Saturday, March 24, 2012

13. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 3

இப்போது போல் நேரத்தை தின்னும் நெரிசல்கள் இல்லாத ஞாயிற்று கிழமைகள் எழுபதுகளில்  இருந்தது. அந்த வருடங்களில் சிறுவன் சிறுமியாக இருந்தவர்கள் சில வரங்கள் பெற்றிருந்தார்கள். அப்படித்தான் நானும்...

எங்கள் வீட்டிற்கு சின்னத்தம்பி என்னும் ஒருவர் iron செய்ய வருவார். Ramesh ratnayake (தலையில் வெள்ளை band கட்டிக்கொண்டு medium pace போடும் இவரை ஞாபகம் இருக்கிறதா?) மற்றும் Arjuna ranatunga இருவரையும் ஏதோ ஒரு வகையில் கலவை செய்தால் இவரின் உருவம் கிடைக்கும். நீங்கள் அறிந்திராத சின்னத்தம்பியை உங்களுக்கு சற்றேனும் அறிமுகம் செய்தாயிற்று. பெரும்பாலும் ஞாயிற்று கிழமை மதியம் எங்கள் வீட்டின் உயர்ந்த வாசல் படிக்கட்டுகளின் அருகில் iron வண்டியை நிறுத்தி முதலில் கரி போடத் துவங்குவார். ஞாயிறு மதியம் தெருவில் ஒரு ஈ குளுவான் கூட இருக்காது.
பருவ காலம் பொறுத்து அனல் காற்றோ மாலை மழை வருவதற்கு முந்தைய வாசனையை நம் மூக்குக்கு அறிமுகப்படுத்தும் மழை காற்றோ வீசும்.
சிலோன் ரேடியோவில் "டாப் 10", "பாட்டுக்கு பாட்டு", "பட வசனம்" [திரைப்படம் முழுதும் வானொலியில் வரும்] என வரிசையாக நிகழ்ச்சிகள்.
இதில் பெரும்பாலும் சின்னத்தம்பி iron செய்கையில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் பால், bottle இல் தான் வரும். மதியம் காபிக்கு வீடு தயாராகும் போது திறக்கப்படும் பாட்டிலின் silver paper மூடியில் வெண்ணை போன்ற ஆடை ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாக்கிற்கு கொடுத்தபடி அவர் iron  செய்வதை பார்ப்பது என் பழக்கம்.
அவர் iron செய்து முடித்தபின் என்னை iron வண்டியில் உட்கார வைத்து ஒரு "ரவுண்டு" கூட்டிப் போய் வருவார். அதற்காகவே வாசலில் காத்துக் கிடந்த ஞாயிற்று கிழமைகள் பல.
இவ்வாறு "ரவுண்டு" போகும் பொழுது   சொல்லி வைத்தது போல் பெரும்பாலும் ஒலிப்பது "சிட்டுக்குருவி" படத்தில் வரும் "என் கண்மணி" பாடல். அதிலும் குறிப்பாக "தேனாம்பேட்டை super market இறங்கு" என்றவுடன் நான் iron வண்டியிலிருந்து குதிப்பதும் வழக்கமாகி போனது. சில சமயம் "என் கண்மணி" இல்லாமல் "உன்ன நம்பி நெத்தியிலே" ஒலிப்பரப்பாகும் பொழுது அந்த ஞாயிறே வீணானது போல் தோன்றும். இன்று வரை, "என் கண்மணி என் காதலி" எங்கு ஒலித்தாலும் அல்லது தேனாம்பேட்டை சிக்னலை எப்போது கடந்தாலும்  அந்த ஞாயிற்று கிழமைகள் நினைவின் செல்களில் பொங்கி அடங்கும். சின்னத்தம்பி முப்பது வருடங்களுக்கு முன் iron செய்த வெள்ளை கலர் பூ design சட்டை ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

இந்த பாடல், multi track வசதிகள் இல்லாத காலத்தில் இளையராஜாவால் எப்படி சாத்தியப்பட்டது என்பது புதிர். பல்லவியில் மட்டும் "கப்பாஸ்" வித்தியாசமாக வந்து போகும். கப்பாசை வெவ்வேறு தொனிகளில் கையாள்வதிலும் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.  "என் கண்மணி" வந்த பின், அதற்கு சற்றே பிந்தைய கால கட்டத்தில் மற்றுமொரு பாடல் பெரும்பாலும் ஞாயிறு மதியங்களை நினைவூட்டும் - தர்மயுத்தத்தில் வரும் "ஆகாய கங்கை". இது என் அக்காக்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அவர்களின் "frock"ஐ  பிடித்து இழுத்துக்கொண்டே நான் அவர்களுடன் வீடு முழுதும் ஓடித்திரிந்த ஞாயிறுகளில் மனதில் பதிவான பாடல் இது.  "கமக்கம்" என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் Janaki தரும் ஏற்ற இறக்கத்தை ரசித்தால் போதும். இந்த பாடலை முழுவதும் இயக்குவது கப்பாஸ். இந்த பாடலின் highlight இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் வயலினும் அதற்கு மேல் "உருளும்" கப்பாசும். மகிழ்ச்சியின் தளத்தில் சென்று கொண்டிருக்கும் பாடல் இந்த பத்தே நொடிகளில் ஒரு "haunting" ஏற்படுத்தி "nostalgia" [நினைவின் பின்னூட்டம் என்றால் இன்னும் பொருத்தம்] சவாரி போகச்செய்து விடும். பாடலின் வேக மாறுதல்களுக்கு ஏற்ப கப்பாஸ் இடைவெளி கூடிக்குறைவது இப்பாடலின் மற்றொரு speciality. "சீதா(ப்?) புகழ் ராமன்" என்பதை நாம் எத்தனை  விதமான பொருளில் அர்த்தம் செய்து கொள்ளலாம்? இந்த வரி இது போன்ற ஆழமற்ற வரிகள் கொண்ட காதல் பாடலில் waste செய்யப்பட்டிருக்க வேண்டாம்...

