Saturday, May 12, 2012

16. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 6

நாம் வசிக்கும் பகுதிகளில் கட்டாயம் ஒரு மாறுபட்ட மனநிலை மனிதரையேனும் நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம்...இவர்களுக்கு, நாமும், நம் தேவைக்கேற்ப ஒளிந்து கொள்ள நமக்கு பயன்படும் சமூகமும் சேர்ந்து "பை..." என்று பெயரும் வைத்திருப்போம். நான் பார்த்த வரையில், ஏதேனும் ஒன்றின் பின்னால் தறிகெட்டு அலையும் நமக்கு பொருந்தும் அளவு, இப்பெயர், மாறுமட்ட மனநிலை மனிதர்களுக்கு பொருந்துவதில்லை என்றே தோன்றுகிறது. இத்தகைய மனிதர் ஒருவர், சுமார் முப்பது வருடங்கள் எங்கள் தெருவில் தெருவே வீடாக குடியிருந்தார். 1970 - 2000 ஆண்டுகளுக்கு இடையில் மதுரை மைய பகுதிகளில் வசித்த எவருக்கும் இவர் அறிமுகம் தேவையில்லை.

வெள்ளை அங்கியும், நீண்ட தாடியுமாக ஆறடிக்கு மேல் ஒடிசலான தேகத்துடன் வளைய வரும் இவர், கிழக்கே விளக்குத்தூண், மேற்கே பெரியார்   பேருந்து நிலையம், வடக்கே நேதாஜி சாலை, தெற்கே வெளி வீதி என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்வார். இவர், ஒரு முறையேனும் எவரிடமும் காசு கேட்டோ பேசியோ பார்த்ததில்லை. சில சமயம் "over coat" அணிந்து கொண்டு டாக்டர் போல நடமாடுவார். பகல்களில் ஊசி வைத்து ஏதேனும் துணியை தைத்து கொண்டும் இரவுகளில் குப்பைகளை குவித்து தீ மூட்டி அதன் நாக்கையே உற்று பார்த்துகொண்டிருப்பதுமாய் கரைந்து கொண்டிருக்கும் இவர் ஜீவன். பள்ளி நாட்களில் இவர் அருகில் செல்லவே பயமாக இருக்கும். இவரை கடக்க வேண்டியிருப்பின் தெருவின் எதிர்புறம் சென்று மீண்டும் வருவது போன்ற செயல்களை சிறுவயதில் செய்திருக்கிறேன். இவரை பற்றி நான் வைத்திருந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கிய அந்த நாளும் வந்தது...

நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த  நேரம்.Ravi Shastri இறங்கி வந்து long on மேல் சிக்ஸ் அடிப்பது போலவும், Kapil Dev இரண்டு கால்களும் அந்தரத்தில் மடங்கியபடிஇடக்கையை (ஒரு கையால் சாமி கும்பிட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு) கழுத்துக்கு கீழ் வைத்து பந்து வீசப்போகும் காட்சி போலவும் இருக்கும் அட்டை போட்ட நோட்டுக்களையே தேடி வாங்குவது என் பழக்கம். நேதாஜி சாலையில் இன்றும் இருக்கும் "insania" கடையே எங்கள் ஆஸ்தான புத்தகக்கடை.அன்றும் நோட்டு வாங்குவதற்காக இன்சானியா முன் நின்றிருந்தேன். இந்தக் கடைக்கு சற்று தள்ளியுள்ள அம்மன் கோவிலில் விழா...கடையின் இடப்பக்கம் உள்ள மூலையில் நம்மவர் சில குப்பைகளை போட்டு எரித்துக்  கொண்டிருந்தார். கடைக்காரர் சிக்ஸர் அடிக்கும் ravi shastriயை தேடிக்கொண்டிருந்தார்..."நான் வாழ வைப்பேன்" [1979 / TMS / கண்ணதாசன் / இளையராஜா] படத்திலிருந்து "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே..." கோவில் குழாய் ஒலிபெருக்கிகளில் கசிந்து கொண்டிருந்தது...மாலை நேர கூட்டம் நடைபாதைகளில் நிரம்பியிருக்க TMS உருகும் இந்த பாட்டில் மொத்தம் 3 stanza.பொட்டல் வெளியில் பொசுக்கும் வெய்யிலில் தனியே நடக்கும் தகிப்பை கொடுக்கும் வயலினும் புல்லாங்குழலும் வரும் ஒவ்வொரு stanza துவக்கமும் இந்த பாட்டின் இளையராஜா special. திடீரென்று பீறிட்டு கிளம்பிய அழுகை ஒலி வந்த திசை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீயை உற்று நோக்கியபடி பெரும் ஓலத்துடன் அழுத நம் நண்பருக்கும் இந்த பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ? ஒரு வேளை "நீ வாடினால் வண்ண பூ பூ வாடுமே" என்பது போல இவரின் தோட்டத்தில்மலர வேண்டிய ஒரு பூ  வாடியதால் இவர் வாழ்வு வாடி விட்டதோ?
"கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை" என்ற ஆதங்கத்தின் உச்சத்தை தான் அவர் தீயிலே எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாரோ? "காலம் வரும் அந்த தெய்வம் வரும் அந்த நாளும் வரும் நல்ல வாழுவும் வரும்" என்று இவர் நம்பியிருந்து, அந்த காலமும் தெய்வமும் கூட்டு சேர்ந்து இவர் வாழ்வின் மீதேறி மிதித்து கூழாக்கி விட்டதோ? 

பாட்டு முடிந்த சில  நொடிகளில் இவர் அழுகை நின்று விட்டது. பார்த்திருந்தவர்களின் மானுடம் உறைந்து போய் கிடக்க  அவர் தன் உடமைகளுடன் நடக்கத் துவங்கினார்...அன்று நள்ளிரவே நான் மொட்டை மாடியிலிருந்து பார்க்கையில் எங்கள் வீட்டருகில் இவர் மீண்டும் தீயை மூட்டியிருந்தார். "தீக்குள் விரலை வைத்தால்..." என்ற வரிக்கு ஆயிரம் அர்த்தங்கள் இல்லையா? வெள்ளைத் தாளில் வரைந்த  சோகச்சித்திரம் போல எங்கள் தெருவில் உலவிய இவர் கசங்கிய காகிதமாய் காலத்துடன் போனார்...

நாம் சாலையை கடக்கும் வேளையிலோ பேருந்து நிலையங்களின் அழுக்கான  மூலையிலோ இவர் போன்ற பலரை பார்க்கிறோம். இவர்கள் இப்படி ஆனதன் ஆதார நொடிகளின் பின்னணி இசை போல ஏதேனும் ஒரு பாடல் இவர்களுக்குள் பதிந்து, அந்த  பாடல் இவர்களின் மூளைக்குள் உலை போல் எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்குமோ? இவர்களை குறிக்க நாம் பயன்படுத்தும் "பை..." வார்த்தையை உபயோகத்திலிருந்து நீக்கலாம் இல்லையா?

பி.கு: 

(i) இளையராஜா இந்த பாடலை, இன்றைய நவீன recording முறைகளை பயன்படுத்தி மெருகூட்டி, பாடல் முழுதும் அடியில் guitar ஒட விட்டு, மது பாலகிருஷ்ணன் போன்ற ஒருவரை பாட வைத்து தன் படத்தில் மீண்டும் வெளியிட்டு "remix" என்றால் இதுதான் என்று நம்மை மகிழ வைப்பாரா?

(ii)இதே படத்தில் வரும் "திருத்தேரில் வரும் சிலையோ" பாடலுக்கு முன் வரும் இசை, சற்றே மாறுப்பட்ட பல்லவி design ஆகிய இரண்டையும் தவற விடாதீர்கள்...

