Thursday, November 22, 2012

29. இப்படியும் சில புதிய பாடல்கள்...


சமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம்,  a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள்  ஏகப்பட்டவை சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.

அற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌ இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.

என்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த "கூட்டுறவு வங்கி" பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல "பயணங்களில்" பல வருடங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...

நகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது "உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்" [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி "நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்" என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா?

முதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் "beat" அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு சரணங்களையும் இவர் "close" செய்திருக்கும் விதம் நன்று.

இந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் "தினம் தினம் நான்" பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள்! இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை "இறக்கி" வைத்திருக்கின்றன?

நன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, "இரு, இந்த பாட்டையும் கேள்" என்பது போல ஆரம்பித்தது "தினம் தினம் நான்...". இந்த பாட்டின் அற்புதமான கமக்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌ உணர்வு மயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது. உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...


Saturday, November 10, 2012

28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17

தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது "விளக்குத்தூண்" என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.

தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின் குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு,  town hall road போன்ற தெருக்களிலும் சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌ விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.

மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு "ரோந்து" முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.

இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த "சுற்று" விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். "சிட்டி சினிமா" அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் "தாய்மார்களே..." என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த "அழைப்பின்" இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல "set" செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே மீண்டும் "தாய்மார்களே" என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின் உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.

"மெல்ல மெல்ல" என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு "த" அல்லது "ன" அல்லது "ம்" எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!

"வெங்காய வெடி" மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த "மெல்ல மெல்ல" வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு "உறை" பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு..."உலா" போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர். "மெல்ல மெல்ல" பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று  அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...

அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...

நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?

Sunday, October 28, 2012

27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?


இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, "நீதானே என் பொன் வசந்தம்" பாடல்கள் கேட்டாயா?" என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.

எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக சில வாரங்களாக காத்திருந்தேன்... ஏனென்றால், "நீதானே எந்தன் பொன் வசந்தம்" என்னும் "வரி"க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌ வேண்டும்.

சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், "நினைவெல்லாம் நித்யா" நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் "பனி விழும் மலர் வனம்" முடிந்து "நீதானே எந்தன்..." பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் "home work" செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது "முதல் முறை" மற்றும் "சற்று முன்பு" பாடல்களின் வெல்லப்பாகு...

"முதல் முறை பார்த்த ஞாபகம்" பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற "கனமான" வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...

நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.

நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் "எரியும்". அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!

"காற்றை கொஞ்சம்" பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...

இனி சில ஏமாற்றங்கள்:

(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? "இது இளையராஜா பாடல்" என்று இனம் காண வைத்த அந்த "bass guitar" எங்கே தேய்ந்து போனது?

(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் "சாய்ந்து சாய்ந்து" பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே..."தேங்கிப் போன..." [ "சற்று முன்பு" பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.


(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் "எந்தன்" விடுத்து "என்"?
இளைய தமிழ் தலைமுறைக்கு "எந்தன்" என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் "reach" குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?

(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் "நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே...

Friday, October 12, 2012

26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16


கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.

நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? "நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்", "எனக்குள் காவிரி ஓடுகிறது" என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?

எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம் ஸ்ரீரங்க‌ம் ஊரில் நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் "ராகவேந்திர மடம்" கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது "பிடுங்கல்" தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட "பெட்டிக் கடை" ஒன்றில் "கலர்" குடிக்கையில் மனதில் வாசமேற்றத் துவங்கியது "திருச்சி வானொலியில்" பூத்த "தாழம்பூவே வாசம் வீசு" [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].

நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் "பேசும் போது..." மற்றும் "நீரும் போனா..." ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?

அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!


இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.

காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?



Saturday, September 29, 2012

25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15


சமீபத்தில் சிவகாசியில் நிகழ்ந்த கோரமான விபத்தை பற்றிய செய்திகளை படிக்கையில் ஏற்படும் சோகத்துடன் சேர்ந்து, நம் அனைவரின் ஞாபகமும் ஒரு நொடியேனும் நம் சிறுவயது பட்டாசு தாகத்தின் மீது சென்று திரும்பியிருக்கும். தீபாவளி சமயத்தில் மட்டும் முளைக்கும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருந்த (கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) "அணில் பட்டாசு கூட்டுறவு விற்பனை" நிலையத்தில் நான் அடம்பிடித்து வாங்கிய 1983ஆம் ஆண்டுக்கான பட்டாசு முப்பத்தெட்டு ரூபாய் நாற்பது பைசாவிற்கான பில் ஒன்று என்னிடம் இருக்கிறது.

