Saturday, April 7, 2012

14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமணத்திற்கு முன் தினம் இரவு திருமண மண்டபத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாக "second show" போகும் வழக்கம் இன்றைய multiplex சூழலில் மழுங்கியிருக்கலாம் (இப்போதெல்லாம் எத்தனை பேர் திருமணத்திற்கு முன் தினமே மண்டபத்திற்கு வருகிறார்கள்?). அவ்வாறு நினைவிலிருக்கும் பல "night show" இரவுகளில் அருமையானது என் முதல் "second show " அனுபவம்.

வடபழனியில் தெரிந்தவர் ஒருவரின் திருமணத்தில் முதல் நாள் விழா முடிந்து, மண்டபத்தில் இரும்பு chair வரிசை குலைந்து ஆங்கங்கே "உலகக் கதை" பேசும் குழுக்கள் வசம் சென்றிருக்க, சுமார் 20 பேர் கொண்ட கூட்டம் மண்டபத்திற்கு அருகிலிருக்கும் AVM தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்த "நல்லவனுக்கு நல்லவன்" செல்லத்  தயாராகிக் கொண்டிருந்தது.
சில நாட்களாக மாமாவின் பின்னாலே "கொடுக்கு" போல சுற்றி கொண்டிருந்த நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, அம்மா அப்பாவின் அனுமதி, தூங்கக்கூடாது, நடுவில் போரடிக்கிறது போகலாம்  என்று சொல்லக்கூடாது,"cone ice" கிடையாது என்ற நீளமான "லிஸ்ட்" அனைத்தின் சம்மதம் பெற்று என் முதல் "second show " அனுபவத்திற்கு அழுது அடம்பிடித்து கிளம்பிய இரவு கடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும் நேற்று போல் நினைவில் இருக்கிறது. serial bulb ஒளிரும் cut out பார்த்துக் கொண்டிருக்கையில் மாமா ஒரு கத்தை டிக்கெட்டுகளுடன் வரிசையிலிருந்து வெளிவந்தார்...அப்பொழுதெல்லாம் a/c என்பதை அறிய நமக்கிருந்த ஒரே இடம் "தியேட்டர்"! screen விலகுவதற்கு முன்பே போடப்பட்ட படத்தின் பாடல்களில் "உன்னைத்தானே..." "சிட்டுக்குச்  செல்ல சிட்டுக்கு" இரண்டுமே முதல் முறையே ஒரு விதமான வசீகரம் கொடுத்தாலும் வருடக்கணக்கில் இந்த பாடலை கேட்கப்போகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. "காடு மலை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் தேனீர் குடிக்கும் விளம்பரம், இந்திரா காந்தி பசுமை புரட்சியை பார்வையிடும் டாகுமெண்டரி இவையெல்லாம் கடந்து ஆரம்பித்த  படம் போரடிக்க, அந்த பாடல்களை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, மீண்டும் வந்தது "உன்னைத்தானே...". இப்பாடல் முழுவதும் நான் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பித் திரும்பி இரண்டு பக்க சுவர்களில் இருந்த "speaker"களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட அற்புதமான இசைக்கோர்வை கொண்டது இந்தப் பாடல். "triplet " மற்றும் தபேலா என்று இரண்டு வகை "base " உள்ள இப்பாடலில் வலது காதுக்குள்  (வலது பக்க ஸ்பீக்கர்)  ஒவ்வொரு வார்த்தைக்கேற்ப அதன் பின்னே தேனை ஊற்றும்   கிடார் அற்புதம்.இடது காது மற்ற அற்புதங்களை உள்வாங்கும். கப்பாஸ் மேலோங்கி ஒலிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.உங்கள் tape recorder வலது பக்க  ஸ்பீக்கர் off செய்தோ அல்லது உங்கள் வலது காது head phone நீக்கியோ கேட்டு பாருங்கள் - guitar இல்லாமல் தபேலா மற்றும் கப்பாஸ் இரண்டின் மூலம் இந்த பாடல் எப்படி இருக்கிறது என்றும் ரசிக்க முடியும். பாட்டில் வரும் பெண் குரல் மஞ்சுளா என்பவருடையது. "இழுத்தால்" என்று இவர் செய்யும் உச்சரிப்பு, பயிற்சி குறைவா, பிழையா என்பதை விட அந்த வரியின் பொருளுக்கேற்ற பாவத்தில் அமைந்திருப்பது போலவே தோன்றும்.

இந்த பாடல் கேட்ட உற்சாகம் வடியும் முன்னரே வந்தது "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"..."காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே; நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே" [வைரமுத்து] என்னும் சிறப்பான வரியை உள்ளடக்கிய இந்த பாட்டின் இறுதியில் repeat ஆகும் பல்லவியின் பின், கடலலை போல எழும்பும் violin  - நம் வயதிற்கேற்ப உணர்ச்சிகளை குவிக்கும் வாய்ப்பு தரும். இந்த இரண்டு பாடல்களுக்குமே ஒரே pattern - அதாவது triplet drum மற்றும் தபேலா base . வார்த்தைகளுக்கு பின் அதன் சாயலிலேயே பின் தொடரும் கிடார். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் triplet மேல் போகும் வயலின் அல்லது வீணை. பாட்டின் நடை நம்முடைய செவியில் நங்கூரமிட உதவும் கப்பாஸ்...வாழ்க்கை முழுதும் ரசிப்பதற்கான 2 பாடல்கள் ready. பாடல் முழுவதும், வரிகளுக்கு பின்னே அதே தொனியில் ஒலிக்கும் கிடாரை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததும் இந்த இரண்டு பாடல்கள்தான். பெரும்பான்மையான ilayaraja பாடல்கள் இந்த guitar "கல்வி" கற்காமல் முழுமையாக ரசித்ததின் திருப்தி தராது.