"teynampettai signal" விளையாட்டு முடிந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற என் திருமணதிற்கு சின்னத்தம்பி வந்திருந்தார் - ஒரு customs officer ஆக வளர்ந்து. அந்த பரபரப்பான தினத்திலும் அவர் என் கைகுலுக்கி வாழ்த்த அருகில் வந்த பொது எங்கள் இருவர் மனத்திலும் ஒரே நொடியில் பற்றி கொண்டு இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த முதல் வார்த்தை "என் கண்மணி" பாடல்தான். எங்கோ இருக்கும் எவரோ இருவரின் நினைவுகளின் வடம் கால் நூற்றாண்டு காலமாக கட்டியிழுத்துச் செல்லும் தேர் எது?


இப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பது போன்ற நாட்களின் நினைவுகளில்  மூழ்கித் திளைக்கும் அனைவரின் பார்வையிலும் பத்தாண்டுகளுக்கு முன் வந்த சேரனின் "பாண்டவர் பூமி"  கட்டாயம் பட்டிருக்கும். இதில் ராஜ்கிரண் தன் பிறந்த ஊருக்குப் போவதாக படத்தில் வரும் 15 நிமிடங்கள் நம் தொண்டைக்குள் உருண்டை ஒன்று திரள்வதை நம்மால் தவிர்க்க இயலாது. இப்போதும் எந்த சேனலில் எப்போது "பாண்டவர் பூமி" போடப்பட்டாலும் அந்த 15 நிமிடங்கள் நான் பார்பதுண்டு. நம் வருடங்களை நாம் மீண்டும் மீண்டும் குடிக்க உதவுகிறது அந்த 15 நிமிடங்கள்.

எங்கள் வீட்டில் கேட்கப்பட்டதை போல் இந்த பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் நூற்றுக்கணக்கான ஞாயிறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களில் பலர் இன்று வெவ்வேறு இடங்களில் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்திருக்கக்கூடும். அத்தகைய அனைவரின் அணைத்து விதமான செல்வங்களையும் சேர்த்து ஈடாக வைப்பினும் அந்த ஞாயிறு மதியங்களை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?



Saturday, March 10, 2012

12. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 2

முன்னர் சொன்ன இளையராஜாவின் இயற்பியலுக்கான அடிப்படை விதிகளின் தொடர்ச்சியாக, இளையராஜாவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாத "கப்பாஸ்" கருவி அவரின் பெரும்பான்மையான பாடல்களில் நாம் அதனுடன் பயணம் போவதற்கான வழிகாட்டியாக இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.


