழுதும் பச்சை மாங்காய் சுவைத்த நாக்கு போல் ஒரு தினுசாக ஒட்டியிருக்கும். அருகிலிருக்கும் reserve line groundல் மாதத்திற்கு சில நாட்கள் திரை கட்டி இரவில் படம் போடுவார்கள். படத்திற்கு முன் பாடல்களும் ஒலிக்கும். குடும்பம் குடும்பமாக மணலில் அமர்ந்து படம் பார்ப்பார்கள். மனதில் சைக்கிள் ஒட்டிய நினைவும் நாளை எப்படி ஓட்ட வேண்டும் என்ற கனவுமாக அந்த மணலில் அமர்ந்திருந்த நாட்களில் சில பாடல்கள் சுவடாய் தேங்கிப் போயின..

"தேவன் தந்த வீணை" ["நான் பாடும் பாடல்"] - SPB, Janaki, Jeyachandran என்று இந்த பாடலுக்கு 3 versions. ஆனால், Jayachandran குரலும், அந்த verionனுக்கு மட்டும் ilayaraja base guitarல் கொடுத்த extra வருடலும் வரியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அந்த வருடலும் ஏறி இறங்குவதுமாய் தோட்டத்தில் வீசும் காற்றில் ஊஞ்சலாடுவது போல் ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் பொழுது (head phone அவசியம் தேவை)...

பரபரப்பான violin தரும் tea குடித்த தெம்புடன் துவங்கும் "பூமாலையே தோள் சேரவா" என்னும் "கீதாஞ்சலி" பாடல் நிறைய பேரின் விருப்பம். இதே கீதாஞ்சலியில் "மலரே பேசு மௌன மொழி" என்னும் பாட்டு ஒரு தபேலா-கப்பாஸ்-வீணை combination ஸ்பெஷல்.  எந்த ஒரு பாடலிலும் ஒரு violin அல்லது flute bit போட்டு அதை நாம் வாழ்நாள் முழுதும் "வாசித்து" கொண்டே இருக்க வைக்கா விட்டால் இளையராஜாவுக்கு தூக்கம் வாராது போலும்! அத்தகைய flute bit இந்த பாட்டிலும் உண்டு.

"சிறிய பறவை" ["அந்த ஒரு நிமிடம்" - வைரமுத்து] வல்லின வார்த்தைகள் வரிசையாய் வந்த பின் "மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்" என்று காதல் பாட்டில் இலக்கணம் புகுத்தி..

அடுத்த நாள் மட்டுமல்ல சைக்கிள் பழகிய நாட்கள் தோறும் அந்த மணலில் கேட்ட இத்தகைய பாடல்கள் சைக்கிளில் தொற்றிக்  கொண்டு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ? காலத்தின் கைக்குழந்தையாய் அதன் பின்னே தவழும் நாட்களில் நம்முடன் வரும் இத்தகைய பாடல்களை தள்ளத்தான் தோன்றுமோ?









Thursday, December 15, 2011

7. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 3

நம் வீட்டுத்  திருமணங்கள் சொந்த ஊரில் நடந்தால் திருமணத்திற்கு வேண்டிய ஏதேனும் பொருளை வீட்டிலேயே வைத்து விட்டு மண்டபத்துக்கு வந்து விடுவது என்பது எழுதப்படாத "மரபு". அந்த மரபை கடைபிடித்து மதுரை தல்லாகுளத்தில் '93 இல் நடந்த  எங்கள் வீட்டுத்  திருமணம் ஒன்றில் வீட்டில் மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக வீட்டிற்கு வரும் வழியில் பார்த்தது தான் வாழ்கையில் கண் முன்னே பார்த்த முதல் "major accident". Railway station அருகில் எனது சைக்கிளின் முன்னே ஒரு பைக் மீது பஸ் மோத... சாலையில் நான் பார்த்த முதல் இரத்தம்...மங்கம்மாள் சத்திரத்தின் அருகில் இருக்கும் CLS Book Shop பக்கத்தில் உள்ள டீ கடையில் சத்தமாக வந்து கொண்டிருந்த "அவளொரு மேனகை என் அபிமான தாரகை" [["நட்சத்திரம்" படத்தில் SPB]  இந்த பாடல் மிதமாக ஆரம்பித்து அருவிக்குள் தலையை திடீரென்று நுழைத்தது போல மூச்சு முட்ட முடியும்], கூடிய கூட்டம், ஆங்காங்கே சிதறிக்கிடந்த உதிரத்துளிகள்... இந்தப் பாட்டில் "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்னும் சிறப்பான வரியும் உண்டு.
அரை மணி நேரத்தில் மீண்டும் கல்யாண மண்டபம் சென்ற பின் அங்கே பார்த்த மகிழ்ச்சி கொப்பளிக்கும் முகங்களும் சற்று முன் பார்த்த உயிருக்கு துடித்த உருவமும் வாழ்கையின் நிரந்தரமின்மையை அறைந்தாற்போல் சொன்னாலும் அது அரைகுறையாய் புரியும் வயது!