படம் முடிந்து, ஆளரவமற்ற தெருக்களை அர்த்தசாமத்தில் கடந்து, மண்டபத்தில் நீளமாக விரிக்கப்பட்டிர்க்கும் சிகப்பு ஜமுக்காளங்கள் ஒன்றில் படுத்து காலை விழித்த பொது கண்ணெரிச்சல் என்றால் என்ன என்பதன் முதல் அனுபவமும் கிட்டியது. திருமண விருந்து முடிந்து அருகில் இருந்த என் மாமா வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் சாலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை BBC உறுதி செய்திருந்த நிலையில் நம் ஆகாஷ வாணியும் தூர்தர்ஷனும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தெருக்களிலும் தெரிந்தது.
அன்று மதியத்துக்கு மேல் செய்தி ஊர்ஜிதமாக, எல்லா ரேடியோ அலைவரிசையிலும் shenoi , வீணை என்று சோக கீதம் போட, மூன்று நாட்கள் நகரம் முழுதும் சோகம் மூடிக்கொண்ட நாட்கள். நானோ, முந்தைய இரவு கேட்ட இரண்டு பாடல்களின் பிடியில் இருந்தேன் - மீண்டும் கேட்க ஆவலாய் ரேடியோவை எங்கு திருப்பியும் பாடல் கிடைக்காத ஏமாற்றத்தில்...
இன்று, vadapalani arcot road என்றால், இரண்டு பாடல்களும், இந்திரா காந்தி இறந்த அன்று கூட்டம் கூட்டமாக சாலையில் கூடிய மக்களும் arcot road எங்கும் இறைந்து கிடப்பது போலத்தான் ஞாபகம் வருகிறது....
இந்திரா காந்தி மரண நிகழ்வின் தீவிரமும் அதன் பின்னால் இருந்த தேசத்தின் வலிகளையும் அறியாமல் பாடலுக்காக ரேடியோ திருப்பிய அந்த நாட்களை நினைத்தால் இன்று நகைப்பாக இருக்கிறது. வயதின் அறியாமை, முக்கியத்துவங்களின் மேல் எப்படியெல்லாம் முகமூடி போடுகிறது!


   

Saturday, March 24, 2012

13. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 3

இப்போது போல் நேரத்தை தின்னும் நெரிசல்கள் இல்லாத ஞாயிற்று கிழமைகள் எழுபதுகளில்  இருந்தது. அந்த வருடங்களில் சிறுவன் சிறுமியாக இருந்தவர்கள் சில வரங்கள் பெற்றிருந்தார்கள். அப்படித்தான் நானும்...

எங்கள் வீட்டிற்கு சின்னத்தம்பி என்னும் ஒருவர் iron செய்ய வருவார். Ramesh ratnayake (தலையில் வெள்ளை band கட்டிக்கொண்டு medium pace போடும் இவரை ஞாபகம் இருக்கிறதா?) மற்றும் Arjuna ranatunga இருவரையும் ஏதோ ஒரு வகையில் கலவை செய்தால் இவரின் உருவம் கிடைக்கும். நீங்கள் அறிந்திராத சின்னத்தம்பியை உங்களுக்கு சற்றேனும் அறிமுகம் செய்தாயிற்று. பெரும்பாலும் ஞாயிற்று கிழமை மதியம் எங்கள் வீட்டின் உயர்ந்த வாசல் படிக்கட்டுகளின் அருகில் iron வண்டியை நிறுத்தி முதலில் கரி போடத் துவங்குவார். ஞாயிறு மதியம் தெருவில் ஒரு ஈ குளுவான் கூட இருக்காது.
பருவ காலம் பொறுத்து அனல் காற்றோ மாலை மழை வருவதற்கு முந்தைய வாசனையை நம் மூக்குக்கு அறிமுகப்படுத்தும் மழை காற்றோ வீசும்.
சிலோன் ரேடியோவில் "டாப் 10", "பாட்டுக்கு பாட்டு", "பட வசனம்" [திரைப்படம் முழுதும் வானொலியில் வரும்] என வரிசையாக நிகழ்ச்சிகள்.
இதில் பெரும்பாலும் சின்னத்தம்பி iron செய்கையில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் பால், bottle இல் தான் வரும். மதியம் காபிக்கு வீடு தயாராகும் போது திறக்கப்படும் பாட்டிலின் silver paper மூடியில் வெண்ணை போன்ற ஆடை ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாக்கிற்கு கொடுத்தபடி அவர் iron  செய்வதை பார்ப்பது என் பழக்கம்.
அவர் iron செய்து முடித்தபின் என்னை iron வண்டியில் உட்கார வைத்து ஒரு "ரவுண்டு" கூட்டிப் போய் வருவார். அதற்காகவே வாசலில் காத்துக் கிடந்த ஞாயிற்று கிழமைகள் பல.
இவ்வாறு "ரவுண்டு" போகும் பொழுது   சொல்லி வைத்தது போல் பெரும்பாலும் ஒலிப்பது "சிட்டுக்குருவி" படத்தில் வரும் "என் கண்மணி" பாடல். அதிலும் குறிப்பாக "தேனாம்பேட்டை super market இறங்கு" என்றவுடன் நான் iron வண்டியிலிருந்து குதிப்பதும் வழக்கமாகி போனது. சில சமயம் "என் கண்மணி" இல்லாமல் "உன்ன நம்பி நெத்தியிலே" ஒலிப்பரப்பாகும் பொழுது அந்த ஞாயிறே வீணானது போல் தோன்றும். இன்று வரை, "என் கண்மணி என் காதலி" எங்கு ஒலித்தாலும் அல்லது தேனாம்பேட்டை சிக்னலை எப்போது கடந்தாலும்  அந்த ஞாயிற்று கிழமைகள் நினைவின் செல்களில் பொங்கி அடங்கும். சின்னத்தம்பி முப்பது வருடங்களுக்கு முன் iron செய்த வெள்ளை கலர் பூ design சட்டை ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