Saturday, April 28, 2012

1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்திறவாய்...

கூட்டுக்குடும்பங்களின் இறுதி அத்தியாயம் துவங்கிய எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த என் போன்ற பலருக்கும் அந்த அத்தியாயத்தின் சில பக்கங்களை அர்த்தம் புரியாமல் புரட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அவ்வாறு புரட்டியது ஒரே வீடு தனி சமையல் என்னும் ஒரு விதமான கூட்டுக்குடும்பத்தின் பக்கங்களை...இது விஷிஷ்டாத்வைதம் போல விசித்திரமான கான்செப்ட். எது எதில் உள்ளது எதில் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவு இருக்காது. ஆனால் ஆனந்தமானது...

சிறியவர்களும் பெரியவர்களுமாய் 13 பேர் நிரம்பியிருந்த வீட்டின் முதன்மை  பொழுது போக்கு, கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்த "desk top monitor" அளவு இருக்கும் பளிங்கு நிற வால்வு ரேடியோ. வயர் கூடை designல் முன் பக்கம் முழுதும் ஓட்டைகளுடன்  on செய்தால் விரல் அளவு உள்ள பச்சை விளக்கு எரிய 10 நொடியும்  சத்தம் வர 10 நொடியும் ஆகும் இதை தொடுவதற்கே எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டன. வீட்டின் பெரியவர்கள் சூடான காபி டம்ளரை நெற்றியில் உருட்டியபடி சரோஜ் நாராயண் சுவாமியை கேட்கும் பொழுது  தலைவலி தருபவை குடும்ப நடப்புகளா உலக நடப்புகளா என்று நமக்கு தெரியாத வயது. "சுழன்றும்  ஏர்பின்னது உலகம்" என்பதை நல்ல மெட்டுடன் பாடும் ஆண்குரல் பின்னர் பாக்டம்பாஸ் 20-20 ஐ எப்படி அதிக மகசூலுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுது திருச்சியில் இருக்கும் knob ஒரு முள் நகர்ந்து இலங்கையில் இறங்கினால் பெரும்பாலும் ஒலிப்பது "பொன் மாலை..." இன்றைய எரிச்சலூட்டும் டாப் 10 போல் அல்லாமல் இயற்கையான ரசனையுடன் [ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ஹப்துல் ஹமீது போன்றோரால்] தொகுத்து வழங்கப்படும் ஞாயிறு டாப் 10 நிகழ்ச்சியில் "பொன் மாலை பொழுது" நான் 1,2,3 வகுப்புகளின் "promoted" போஸ்ட் கார்டு வாங்கி 4 ஆம் வகுப்பு போன பின்பும் முதல் இடத்தில் தொடர்ந்தது. பின்னாளில் கல்லூரி நண்பர்களுடன் ooty 4th mile அருகில் உள்ள pine forestல் "வானம் எனக்கொரு போதி மரம்" கேட்ட நிமிடங்கள் சுஜாதாவின் தலைப்பு போல்  "ஏறக்குறைய சொர்க்கம்". ஆனால்  "விசால பார்வையால் விழுங்கு மக்களை" என்னும் பாரதிதாசன் வரியை ராஜசேகர் தப்பாக புரிந்து கொண்டாரோ என்ற  இன்று வரை எனக்கு சந்தேகம்தான்.
என் சகோதரர் 82-83'ல் டெல்லியிலிருந்து வாங்கி வந்த கெட்டியான கருப்பு உறை போட்ட tape recorder, 87'ல் அப்பா வாங்கிய கிரீம் கலர் national panasonic 2-in-1, 93'ல் மேல மாசி வீதியில் வாங்கிய 16w pmpo philips, 00'ல் domlur modern electricalsல் வாங்கிய 32w pmpo philips '01ல் tokyo akhiabaraவில் வாங்கிய சோனி walkman, '06ல் toronto searsல் வாங்கிய philips mp3 player என அனைத்திலுமே தேடிப்பிடித்து முதலில் கேட்டது பொன் மாலையும் இளைய நிலாவும்தான்.