நாற்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் கூட, பை கொள்ளாமல் நிரம்பி வழியும் பட்டாசுகளுடன் வீடு திரும்பிய காலம் அது. தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்பே, அணில் படம் போட்ட விலைப்பட்டியல் ஒன்றை அப்பா வாங்கி வந்து விடுவார். எனது பள்ளிப்புத்தகங்களில் குடியிருக்கும் "அணில்" என்னுடனே பள்ளி சென்று வரும். எந்த பாடம் படிக்கிறேனோ, அந்தப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். நூறு ரூபாயில் துவங்கும் அந்த வருடத்திற்கான பட்டாசு கனவு, தினமும், "காசை கரியாக்காதே" "உபயோகமாக செலவழி" போன்ற பொருளாதார மேம்பாட்டு அறிவுரைகளினால் தேய்ந்து, நாற்பதில் வந்து நிற்கும். கடலில் குளிக்க நினைக்கும் ஒருவன், கப்பில் நீர் பிடித்து கால் கழுவுவது போன்ற வேறுபாடு அது.

இவ்வளவு தான் பட்ஜெட் என்று உறுதியானவுடன், ஆயிரம் வாலாக்கள் அமைதியாக உறங்கி விட, லட்சுமி வெடி போன்ற, "குறைந்த விலை, அதிக சத்தம், நிறைய பேப்பர்" போன்ற "நடுத்தர வர்க்கத்தின் நண்பர்கள்" வகை பட்டாசுகளை "டிக்" செய்து, "எத்தனை" என்ற column கீழ், பத்தில் எழுதத் துவங்கி, இரண்டு வாரங்களில், அது மூன்று , நான்கு என்று மாறி, எங்கோ துவங்கி எங்கோ முடித்தாலும், அந்த சிறிய தொகையிலும், மனதையும் கையையும் நிறைத்தன அன்றைய தீபாவளிகள்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த 1983 தீபாவளி. என் அப்பாவுடன் நான் மேற்சொன்ன "அணில்" கடையில் நின்றிருந்தேன். நன்றாக இருட்டி விட்ட வேளை. லேசான தூறல்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு நாள் கழித்து தீபாவளி. கடையிலிருக்கும் அனைத்தையும் வாங்கி வெடிக்க முடியாதா என்று நினைக்கும் வயது. பட்டாசுகளை நவராத்திரி கொலு பொம்மைகள் போல படிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளின் நடுவே ஒரு பொம்மைபோல ஒரு ரேடியோவும் இருந்தது. "அப்படி இல்லை. தம்பி எவ்வளவு நல்லா..."என்று ஒருவர் சொல்லும், பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் ["அமுதே தமிழே" / Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981] துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"அமுதே தமிழே" பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.

பட்டாசு வாங்கும் பொழுது பிடித்த கோவில் புறாவின் அழகில் பல ஆண்டுகள் வளர்ந்த‌ பின், தஞ்சாவூரிலிருந்து ஒரு பின்னிரவு பேருந்து ஏறி விடியலில் நாலு மணி அளவில் மதுரையில் இறங்கி உள்ளூர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். டீக்கடையில் பாய்லர்கள் முதல் கொதிநீருக்கான தங்கள் தினத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தன. சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  பேருந்து நிலையத்தையே ஒரு சோகக் கரைசலில் முக்கி எடுப்பது போல ஒலித்தது...

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?

Thursday, September 6, 2012

24. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 14


நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?

செந்தில் குமார் அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு "கனம்" தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்  வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...

மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின் வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் MCA இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்து தான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை bus stop அருகில் அவரை போன்ற‌ ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று "நீங்கள் செந்தில் குமார்தானே..." என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம் கூட இல்லாமல் "என்ன குமரன் எப்படி இருக்கீங்க" என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைப்பள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி "விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்". அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும் என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறிய பின்,  அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.

"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?

Saturday, August 25, 2012

23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13


ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, "நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது". எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில்,  தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை "hum" செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions Yesudoss, Swarnalatha, Ilayaraja) - முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று  மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...

சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த "ஊரெல்லாம் உன் பாட்டு".

அந்த இரண்டாம் stanza  துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இது நடந்தது 1993ல்.

இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம் வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் "ஊரெல்லாம் உன் பாட்டு" தொடரும்...