 சமீபத்தில் அனைவராலும் உச்சரிக்கப்படும் "முல்லைப் பெரியார்" dam மேல் '93 இல் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் மதகுகள் மேலே இருக்கும் பாலத்தில் அக்கரைக்கு நடந்து போகும் பொழுது சுத்தமான காற்று நுரையீரலை நிரப்ப, பச்சைப் போர்த்திய மலைகள் பார்வையை வருட, சொர்கத்தின் "demo" version போலும் என்று நினைக்க வைத்த முல்லைப் பெரியாரில் என் காலில் முள் குத்த அங்கிருந்த காவலர் "கர்ணன்" என்னை சைக்கிளில் வைத்து மறுகரையில் விட்டது மறக்க முடியாத நினைவு. "கர்ணன்" ஒரு transistor வைத்திருந்தார் [வனச்சரகத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள் தங்கள் தனிமை குறைக்க பலர் பல வழிகள் வைத்திருக்கின்றனர். கர்ணனுக்கு transistor. "ஏதோ நினைவுகள்" [அகல் விளக்கு - Shoba / Jency], "பனி மழை விழும்" ["எனக்காக காத்திரு" - Deepan Chakravarty] ஆகியவை இந்தக் கர்ணன் அந்த சைக்கிள் பயணத்தில் transistor மூலம் எனக்களித்த "முல்லைப் பெரியார் கொடை". இப்படிப்பட்ட பாடல்களை கேட்டுக்கொண்டு இயற்கையில் நம்மை நனைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு என்ன பெயர்? தனிமையில் இனிமை. இன்று, அவசரமான பகல்கள் தரும் ஆயாசமான இரவுகளில், எப்பொழுதேனும் நள்ளிரவுக்கு முன் channel மாற்றுகையில் "ஏதோ நினைவுகள்" சிக்கும். எதிர்பாராமல் சிக்கும் நினைவுகளில் நாம் சிக்குவது எளிதன்றோ!
Benny Cook இந்த Mullai Periyar Dam கட்ட தன் நாட்டிற்குச்  சென்று சொத்தை விற்று வந்து பணம் கொட்டினார் என்கிறது சரித்திரம். இன்று ஒரே நாட்டில் இருக்கும் பக்கத்து பக்கத்து மாநிலங்கள் பேதங்களை தீர்ப்பதற்கு பதில் வளர்ப்பது பக்குவத்தை பீடித்த தரித்திரம். இம்மாதிரி சமயங்களில் Sardar Patel பற்றி படித்தவை ஞாபகம் வருகிறது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுடன் சேர மறுத்த சமஸ்தானங்களை எப்படி வழிக்கு கொண்டு வந்தார்...இவர் போன்றவர்கள் இன்றிருந்தால் முல்லைப் பெரியார் விவகாரம் ஒரு நாள் தாங்குமா?   
   

Wednesday, November 30, 2011

6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2

நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்...மதுரை நகருக்குள் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட "சைக்கிள் குழு" எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோவில் தெருவில் முகாமிட்டிருந்தது. நம்மூர் மக்களுக்கு புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது போலும். அவர்கள் இமயமலையில் சைக்கிள் விட்டவர்கள் என்றும் ராஜஸ்தான்காரர்கள் அங்கிருந்து கண்ணை கட்டி கொண்டு சைக்கிளில் வந்திருக்கிறார்கள் என்றும் இஷ்டத்திற்கு கதை கட்ட, தினமும் மாலை தெருவில் கூட்டம் அம்மும். அக்குழுவின் hero சுமார் 3 வாரங்கள் சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை வித்தைகள் நடக்கும். தெருவின் இருமருங்கிலும் கட்டப்பட்ட கம்பங்களில் ஒளிரும் tube lights, நடுவே மேடை, அதை சுற்றி சுற்றி வரும் cycle hero, தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் பாடல்கள், "காஜிமார் பாய் பத்து, பெருமாள் கோவில் பட்டர் பத்து" என்று இடையிடையே ஒலிக்கும் "உபயம்" பற்றிய அறிவிப்புகள் என்று அந்த வாரங்களின் காட்சி கனவு போல விரிகிறது...