முழு வீட்டிற்க்கும் சில கதவுகளே பார்த்து பார்த்து பழக்கப்பட்டு, இரண்டு பேருக்கு எதற்கு இதனை கதவுகள் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் முளைத்த குழந்தை வயதில் ஆசிரியையின் கண்டிப்புடன் குழைவும் சேர்ந்து வரும் உமா ரமணனின்   குரல் மெதுவாக மனதில் பதிந்தது "பூங்கதவே"வில்தான் [ இதில் வரும் நாதஸ்வரம் பிறகு புரட்சிக்காரன் என்னும் வறட்சியான படத்தில் "ஒற்றை பார்வையிலே" என்னும் அற்புதமான பாடலில் தவில் base வைத்து பாடல் முழுதும் வருடி விட்டிருந்தார் இளையராஜா]. உமாவின்  பாடல்களை ரசிக்கும் வயது வரும் பொழுது அவர் பாடுவதை நிறுத்தியிருந்தார். பெங்களூர்இல் வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு முறை மதுரை செல்வதற்காக kalasipalyam KPN ல்    அமர்ந்திருந்த பொழுது குப்பைகளுக்கு நடுவில் திடீரென்று "மீட்டாத ஒரு வீணை" என்னும் பாட்டு துவங்க, என்னடா இது இந்த பாட்டை எப்படி விட்டோம் என்று யோசித்து டிரைவரிடம் CD cover கேட்க அவர் ஏற இறங்க பார்த்தபடி கொடுத்தார் - "பூந்தோட்டம்" என்னும் புது படம்! அதற்கு பின் அவரின் குரல் இன்று வரை புதியதாய் வரவில்லை.

நம் ஊர் தொலைகாட்சிகளில் வரும் ராசிக்கல் ஜோசியர்கள் சொல்லும் பலன் போல் இல்லாமல் கீழ்காணும் பாடல்களை ஞாயிறு இரவு நிலவும் அவசரமற்ற அமைதியில் கேட்டால் விசேஷ நிம்மதி கிட்டும்!

அரிது - இனிது - பகுதி 1

பாடல் - படம்

1 . எங்கெங்கோ செல்லும் - பட்டகத்தி பைரவன்
2. பூந்தென்றல் காற்றே - மஞ்சள் நிலா 
3. சிந்து நதிக்கரை - நல்லொதொரு குடும்பம்
4. மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
5. அதிகாலை நேரமே - மீண்டும் ஒரு காதல் கதை







Thursday, April 26, 2012

3. முதல் மழை

முதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். "Gas Stove" இல்லாத நாட்கள் அவை. "Nutan" stove நிரப்ப மண்ணெண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும்  பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் "எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ  கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ்  புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் "நொண்டி யானை"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்]  குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார்  15 வருடம்  என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் "பெரிய யானை"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை "நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும்  தொடர்பு இருக்குமோ?
 . யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் "திருப்புகழ் சபை" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று  உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும்  நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். "பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்" என்று அக்கறையுடன்  திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும் 
tea  கடையில் ஒலித்தது "உறவுகள் தொடர்கதை". இந்த பாட்டு ஓரளவுக்கு  புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் "உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.
"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும்  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. "...வாழ்வென்பதோர்..." என்ற வரியின் முன்னால் வரும்  பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்!

மழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே...  அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில்  மண்டபம் camp கடக்கையில்  ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.
அம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த "தாய் மூகாம்பிகை" - இதில் வரும் "ஜனனி ஜனனி" பாட்டில் வரும்  kollur இடங்களை 
2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த "அலைகள் ஓய்வதில்லை" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் "செந்தாழம்பூவில்"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த "பயணங்கள் முடிவதில்லை", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த "உதய கீதம்" [இவை பற்றி விரிவாக பின்னர்]
இவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.
சமீபத்தில் வந்த "பிச்சைப்பாத்திரம்" பாடலை வெகுவாக ரசித்த அம்மா  பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின்  நம்பிக்கைக்கு  ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து  சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன்  பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "பிச்சைப்பாத்திரம்" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும்  அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் "வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்"  வரியின் வார்ப்பு.

சாதாரண பாடலுக்குள்ளும் "சரக்கு" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:

1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. கண்விழி என்பது - வளையல் சத்தம்
3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்
4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்
5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று


Friday, April 20, 2012

15. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 5

நவராத்திரி தினங்களின் இரவுகளில் பெரும்பாலான ஊர்களில் "மேடைக்  கச்சேரி" ஏற்பாடு செய்யும் வழக்கம் உண்டு. இப்போது   உள்ளது போல் - ஒரு மைதானத்தை பிடித்து, டிவி படம்பிடிக்க, "entry fee" வசூலிக்கும் பகட்டான "weekend" கச்சேரிகள் இல்லை அவை. சாலை மறித்து பந்தல் போட்டு மேடையில் பாடல் கச்சேரி நடக்கும். வழிப்போக்கர்கள் தங்களுக்கு பிடித்த பாடல் என்றால் நின்று கேட்பார்கள். சில பாடல்கள் முடிந்த பின் நகர்ந்து விடுவார்கள். சிலர் மட்டுமே "இருக்கையில்" அமர்ந்து ரசிப்பார்கள்.

நான் மேல்நிலை வகுப்பில் (higher secondary) நுழைந்த இரண்டாம் வருடம், ஒரு நவராத்திரி இரவில், என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று. அங்கு சாலையின் பாதியை அடைத்து போடப்பட்டிருந்த பந்தலில் "பாடல் கச்சேரி" களை கட்டியிருந்தது. traffic நெரிசலில் பேருந்து அகப்பட்டிருக்க, கரகரத்த குரல் கொண்ட அறிவிப்பாளர் விறுவிறுப்பாய் அடுத்த பாடல் பற்றிய "முன்னுரை" விளம்பிக்கொண்டிருந்தார்..."வில்லுப்பாட்டுக்காரன்" படத்தின் "கலைவாணியோ ராணியோ" பாடல்...பாடலின் வசீகரிக்கும் "percussion" செவியில் ஊடுருவ பேருந்திலிருந்து இறங்கி விட்டேன்.  மேடையில் இருந்த வயலின், புல்லாங்குழல், கப்பாஸ் வாசிக்கும் மூவருமே அறுபது வயதை கடந்த தோற்றத்திலிருந்தார்கள். அதிகம் பிரபலமாகாத இந்த பாடலுக்குள்தான் எத்தனை ஆச்சர்யங்கள்! கிட்டத்தட்ட நாம் மறந்து விட்ட ஹார்மோனியம் இந்த பாடலின் பல்லவியின் அடியில் நகரும். இந்த பாடலில் குறிப்பிட்ட நான்கு வரிகளின் முடிவிலும் ஒரு அற்புதம் வைத்திருக்கிறார் இளையராஜா - "வேதங்களும்  நாதங்களும் வேண்டி வந்தது கூட", "வேதனைகளை மாற்றிடும் அவள் விரிந்த சென்பகச்சோலை" , "ஜாடையிலே ஏற்றி விடும் தாகம் என்கிற மோகம்", "ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி" - இந்த வரிகளின் முடிவில் முத்தாய்ப்பாக guitar தரும் அழுத்தமான இரண்டு  strokes !   இந்த இன்பம் நம்மை சரியாக அடைய வேண்டும் என்பது போல் இந்த இடங்களில் மட்டும் தபேலா சற்றே "பின் வாங்கும்"! கப்பாஸ் வாசிப்பவர் இந்த இரண்டு strokes வருகின்ற போதெல்லாம் காட்டிய முகபாவம் இன்றும் நினைவில் பதிந்திருக்கிறது. . மூன்று முதியவர்களும் தங்களுக்குள் இருக்கும் "காதலையும்" பாடல் மீது தங்களுக்கு இருக்கும் "காதலையும்" ஒருவருக்கொருவர் கண்கள் மூலம் பரிமாறிக்கொண்டதும்... இரண்டு சரணங்களுக்கு முன்னும் புல்லாங்குழலும் வயலினும் கிட்டத்தட்ட பேசிக்கொள்ளும் நொடிகளும்...
இந்தப் பாடலுக்கு கால்களும் மனதும் தானாக தாளம் போடாவிட்டால் நம் மானிடத்தன்மையில் ஏதோ குறை என்று பொருள். 