 "தென்றலே என்னைத்  தொடு" படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த நேரம். இந்த படத்தில் நடித்த பெண்ணின் பெயர் கொண்ட, வீட்டில் அதிபுத்திசாலி என்று கருதப்பட்ட, என் ஒன்று  விட்ட அக்கா 12th standard முடித்து மதுரையிலேயே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்திருந்த தினம் அன்று. காலையில் நான் பள்ளிக்கு கிளம்புகையில் தனது அதிக மதிப்பெண்ணுக்காக எனக்கு ஒரு "5 star" [அப்பொழுது கிடைக்கக்கூடிய அதிகபட்ச treat!] வாங்கித்தருவதாக சொல்லியிருந்தார். "5 star" chocolate சுவையை நாக்குக்கு ஞாபகப்படுத்தியபடி school பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டிற்கருகில் வருகையில் வீட்டின் முன் சற்று கூட்டம். என்னை வீட்டிற்குள்  விடாமல், சில வீடுகள் தள்ளியிருந்த, எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான, "ராஜ[ம்] மாமி" வீட்டிற்கு கொண்டு போய் விட்டார்கள். "ராஜ மாமி" என்றழைக்கப்பட்ட Rajalakshmi மாமி Iyengar நெறிமுறையின் படி எப்பொழுதும் நெற்றியில் வைணவ குறியீட்டுடன் பெயருக்கேற்றபடி ஆஜானுபாகுவாய் இருப்பார். வீட்டிற்கு உடனே போயாக வேண்டும் என்று அடம் பிடித்த என்னை அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்றும் 10 நிமிடம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்றும் சொல்லி ஒருவருடன் அனுப்பி வைத்தார். ஆட்கள் நிரம்பியிருந்த எங்கள் வீட்டின் அரக்கு கலர் சுண்ணாம்பு தரையில் பற்கள் கட்டிபோய் கிடத்தப்பட்டிருந்த அக்கா கொடுத்தது ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அதிர்ச்சி. அன்றிரவு முழுதும் ராஜ மாமி என்னை சாப்பிட வைக்கவும் சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்கள் கையாண்டார். அதிலொன்று அவர்கள் வீட்டிலிருந்த மேல்நோக்கி திறக்கும் Panasonic tape recorder மூலம் பலமுறை போடப்பட்ட "தென்றலே என்னைத்  தொடு" பாடல்கள். அவர்கள் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து எங்கள் வீட்டு பக்கவாட்டு ஜன்னல்கள் தெரியுமென்பதால் அந்த மொட்டைமாடி கைப்பிடி காரைச்  சுவரை, விரல்களால் நோண்டியபடி ராஜ மாமியின் புடவைத் தலைப்புக்குள் பாதி மறைந்த படி, அக்காவிற்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்ற அந்த நாள்...என்னையே அறியாமல் "கப்பாஸ்" ரசிக்க துவங்கிய நாள்  போலும்...


"தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் [1,2]...[ இடைவெளி  ]...[3,4,5] என்ற தாளக்கட்டில் பாடல் முழுதும் "Cymbal" உடன் வரும் கப்பாஸ் இந்த பாட்டையே இன்னொரு தளத்திற்கு கொண்டு போகும்.இந்த பாட்டில்தான் எத்தனை கருவிகளை இழையோட வைத்திருக்கிறார் இளையராஜா! இதை எளிமையாக்கி ரசிக்க உதவுவதும் மேற்சொன்ன கப்பாஸ் தான். ராக சகவாசம் உள்ளவர்கள் இப்பாடல் hamsanandham என்பார்கள். சரணங்களின் பிற்பகுதியில் வரும் higher octave chords அற்புதம் என்பார்கள். பாட்டை மூளைக்கு அனுப்புவதற்கு இது தேவைப்படலாம் ஆனால் மனதை நிரப்ப, பாடலை  அனுபவிக்கத் தெரிந்தால் போதுமே!  ஹம்சானந்தமோ இல்லையோ இந்தப் பாட்டு அம்சமான ஆனந்தம் தான். இரண்டு விதமான base guitar stroke வைத்து பாடல் துவங்கும் போதே இது பல அடுக்கு இசைகோர்வை கொண்ட பாடல் என்று மனது தயாராகும். இப்பாடல் நான்கு இசை அடுக்குகளை கொண்டது. அடித்தளத்தில் இருப்பது guitar தரும் இழைகள். இது அவ்வபொழுது மேலடுக்கில் வந்து பரவசப்படுத்தும் (தேகம், மோகம் போன்ற வார்த்தைகள் முடிவில் கவனியுங்கள்...). இதற்கு மேலே கப்பாஸ். இது, இரு வார்த்தைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியையும்  நிரப்பும் [3,4,5] அழகை என்ன சொல்வது...மூன்றாவது அடுக்கு இளையராஜாவின் வழக்கமான வித்தைகளுக்கு...முதல் சரணத்தில் குழலில் வரும் interlude கேட்டு முடித்தபின் இதையே வயலினிலும் கேட்டால் எப்படியிருக்கும் என்ற நினைப்பை புரிந்து இளையராஜா இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இடத்தில் வயலினில் மாற்றியிருப்பார். நான்காவது அடுக்கு நம்மை வருடி விட - பாடல் முழுதும் ஒரு புறத்தில் ஒலிக்கும் சிறு கோர்வைகள் அதைத்தொடர்ந்து மறுபுறத்தில் வேறு கருவிகள் மூலம் பின்தொடர்கிறது...இப்பாடலில் "ம்" என்று முடியும் இடத்திலெல்லாம் அதற்கு பின் ஒரு மாயம் வைத்திருப்பார் இளையராஜா. 


சில வருடங்களுக்கு முன் ராஜ மாமியை சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சென்று பார்த்த பொழுது,  உடம்பை பல்வேறு நோய்களுக்கு குத்தகைக்கு விட்டு தன் பெயரின் பொலிவை இழந்திருந்தார். பேசி விட்டு கிளம்புகையில் மற்றவர்களை வெளியில் இருக்கும்படி சொன்ன ராஜ மாமி,  என்னைத் தனியே சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்து சட்டென்று உடைந்து அழத்தொடங்கினார். அழுகை விசும்பலாகி என் தலையை வருடி "போயிட்டு வா" என்றார். பெரும்பாலான இறுதி சந்திப்புகளை காலம் சூசகமாக நமக்கு தெரிவித்து விடுகிறது!