இந்த பாடல், multi track வசதிகள் இல்லாத காலத்தில் இளையராஜாவால் எப்படி சாத்தியப்பட்டது என்பது புதிர். பல்லவியில் மட்டும் "கப்பாஸ்" வித்தியாசமாக வந்து போகும். கப்பாசை வெவ்வேறு தொனிகளில் கையாள்வதிலும் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.  "என் கண்மணி" வந்த பின், அதற்கு சற்றே பிந்தைய கால கட்டத்தில் மற்றுமொரு பாடல் பெரும்பாலும் ஞாயிறு மதியங்களை நினைவூட்டும் - தர்மயுத்தத்தில் வரும் "ஆகாய கங்கை". இது என் அக்காக்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அவர்களின் "frock"ஐ  பிடித்து இழுத்துக்கொண்டே நான் அவர்களுடன் வீடு முழுதும் ஓடித்திரிந்த ஞாயிறுகளில் மனதில் பதிவான பாடல் இது.  "கமக்கம்" என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் Janaki தரும் ஏற்ற இறக்கத்தை ரசித்தால் போதும். இந்த பாடலை முழுவதும் இயக்குவது கப்பாஸ். இந்த பாடலின் highlight இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் வயலினும் அதற்கு மேல் "உருளும்" கப்பாசும். மகிழ்ச்சியின் தளத்தில் சென்று கொண்டிருக்கும் பாடல் இந்த பத்தே நொடிகளில் ஒரு "haunting" ஏற்படுத்தி "nostalgia" [நினைவின் பின்னூட்டம் என்றால் இன்னும் பொருத்தம்] சவாரி போகச்செய்து விடும். பாடலின் வேக மாறுதல்களுக்கு ஏற்ப கப்பாஸ் இடைவெளி கூடிக்குறைவது இப்பாடலின் மற்றொரு speciality. "சீதா(ப்?) புகழ் ராமன்" என்பதை நாம் எத்தனை  விதமான பொருளில் அர்த்தம் செய்து கொள்ளலாம்? இந்த வரி இது போன்ற ஆழமற்ற வரிகள் கொண்ட காதல் பாடலில் waste செய்யப்பட்டிருக்க வேண்டாம்...

"teynampettai signal" விளையாட்டு முடிந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற என் திருமணதிற்கு சின்னத்தம்பி வந்திருந்தார் - ஒரு customs officer ஆக வளர்ந்து. அந்த பரபரப்பான தினத்திலும் அவர் என் கைகுலுக்கி வாழ்த்த அருகில் வந்த பொது எங்கள் இருவர் மனத்திலும் ஒரே நொடியில் பற்றி கொண்டு இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த முதல் வார்த்தை "என் கண்மணி" பாடல்தான். எங்கோ இருக்கும் எவரோ இருவரின் நினைவுகளின் வடம் கால் நூற்றாண்டு காலமாக கட்டியிழுத்துச் செல்லும் தேர் எது?


இப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பது போன்ற நாட்களின் நினைவுகளில்  மூழ்கித் திளைக்கும் அனைவரின் பார்வையிலும் பத்தாண்டுகளுக்கு முன் வந்த சேரனின் "பாண்டவர் பூமி"  கட்டாயம் பட்டிருக்கும். இதில் ராஜ்கிரண் தன் பிறந்த ஊருக்குப் போவதாக படத்தில் வரும் 15 நிமிடங்கள் நம் தொண்டைக்குள் உருண்டை ஒன்று திரள்வதை நம்மால் தவிர்க்க இயலாது. இப்போதும் எந்த சேனலில் எப்போது "பாண்டவர் பூமி" போடப்பட்டாலும் அந்த 15 நிமிடங்கள் நான் பார்பதுண்டு. நம் வருடங்களை நாம் மீண்டும் மீண்டும் குடிக்க உதவுகிறது அந்த 15 நிமிடங்கள்.

எங்கள் வீட்டில் கேட்கப்பட்டதை போல் இந்த பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் நூற்றுக்கணக்கான ஞாயிறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களில் பலர் இன்று வெவ்வேறு இடங்களில் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்திருக்கக்கூடும். அத்தகைய அனைவரின் அணைத்து விதமான செல்வங்களையும் சேர்த்து ஈடாக வைப்பினும் அந்த ஞாயிறு மதியங்களை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?