தற்போது நுனி நாக்கால் "பாட்டு (பார்த்து?)  படிக்கும்" பாடகர்கள் இப்பாடலின் "பாதங்களை பார்த்ததுமே பார்வை வரலை மேல" "தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா" என்னும் வரிகளில் SPB  என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கவனிப்பது நல்லது.

இத்தகைய கச்சேரிகளில் சில சமயங்களில் "once more" என்று கூட்டம் சத்தம் போடும். அதை ஏற்று, இசைக்கும் குழு மீண்டும் அதே பாடலை பாடும். "கலைவாணியோ" பாட்டுக்கும் ஒன்ஸ் மோர் நிகழ்ந்தது. எனக்கும் பேருந்தை விட்டு கீழே இறங்கியது வீண்போகவில்லை என்ற மகிழ்ச்சி. மீண்டும் இசைக்கப்பட்ட இந்த பாடலை கண்கொட்டாமல் ரசிக்க முடிந்தது. இசைக்கருவிகள் வாசிக்கும் மனிதர்களின் விரல்களை காலம் தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து பூமிக்கு அனுப்பியிருக்குமோ? இல்லையென்றால் இவர்களின் விரல்கள் தரும் ஸ்வரங்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ முடியுமா?இப்பொழுதெல்லாம் முதல் வகுப்பு படிக்கும் குழந்தை கூட "pocket money" வைத்திருக்கிறது. நம் காலத்திலோ வெளியில் சென்றால் எந்த வேலைக்காக போகிறோமோ அதற்கு தேவைப்படும் பணம் மட்டுமே தருவார்கள். ஏற்கனவே பேருந்துக்கான காசு கழிந்து போனதால் கலைவாணியை நினைத்தபடி வீட்டுக்கு நடந்தே வந்து சேர்ந்தேன். வீடு திரும்பும் நேரம் தப்பியதால் என் அம்மா, தெருவை நோக்கி இருக்கும் எங்கள் வரண்டாவிலிருந்து தலை நீட்டி என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்...பதின்வயதில் பிள்ளைகள் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் ஆயிரம் கவலைகள் அடிவயிற்றில் சுருளும். கலைவாணியை ரசித்ததால் ஏற்பட்ட தாமதம் பற்றி அம்மாவிடம் விளக்கியபோது என்னை கூர்ந்து பார்த்த அம்மாவின் கண்களில், இவன், கவனத்தை சிதறடிக்கும் கலைவாணிகள் ராணிகளிடம் நேரம் வீணடிக்கவில்லை என்ற நம்பிக்கையும் நிம்மதியும் தெரிந்தது. நம்பிக்கைதானே எந்த உணர்வுக்கும் உறவுக்கும் உயிர்நாடி...

Saturday, April 7, 2012

14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமணத்திற்கு முன் தினம் இரவு திருமண மண்டபத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாக "second show" போகும் வழக்கம் இன்றைய multiplex சூழலில் மழுங்கியிருக்கலாம் (இப்போதெல்லாம் எத்தனை பேர் திருமணத்திற்கு முன் தினமே மண்டபத்திற்கு வருகிறார்கள்?). அவ்வாறு நினைவிலிருக்கும் பல "night show" இரவுகளில் அருமையானது என் முதல் "second show " அனுபவம்.