tea stall காரர் டிபன் தருகிறார் ஆர்ய பவன் உணவு தருகிறது என்று தினம் ஒரு செய்தியுடன் அன்றைய மாலை ஆரம்பமாகும். பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்கு சென்று "குழு" என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பதும் அன்றைய வித்தைகள் என்னவென்று கேட்பதும் போக பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். இந்த நாட்களில் மட்டுமே கேட்டு பிறகு எந்த "பொது இடத்திலும்" கேட்கவே வாய்ப்பு வாராமல் போன  பாடல்கள்தான் எத்தனை... "ஸ்ரீதேவி என் வாழ்வில்" ["இளமை கோலங்கள்" கவனிக்க: இளமை காலங்கள் அல்ல], "சங்கீதமே" ["கோவில் புறா"],"காளிதாசன் கண்ணதாசன்" ["சூரக்கோட்டை சிங்கக்குட்டி"] - இதை பிற்பகலில் கிராமத்து பம்பு செட்டில் குளித்துக்கொண்டே  கேட்டுப்பாருங்கள்],"தேனருவியில் நனைந்திடும் மலரோ" ["ஆகாய கங்கை"], "வண்ணம் நீ விரும்பிய வண்ணம்" ["பிரேம பாசம்"]

சிறிது நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமானதாகவும் மயக்கம் போட்டதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் மாலையில் சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு மேடையை சுற்றிகொண்டிருந்தார். "Climax" தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றியெரியும் நெருப்பில் tube lights சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரு நாட்கள் முன்னராகவே இந்த "climax" மூடிற்கு மக்களை கொண்டு வர ஒரே தத்துவ பாடல்களாக ஒலிக்கத்துவங்கியது. இதில் கேட்கத் துவங்கியதுதான் கண்ணதாசனும் TMSசும். அர்த்தம் ஒன்று கூட புரியாவிடிலும் ஒரு வித "heaviness" உண்டாக்கும் அப்பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் தங்கவிட்டு சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.
"மனிதன் நினைப்பதுண்டு", "ஆறு மனமே ஆறு", "சட்டி சுட்டதடா", "உள்ளம் என்பது", "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு", "கால தேவனின் மயக்கம்","எந்தன் பொன்வண்ணமே", "நிலவை பார்த்து" போன்றவை அந்தப்பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்புக்குள் நுழைவதற்கு முன் போடப்பட்ட பாடல் "சிவப்பு விளக்கு எரியுதம்மா" அதன் பின் விளக்குகள் எல்லாம் நெருப்பினால் உடைந்து வெளிச்சமான தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.

இவரின் அடுத்த தலைமுறை இன்று JAVA Code எழுதிக்கொண்டிருக்குமோ?

Monday, November 7, 2011

5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1

பத்தாம் வகுப்பில் சொல்லிக்கொள்ளும்படி மதிப்பெண் வாங்கிவில்லை. இருப்பினும் என் அண்ணன் madurai jansi rani பூங்கா அருகில் உள்ள சைக்கிள் கடையில் 1990ல் ஒரு செவ்வாய் மாலை என்னை கூட்டி சென்று BSA SLR ("white walled tyre" உடன்) வாங்கித்தந்தார் (நீ வாங்கிய மார்க்குக்கு ஒரு டயர் மட்டும்தான் நியாயப்படி தரவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்).  வீட்டினரின் ஏகோபித்த கவலைகளுக்கு நடுவில் வரண்டாவில் ஜம்மென்று வந்து நிறுத்தப்பட்டது சிகப்பு கலர் BSA SLR. சாப்பாடு, தூக்கம், இயற்கை அழைப்பு இந்த மூன்றைத்தவிர வேறு அனைத்தையும் சைக்கிள் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று யோசிக்க வைத்தது புது சைக்கிள் ஆர்வம்.
சைக்கிளும் பாட்டு கேட்கும் பழக்கமும் சேர்ந்து சில வினோதமான அனுபவங்களை நினைவில் இறக்கிய அந்த நாட்கள் சில...