Saturday, March 10, 2012

12. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 2

முன்னர் சொன்ன இளையராஜாவின் இயற்பியலுக்கான அடிப்படை விதிகளின் தொடர்ச்சியாக, இளையராஜாவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாத "கப்பாஸ்" கருவி அவரின் பெரும்பான்மையான பாடல்களில் நாம் அதனுடன் பயணம் போவதற்கான வழிகாட்டியாக இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.


 "தென்றலே என்னைத்  தொடு" படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த நேரம். இந்த படத்தில் நடித்த பெண்ணின் பெயர் கொண்ட, வீட்டில் அதிபுத்திசாலி என்று கருதப்பட்ட, என் ஒன்று  விட்ட அக்கா 12th standard முடித்து மதுரையிலேயே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்திருந்த தினம் அன்று. காலையில் நான் பள்ளிக்கு கிளம்புகையில் தனது அதிக மதிப்பெண்ணுக்காக எனக்கு ஒரு "5 star" [அப்பொழுது கிடைக்கக்கூடிய அதிகபட்ச treat!] வாங்கித்தருவதாக சொல்லியிருந்தார். "5 star" chocolate சுவையை நாக்குக்கு ஞாபகப்படுத்தியபடி school பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டிற்கருகில் வருகையில் வீட்டின் முன் சற்று கூட்டம். என்னை வீட்டிற்குள்  விடாமல், சில வீடுகள் தள்ளியிருந்த, எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான, "ராஜ[ம்] மாமி" வீட்டிற்கு கொண்டு போய் விட்டார்கள். "ராஜ மாமி" என்றழைக்கப்பட்ட Rajalakshmi மாமி Iyengar நெறிமுறையின் படி எப்பொழுதும் நெற்றியில் வைணவ குறியீட்டுடன் பெயருக்கேற்றபடி ஆஜானுபாகுவாய் இருப்பார். வீட்டிற்கு உடனே போயாக வேண்டும் என்று அடம் பிடித்த என்னை அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்றும் 10 நிமிடம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்றும் சொல்லி ஒருவருடன் அனுப்பி வைத்தார். ஆட்கள் நிரம்பியிருந்த எங்கள் வீட்டின் அரக்கு கலர் சுண்ணாம்பு தரையில் பற்கள் கட்டிபோய் கிடத்தப்பட்டிருந்த அக்கா கொடுத்தது ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அதிர்ச்சி. அன்றிரவு முழுதும் ராஜ மாமி என்னை சாப்பிட வைக்கவும் சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்கள் கையாண்டார். அதிலொன்று அவர்கள் வீட்டிலிருந்த மேல்நோக்கி திறக்கும் Panasonic tape recorder மூலம் பலமுறை போடப்பட்ட "தென்றலே என்னைத்  தொடு" பாடல்கள். அவர்கள் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து எங்கள் வீட்டு பக்கவாட்டு ஜன்னல்கள் தெரியுமென்பதால் அந்த மொட்டைமாடி கைப்பிடி காரைச்  சுவரை, விரல்களால் நோண்டியபடி ராஜ மாமியின் புடவைத் தலைப்புக்குள் பாதி மறைந்த படி, அக்காவிற்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்ற அந்த நாள்...என்னையே அறியாமல் "கப்பாஸ்" ரசிக்க துவங்கிய நாள்  போலும்...


"தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் [1,2]...[ இடைவெளி  ]...[3,4,5] என்ற தாளக்கட்டில் பாடல் முழுதும் "Cymbal" உடன் வரும் கப்பாஸ் இந்த பாட்டையே இன்னொரு தளத்திற்கு கொண்டு போகும்.இந்த பாட்டில்தான் எத்தனை கருவிகளை இழையோட வைத்திருக்கிறார் இளையராஜா! இதை எளிமையாக்கி ரசிக்க உதவுவதும் மேற்சொன்ன கப்பாஸ் தான். ராக சகவாசம் உள்ளவர்கள் இப்பாடல் hamsanandham என்பார்கள். சரணங்களின் பிற்பகுதியில் வரும் higher octave chords அற்புதம் என்பார்கள். பாட்டை மூளைக்கு அனுப்புவதற்கு இது தேவைப்படலாம் ஆனால் மனதை நிரப்ப, பாடலை  அனுபவிக்கத் தெரிந்தால் போதுமே!  ஹம்சானந்தமோ இல்லையோ இந்தப் பாட்டு அம்சமான ஆனந்தம் தான். இரண்டு விதமான base guitar stroke வைத்து பாடல் துவங்கும் போதே இது பல அடுக்கு இசைகோர்வை கொண்ட பாடல் என்று மனது தயாராகும். இப்பாடல் நான்கு இசை அடுக்குகளை கொண்டது. அடித்தளத்தில் இருப்பது guitar தரும் இழைகள். இது அவ்வபொழுது மேலடுக்கில் வந்து பரவசப்படுத்தும் (தேகம், மோகம் போன்ற வார்த்தைகள் முடிவில் கவனியுங்கள்...). இதற்கு மேலே கப்பாஸ். இது, இரு வார்த்தைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியையும்  நிரப்பும் [3,4,5] அழகை என்ன சொல்வது...மூன்றாவது அடுக்கு இளையராஜாவின் வழக்கமான வித்தைகளுக்கு...முதல் சரணத்தில் குழலில் வரும் interlude கேட்டு முடித்தபின் இதையே வயலினிலும் கேட்டால் எப்படியிருக்கும் என்ற நினைப்பை புரிந்து இளையராஜா இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இடத்தில் வயலினில் மாற்றியிருப்பார். நான்காவது அடுக்கு நம்மை வருடி விட - பாடல் முழுதும் ஒரு புறத்தில் ஒலிக்கும் சிறு கோர்வைகள் அதைத்தொடர்ந்து மறுபுறத்தில் வேறு கருவிகள் மூலம் பின்தொடர்கிறது...இப்பாடலில் "ம்" என்று முடியும் இடத்திலெல்லாம் அதற்கு பின் ஒரு மாயம் வைத்திருப்பார் இளையராஜா. 