வடபழனியில் தெரிந்தவர் ஒருவரின் திருமணத்தில் முதல் நாள் விழா முடிந்து, மண்டபத்தில் இரும்பு chair வரிசை குலைந்து ஆங்கங்கே "உலகக் கதை" பேசும் குழுக்கள் வசம் சென்றிருக்க, சுமார் 20 பேர் கொண்ட கூட்டம் மண்டபத்திற்கு அருகிலிருக்கும் AVM தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்த "நல்லவனுக்கு நல்லவன்" செல்லத்  தயாராகிக் கொண்டிருந்தது.
சில நாட்களாக மாமாவின் பின்னாலே "கொடுக்கு" போல சுற்றி கொண்டிருந்த நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, அம்மா அப்பாவின் அனுமதி, தூங்கக்கூடாது, நடுவில் போரடிக்கிறது போகலாம்  என்று சொல்லக்கூடாது,"cone ice" கிடையாது என்ற நீளமான "லிஸ்ட்" அனைத்தின் சம்மதம் பெற்று என் முதல் "second show " அனுபவத்திற்கு அழுது அடம்பிடித்து கிளம்பிய இரவு கடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும் நேற்று போல் நினைவில் இருக்கிறது. serial bulb ஒளிரும் cut out பார்த்துக் கொண்டிருக்கையில் மாமா ஒரு கத்தை டிக்கெட்டுகளுடன் வரிசையிலிருந்து வெளிவந்தார்...அப்பொழுதெல்லாம் a/c என்பதை அறிய நமக்கிருந்த ஒரே இடம் "தியேட்டர்"! screen விலகுவதற்கு முன்பே போடப்பட்ட படத்தின் பாடல்களில் "உன்னைத்தானே..." "சிட்டுக்குச்  செல்ல சிட்டுக்கு" இரண்டுமே முதல் முறையே ஒரு விதமான வசீகரம் கொடுத்தாலும் வருடக்கணக்கில் இந்த பாடலை கேட்கப்போகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. "காடு மலை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் தேனீர் குடிக்கும் விளம்பரம், இந்திரா காந்தி பசுமை புரட்சியை பார்வையிடும் டாகுமெண்டரி இவையெல்லாம் கடந்து ஆரம்பித்த  படம் போரடிக்க, அந்த பாடல்களை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, மீண்டும் வந்தது "உன்னைத்தானே...". இப்பாடல் முழுவதும் நான் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பித் திரும்பி இரண்டு பக்க சுவர்களில் இருந்த "speaker"களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட அற்புதமான இசைக்கோர்வை கொண்டது இந்தப் பாடல். "triplet " மற்றும் தபேலா என்று இரண்டு வகை "base " உள்ள இப்பாடலில் வலது காதுக்குள்  (வலது பக்க ஸ்பீக்கர்)  ஒவ்வொரு வார்த்தைக்கேற்ப அதன் பின்னே தேனை ஊற்றும்   கிடார் அற்புதம்.இடது காது மற்ற அற்புதங்களை உள்வாங்கும். கப்பாஸ் மேலோங்கி ஒலிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.உங்கள் tape recorder வலது பக்க  ஸ்பீக்கர் off செய்தோ அல்லது உங்கள் வலது காது head phone நீக்கியோ கேட்டு பாருங்கள் - guitar இல்லாமல் தபேலா மற்றும் கப்பாஸ் இரண்டின் மூலம் இந்த பாடல் எப்படி இருக்கிறது என்றும் ரசிக்க முடியும். பாட்டில் வரும் பெண் குரல் மஞ்சுளா என்பவருடையது. "இழுத்தால்" என்று இவர் செய்யும் உச்சரிப்பு, பயிற்சி குறைவா, பிழையா என்பதை விட அந்த வரியின் பொருளுக்கேற்ற பாவத்தில் அமைந்திருப்பது போலவே தோன்றும்.