"உதடுகளில் உனது பெயர் ஒட்டி கொண்டது அதை உச்சரிக்கும் பொது உள்ளம் தித்திக்கின்றது கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிச்சென்றது..." [வெட்கம் என்றொரு குணம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிக!] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில்  இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி "தங்க ரங்கன்" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ!] என்று படப்பெயரை கண்டுபிடித்த திருப்தியுடன் வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தும் பொழுது வயிறு வாய்க்கு வந்து விட்டது - பை இல்லை. பிறகு நடந்தது தனிக்கதை. மதுரையின் பெரும்பாலான cassette கடைகளில் இப்படியொரு படமே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். Ceylone ரேடியோவில் தவறு நடக்காது என்ற நம்பிக்கையில் வருடக்கணக்கில் இந்த பாட்டை record செய்யும் முயற்சி தொடர்ந்தது. '79ல் வெளியான இந்த பாடலை '88 ல் முதலில் கேட்டு அதன் பின் சுமார் 15 வருடங்கள் துரத்தி சில வருடங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில்  அலிகான் என்பவரின் "பழைய பாடல்கள் ஆவணக் காப்பகம்" தெரிந்து அதில் பதிவு செய்து ஒரு இரவில் நிதனாமாக கேட்ட போது பாட்டுடன் பதினைந்து வருடங்களும் பெருகி வழிய...இதே போல் "நெருப்பிலே பூத்த மலர்" படத்தின் "எங்கெங்கும் அவள் முகம்",  "பாலூட்டி வளர்த்த கிளி" படத்தின் "நான் பேச வந்தேன்", "கொக்கரக்கோ" படத்தின் "கீதம் சங்கீதம்" "ஆட்டோ ராஜா" படத்தின் "சங்கத்தில் பாடாத" என்று நீளும் கணக்கற்ற பாடல்களை என்னிடம் சேர்த்த BSA SLR க்கு நன்றி. இந்த படத்தின் பெயர்களை எல்லாம் கடைகளில் நெளிந்தபடி கேட்டு அலைந்ததும் cassette வந்த பின் கேட்கும் பொழுது கிடைக்கும் விளக்க இயலாத சந்தோஷமும் தனி.

"padmanabhan" enbhadhu "பேபி"யாகி மரியாதை நிமித்தம் "பேபியப்பா" என்றழைக்கப்பட்ட, எனக்கு கிரிக்கெட் அறிமுகம் செய்த Kapil Dev இன் தீவிர ரசிகரான என் மற்றொரு பெரியப்பா [இவர் டிவி இல்லாத அந்த காலத்தில் எந்த நாட்டில் match நடந்தாலும் ABC, BBC என்று அந்த நாட்டு stationஐ தன் radioவில் பிடித்து விடுவார்]   ஒரு அதிகாலை சர்க்கரை நோயிடம் முழுவதுமாக தோற்ற பொழுது குடும்ப வைத்தியரை அழைத்து வரும்படி என் அப்பா அனுப்ப மாலை முரசு office அருகே செயின் அறுந்து விட்டது. "K,A,D,A,L கடலா காதலா? கடல் shampoo தான் குளிச்சா நல்லாருக்கும்" என்று நாளுக்கு நூறு முறை ஒலிக்கும் அர்த்தமில்லா advertisement முடிந்து காலை 7.30 மணி திருச்சி வானொலியின் முதல் பாட்டாக "மெட்டி ஒலி காற்றோடு" எதிரில் உள்ள டீ கடையில் ஓடிக்கொண்டிருக்க அதில் வரும் "துருதூ துதுதூ.. என்னும் humming, அதை தொடர்ந்து வரும் violin இவற்றுக்கிடையில்  எவ்வளவு போராடியும் செயின் துருப்பிடித்து இருந்ததால் மாட்ட முடியாமல் கிட்டத்தட்ட அழுகை எட்டிப்பார்க்கையில் என் அப்பா  "எண்ணெய் போடுடா" என்று சொல்லி சொல்லி அலுத்து போனது ஞாபகம் வர  அக்கடையில் வடை போட்டுக் கொண்டிருந்த முதியவர் chain போட உதவி செய்து "தம்பி அடிக்கடி எண்ணெய் போடணும்" என்று சொல்லிவிட்டு போக doctor இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டில் நுழைந்த போது எத்தனையோ score கள் சொன்ன அந்த வெள்ளை நிற பாக்கெட் transistor யும் பெரியாப்பவையும் பார்ப்பது அன்றே கடைசி என்று புரிந்தது. அதன் பின் சைக்கிள் செயினுக்கு மட்டுமில்லை எந்த இயந்திரத்தின் பராமரிப்பையும் எளிதில் மறந்ததில்லை. 
இந்த "மெட்டி ஒலி" பாட்டின் ஆரம்பத்தில் ஏன் ரேடியோவில் வருவது போல் noise irukkiradhu? ["தோகை இளமையில்..." பாட்டில் "பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் போட வேண்டும் புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்" வரிகளில் வரும் noise போல]
குறிப்பு: அரிது - இனிது "மிதிவண்டியும் மீளா நினைவும்"பகுதிகளின்  முடிவில்.