சில வருடங்களுக்கு முன் ராஜ மாமியை சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சென்று பார்த்த பொழுது,  உடம்பை பல்வேறு நோய்களுக்கு குத்தகைக்கு விட்டு தன் பெயரின் பொலிவை இழந்திருந்தார். பேசி விட்டு கிளம்புகையில் மற்றவர்களை வெளியில் இருக்கும்படி சொன்ன ராஜ மாமி,  என்னைத் தனியே சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்து சட்டென்று உடைந்து அழத்தொடங்கினார். அழுகை விசும்பலாகி என் தலையை வருடி "போயிட்டு வா" என்றார். பெரும்பாலான இறுதி சந்திப்புகளை காலம் சூசகமாக நமக்கு தெரிவித்து விடுகிறது!



Thursday, February 23, 2012

11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1

இளையராஜாவின் பாடல்களை கேட்பது எப்படி? வாழ்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும். நினைவின் இழைகளில் காலம் மீட்டும் ஸ்வரம் இசையா? வாழ்வா? இசைவான வாழ்வா? இத்தகைய இழைகளைப் பிடித்து பயணம் போகப் பழகுவதற்கே வருடங்கள் பல தேவைப்படுகிறது.
இப்பயிற்சியில் ஏற்படும் பரிமாணங்களின் அடர்த்தியும் பன்முகத்தன்மையும் இளையராஜாவின் பாடல்களில் நினைவாக பதிவாகிறதோ அல்லது பாடல்களின் பரிமாணங்கள் நிகழ்வில் உராய்ந்து நம் நினைவாக பதிவாகிறதோ...!  . உராய்தல் (friction)  இயற்பியலின் கூறு என்றால், நினைவுகள் உராயும் இசையின்  கூறே இளையராஜாவின் இயற்பியல் எனலாம் ...

நினைத்தாற்போல் கேட்டு விட்டு போவது என்பது இளையராஜாவின் பாடல்களில் முடியாது. ஒரே ஒரு நொடி வந்து போகும் குழலின் ஒலி  கூட அது கேட்கப்பட்ட காலத்தை சுமந்து கொண்டு வருடக்கணக்கில் உலா போகும். ஒரு மரத்தை தச்சன் இழைப்பதை போல அந்த நொடியை மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு, ஸ்வரத்தில் அதை தேய்த்து தேய்த்து... போகப்போக நினைவா ஸ்வரமா என்ற வித்தியாசம் மறந்து  அந்த நொடியிலேயே நனைந்து ஒரு ஏதுமற்ற நிலையை ஏற்படுத்தும் இயலை இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

நாம் படித்த இயற்பியல் அதிகபட்சம் மூன்று பரிமாணங்கள்  அடிப்படையிலானது. வாழ்க்கையோ காலத்தின் பரிமாணங்கள் அடிப்படையிலானது. அந்த பரிமாணங்களை நம் ஞாபக அறையின் நீள அகலத்தில் தேக்கி வைப்பதற்கு தோதான ஒலியலைகளை நமக்கேற்ற ஸ்வரத்தில் நமக்கேற்ற தளத்தில் நமக்கேற்ற விசையாக இசைப்பது இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

ஒரு ஒலிக்கற்றையால் நம் நரம்புகளை நீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் செயலின் வரம்புகளை சீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் நினைவின் விதைகளை தூவி விட முடியும். சில ஒலிக்கற்றைகள் தூக்கம் தரலாம். சில ஏக்கம் தரலாம். ஞாபக வீக்கம் தருபவை சில... துயரம் நீக்கும் மருந்தாய் சில... இப்படி நம் மனக்குடுவை முழுதும் முட்டி மோதும் ஒலிக்கற்றைகள் பாய்ச்சும் அனுபவ ஒளி wave nature அல்ல particle nature அல்ல. இது Einstein பார்த்திராத, விஞ்ஞான தர்க்கங்கள் மீறிய, இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

இயக்கங்களை விளக்குவது இயற்பியல் என்றால்,  மனதின் இயக்கங்களை மயிலிறகால் துலக்குவது இளையராஜாவின் இயற்பியல் எனலாம். காலத்தின் பிணக்குகளை ஸ்வரங்களின் கணக்குகளுக்குள் கட்டிப்போடும் சூத்திரம் இளையராஜாவின் இயற்பியலில் அடிப்படை விதி எனலாம்...

நம் புலன்களுக்கு நலம் பயக்கும் இந்த விதிகளின் விரல்கள் ஐந்து. இவை முறையே வயலின், புல்லாங்குழல், கிடார், வீணை மற்றும் கப்பாஸ். இவ்விரல்கள் தாங்கும் கரங்கள் இரண்டு - தபேலா மற்றும் triplet. விஞ்ஞான உடம்பு நடமாட இயற்பியல் விதி இருத்தல் போல நம் மெய்ஞான உடம்பை புடம் போட இந்த இளையராஜாவின் இயற்பியல் விதியின் விரல்கள் கருவியாகும்...இக்கருவியின் வழியே கசியும் காலத்தை செவிக்குள் ஊற்றி, உடலை உற்சாகப்படுத்தும் செந்நீர் போல் மனதை மகிழ்வூட்டும் நன்னீராய் உயிரெங்கும் ஓடும் ஸ்ருதியாய் படரும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...

அவற்றை "இளையராஜாவின் இயற்பியல்" [ Physics of Ilayaraja ] என்னும் பகுதிகளில் அனுபவிக்க முயல்வோம்...

Friday, February 10, 2012

10. கமலம் டீச்சர் - 2 / "தீண்டாய்..." / ஹம்பி [ Hampi ]

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், தமிழ் செய்யுட்களை மனப்பாடம் செய்யச்  சொல்லாமல் அந்த வயதுக்கு தகுந்த அர்த்தங்களை புரிய வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் செய்யுள் பகுதியில் இருந்த ஒரு சங்க இலக்கிய பாடலை, தான் நடத்தப் போவதில்லை என்றும் அப்படியே மனனம் செய்து எழுதி விடும்படியும் சொல்லியது அதிசயமாக இருந்தது. "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... " என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியிலும் ஒரு வார்த்தை கூட புரியாததால் ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று இந்த பாட்டின் அர்த்தம் புரியவில்லை என்றேன். கடைசி வரிசையில் இருந்து சில சிரிப்பொலியும் கேட்டது (அவர்களுக்கு அப்போதே சில அரை குறை அர்த்தம் தெரிந்திருந்தது போலும்). அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், "hey boys" என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) "Syllabus போடுபவர்களுக்குத்தான் அறிவில்லை உங்களுக்கு என்ன?" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப்  பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே "Motel" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற "Motel" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற? comedy  போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள்?... ) . அப்படிப்பட்ட கடையிலிருந்து அந்த மார்கழி காலையில், ரசனை குறைவான இழுவையுடன் "கன்றும் உண்ணாது..." என்று  துவங்கியது ஓரளவு நல்ல பாடலான "தீண்டாய் மெய் தீண்டாய்...". முதல் கேட்பிலேயே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்து போகும் இந்த பாடலில் "ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ" , "பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்" என்ற இரண்டு வரிகள் தேறும். இப்பாடலுக்குப்பின் வேடசந்தூர் - மதுரை இடையிலான தூரம் 7 வருடங்கள் ஆனதில் ஆச்சரியமில்லை.

Hampi நகரத்தை நமக்கு அறிமுகம் செய்யும்  இப்பாடலில் தோன்றுவதை விட ஹம்பி ஒரு காலக்கண்ணாடி என்பதை பல வருடங்கள் கழித்து hampi சென்ற போது அதன் ஒவ்வொரு துளி மண்ணும், கல்லும், காற்றும் உணர்த்தியது. பல நகரங்கள், காலத்தை விழுங்கி விட்டது போல் மாயை காட்டி மாறுகையில், hampi நகரை  காலம் விழுங்கி விட்டது போல் நூற்றாண்டுகள் அப்படியே உறைந்து நிற்கும் அதிசயம் அங்கு காணலாம். அங்கிருக்கும் கல்லைத்  தொடுகையில் கூட காலம் கையில் ஒட்டி கொள்கிறது போன்ற உணர்வு...நாங்கள் ஹம்பியில் இறங்கியதிலிருந்தே "நீ பார்க்காத அதிசயத்தை காட்டுகிறேன் வா" என்று மழை என் மனதின் விரல் பிடித்து இழுத்து போனது. மௌனித்திருந்த கல்மண்டபங்களின் கூரைகளிலிருந்து வழிந்த மழை நீர் மண்ணில் பரவி ஊரெங்கும் போட்ட நீர் திரவியத்தின் வாசனையில் முக்கியெடுத்த காட்சிகள் அனைத்துமே நமக்கு "கால மூர்ச்சை" உண்டாக்கும் நொடிகள்.  

"தீண்டாய்..." கேட்கும் பொழுதெல்லாம், பொருந்தாத இடத்தில் மாணவர்களை நிறுத்தக்கூடாது ஆசிரியரும் நிற்க கூடாது என்னும் உயரிய கொள்கை கொண்ட கமலம் டீச்சர் ஞாபகம் வரத்தவறுவதில்லை...

Thursday, January 19, 2012

9. கமலம் டீச்சர் - 1

ரெண்டு சுழி மூணு சுழிகளுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்புத் தமிழை சீர் செய்யத் துவங்கியவர் கமலம் டீச்சர். நெற்றி வகிட்டில் குங்குமம் பதித்து மஞ்சள் பூசிய முகத்துடன் புடவையை முழுதாய் போர்த்தி அதன் மறுபுறத்தை இடது கை விரல்களில் பிடித்தபடி வரும் கமலம் டீச்சர் என்னை உளியால் செதுக்கிய வருடங்களில் ஒரு முறை கூட அவர்  வகுப்பறைக்குள் செருப்பணிந்து பார்த்ததில்லை. அறிவின் பலமோ குணமோ - அவர் நடக்கையில் மெட்டியின் சத்தம் பல "rows" வரைக்கும் கேட்கும். சுமார் 5 வருடங்கள் - "பிச்சை புகினும் கற்கை நன்றே" துவங்கி  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" வரை அவர் ஊற்றிய தமிழ், அறிவுக்கு போகும் வழியில் ரத்தத்திலும் ஊறிப்போனது. அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் ஒரு நொடியில் என் ஒரு ஜென்மத்திற்கு தேவையான பாடம் நடத்தியது ஒரு சாட்சி.

அப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்புகளில் தமிழுக்கு சங்கம் மன்றம் தேர்வுகள் உண்டு. அறிவியல், கணக்கு போன்றவற்றை விட தமிழில் அதிக மதிப்பெண் வருவது எனக்கும் வீட்டினருக்கும் விசித்திரமாக இருக்கும். 12 ஆம் வகுப்பு அரையாண்டு முடிந்து, கமலம் டீச்சர் மன்றம் மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளியின் வழக்கமான அரையாண்டு தமிழ் விடைத்தாள்கள் தாங்கி வகுப்பறைக்குள் நுழைந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பது இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கமலம் டீச்சருக்கு  கூடுதலாக ஒரு "அம்மன்" களை வந்து விடும். இப்போது போல் language பாடங்களில் 180, 190 என்றெல்லாம் அப்போது எளிதில் போட மாட்டார்கள். எனது விடைத்தாளை அனைவருக்கும்  முன் தூக்கிப் பிடித்தபடி  நான் 186 வாங்கியிருப்பதாகவும் 2nd paper இல் 96 மதிப்பெண் என்றும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சிலவற்றை வாசித்தும் காட்டி என்னை விடைத்தாள் பெற்று கொள்ள அழைத்தார். அந்த சில நிமிட புகழ்ச்சியில் எனக்கேறிய தலைக்கனத்துடன் அவர் முன் சென்று என் இடக்கையை எனையறியாமல் நீட்ட, ஒரு நொடி என்னையும் இடக்கையையும் மாறி மாறி பார்த்த அவர் விடைத்தாளை வகுப்புக்கு வெளியே வேகமாய் விட்டெறிந்து "போய் எடுத்துக்கோ" என்றார். மாடியிலிருந்த வகுப்பிலிருந்து பறந்து, நடைபாதை தாண்டி கீழே கிரௌண்டில் விழும்படி இருந்த அந்த வேகம் பக்கங்கள் கட்டியிருந்த வெள்ளை நூலை அறுத்து பக்கமெல்லாம் தனித்தனியாக கிடக்க அதை எடுக்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தோம் என்று மனது குறுகிப்போனது. அதன் பின் என்னுடன் அவர் என்றுமே பேசியதில்லை. அன்று பசியில்லை. தவறுக்கும் பசிக்கும் தொடர்புண்டு போலும். இல்லாத பசியை அம்மாவிடம் சொல்லாமல் தட்டுடன் அமர்ந்த பொழுது "ஒளியும் ஒலியும்" இறுதிப் பாட்டு வருவதற்கு சரியாக இருந்தது (நமக்கு பிடித்த பாடல்கள் பெரும்பாலும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் கடைசியாகத்தான் வரும். பாதிப்பாட்டிலேயே "செய்திகள் தொடரும்" slide போட்டு விடுவார்கள்). "kaise kahoon kuch kahna sakoon..." [Ilayaraja / Bhupindar singh / Janaki] என்று துவங்கும் "நண்டு" படத்தின் முழு நீள hindi பாட்டு. "அனைவரின் விதியும் அவரவர்க்குள்; விதியின் விதியோ  அவ்விதிக்குள்" "விதியின் ஸ்வரங்கள் யார் கண்டார்" போன்ற அற்புதமான பொருள் தரும் வரிகள் அடங்கிய இப்பாட்டு [தட்டித் தடுமாறி நான் பாஸ் பண்ணிய hindi இது போன்ற விஷயங்களுக்கு கைகொடுக்கிறது!] "காலச்சலனம்" மிக்கது - கேட்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை தூக்கிகொண்டு போய்விடும். வழக்கமான இளையராஜா 2nd stanza special இந்த பாட்டிலும் உண்டு. ஆண் குரல் ஒரு "flat terrain" இல் பயணித்தாலும் Janaki கொண்டு வரும் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். மாலைப்பொழுதில் பரந்த வெளியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரயிலில் நம்முடன் வரும் பிரமாண்டமான மலைகளுக்கு இடையில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்கள்...அல்லது மரங்கள் மூடிய சாலையில் மழை  பெய்து முடிந்த பின் நடந்து போகையில் கேட்டு பாருங்கள்...

 www.youtube.com/watch?v=yUI1FLexJrY என்ற link போட்ட அந்த புண்ணியவானுக்கு நன்றி.
  
கமலம் டீச்சர் வீசி எறிந்த விடைத்தாள் என் பழைய பெட்டியில் இன்றும் உள்ளது. அன்றைக்குப் பிறகு என்றுமே என் இடக்கை எந்த பொருள் பெறவும் நீண்டதே இல்லை என்பது மட்டுமல்ல... அதன்பின் எப்பொழுதெல்லாம் தலைக்கனத்தின் சாயல் தலை தூக்கும் என்று தோன்றுகிறதோ அதற்கு முன்னரே கமலம் டீச்சர் என் நினைவில் வந்து என்னை குட்டி விட்டு போய் விடுகிறார்.




Tuesday, January 3, 2012

8. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி - 4

கால்கள் தரையில் பாவாமல், நாமே இயக்கி, நாம் நகரும் அனுபவம் நமக்கு பெரும்பாலும் முதல் முறை வாய்ப்பது சைக்கிளில் தான். ஜாதி மத பேதமின்றி உலகமெங்கும் அனைவருமே, தன் உறவுக்கார பையனோ, பக்கத்துக்கு வீட்டு பையனோ முதல் சில நாட்கள் handle bar வளைந்து நாம் சைக்கிளுடன் சாய்கையில் தாங்கிப்பிடிக்கவும் பின்னர் சில நாட்கள் நம்முடன் ஓடிவரவும் அப்பாவின் மேற்பார்வையில் "பாடம்" படித்திருப்போம். 


என் பெரியம்மா ஒருவருக்கு Race course colonyயில்  ஜாகை. நடுவில் ஒரு ground இருக்க நாற்புறமும் இன்றைய "apartment" வகையறாக்களுக்கு முன்னோடியான வடிவத்தில் A,B,C.. "Block"க்குகளாக வீடுகள். Colony வாயிலில் ஒரு பிள்ளையார் கோயில். அதனருகில் ஒரு வாடகை சைக்கிள் கடை (எல்லா கடைகளிலும் ஏன்  துருபிடித்த சில சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அன்று ஒரு புதிர்). ஒரு மணி நேரத்திற்கு 50 paisa வாடகை. ஐந்தாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் முதல் முறை சைக்கிள் ஸ்பரிசம்... திரும்பும்  வளைவுகளில் என் பயிற்சியின்மையை பறைசாற்றும் வகையில் ஒரு பக்கமாய் சரிந்து விழுந்து கொண்டிருக்கும் நொடிகளில் வயிற்றில் ஏற்படும் ஒரு இம்சை... (பயத்தின் சாயல்களுக்கெல்லாம் ஒரே ரேகைதானோ?) சைக்கிள் ஒட்டிப்பார்த்த  பரவசம் அன்றைய நாள் முழுதும் பச்சை மாங்காய் சுவைத்த நாக்கு போல் ஒரு தினுசாக ஒட்டியிருக்கும். அருகிலிருக்கும் reserve line groundல் மாதத்திற்கு சில நாட்கள் திரை கட்டி இரவில் படம் போடுவார்கள். படத்திற்கு முன் பாடல்களும் ஒலிக்கும். குடும்பம் குடும்பமாக மணலில் அமர்ந்து படம் பார்ப்பார்கள். மனதில் சைக்கிள் ஒட்டிய நினைவும் நாளை எப்படி ஓட்ட வேண்டும் என்ற கனவுமாக அந்த மணலில் அமர்ந்திருந்த நாட்களில் சில பாடல்கள் சுவடாய் தேங்கிப் போயின..

"தேவன் தந்த வீணை" ["நான் பாடும் பாடல்"] - SPB, Janaki, Jeyachandran என்று இந்த பாடலுக்கு 3 versions. ஆனால், Jayachandran குரலும், அந்த verionனுக்கு மட்டும் ilayaraja base guitarல் கொடுத்த extra வருடலும் வரியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அந்த வருடலும் ஏறி இறங்குவதுமாய் தோட்டத்தில் வீசும் காற்றில் ஊஞ்சலாடுவது போல் ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் பொழுது (head phone அவசியம் தேவை)...

பரபரப்பான violin தரும் tea குடித்த தெம்புடன் துவங்கும் "பூமாலையே தோள் சேரவா" என்னும் "கீதாஞ்சலி" பாடல் நிறைய பேரின் விருப்பம். இதே கீதாஞ்சலியில் "மலரே பேசு மௌன மொழி" என்னும் பாட்டு ஒரு தபேலா-கப்பாஸ்-வீணை combination ஸ்பெஷல்.  எந்த ஒரு பாடலிலும் ஒரு violin அல்லது flute bit போட்டு அதை நாம் வாழ்நாள் முழுதும் "வாசித்து" கொண்டே இருக்க வைக்கா விட்டால் இளையராஜாவுக்கு தூக்கம் வாராது போலும்! அத்தகைய flute bit இந்த பாட்டிலும் உண்டு.

"சிறிய பறவை" ["அந்த ஒரு நிமிடம்" - வைரமுத்து] வல்லின வார்த்தைகள் வரிசையாய் வந்த பின் "மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்" என்று காதல் பாட்டில் இலக்கணம் புகுத்தி..

அடுத்த நாள் மட்டுமல்ல சைக்கிள் பழகிய நாட்கள் தோறும் அந்த மணலில் கேட்ட இத்தகைய பாடல்கள் சைக்கிளில் தொற்றிக்  கொண்டு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ? காலத்தின் கைக்குழந்தையாய் அதன் பின்னே தவழும் நாட்களில் நம்முடன் வரும் இத்தகைய பாடல்களை தள்ளத்தான் தோன்றுமோ?