இந்த பாடல் கேட்ட உற்சாகம் வடியும் முன்னரே வந்தது "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"..."காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே; நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே" [வைரமுத்து] என்னும் சிறப்பான வரியை உள்ளடக்கிய இந்த பாட்டின் இறுதியில் repeat ஆகும் பல்லவியின் பின், கடலலை போல எழும்பும் violin  - நம் வயதிற்கேற்ப உணர்ச்சிகளை குவிக்கும் வாய்ப்பு தரும். இந்த இரண்டு பாடல்களுக்குமே ஒரே pattern - அதாவது triplet drum மற்றும் தபேலா base . வார்த்தைகளுக்கு பின் அதன் சாயலிலேயே பின் தொடரும் கிடார். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் triplet மேல் போகும் வயலின் அல்லது வீணை. பாட்டின் நடை நம்முடைய செவியில் நங்கூரமிட உதவும் கப்பாஸ்...வாழ்க்கை முழுதும் ரசிப்பதற்கான 2 பாடல்கள் ready. பாடல் முழுவதும், வரிகளுக்கு பின்னே அதே தொனியில் ஒலிக்கும் கிடாரை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததும் இந்த இரண்டு பாடல்கள்தான். பெரும்பான்மையான ilayaraja பாடல்கள் இந்த guitar "கல்வி" கற்காமல் முழுமையாக ரசித்ததின் திருப்தி தராது.

படம் முடிந்து, ஆளரவமற்ற தெருக்களை அர்த்தசாமத்தில் கடந்து, மண்டபத்தில் நீளமாக விரிக்கப்பட்டிர்க்கும் சிகப்பு ஜமுக்காளங்கள் ஒன்றில் படுத்து காலை விழித்த பொது கண்ணெரிச்சல் என்றால் என்ன என்பதன் முதல் அனுபவமும் கிட்டியது. திருமண விருந்து முடிந்து அருகில் இருந்த என் மாமா வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் சாலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை BBC உறுதி செய்திருந்த நிலையில் நம் ஆகாஷ வாணியும் தூர்தர்ஷனும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தெருக்களிலும் தெரிந்தது.
அன்று மதியத்துக்கு மேல் செய்தி ஊர்ஜிதமாக, எல்லா ரேடியோ அலைவரிசையிலும் shenoi , வீணை என்று சோக கீதம் போட, மூன்று நாட்கள் நகரம் முழுதும் சோகம் மூடிக்கொண்ட நாட்கள். நானோ, முந்தைய இரவு கேட்ட இரண்டு பாடல்களின் பிடியில் இருந்தேன் - மீண்டும் கேட்க ஆவலாய் ரேடியோவை எங்கு திருப்பியும் பாடல் கிடைக்காத ஏமாற்றத்தில்...
இன்று, vadapalani arcot road என்றால், இரண்டு பாடல்களும், இந்திரா காந்தி இறந்த அன்று கூட்டம் கூட்டமாக சாலையில் கூடிய மக்களும் arcot road எங்கும் இறைந்து கிடப்பது போலத்தான் ஞாபகம் வருகிறது....
இந்திரா காந்தி மரண நிகழ்வின் தீவிரமும் அதன் பின்னால் இருந்த தேசத்தின் வலிகளையும் அறியாமல் பாடலுக்காக ரேடியோ திருப்பிய அந்த நாட்களை நினைத்தால் இன்று நகைப்பாக இருக்கிறது. வயதின் அறியாமை, முக்கியத்துவங்களின் மேல் எப்படியெல்லாம் முகமூடி போடுகிறது!


   

Saturday, March 24, 2012

13. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 3

இப்போது போல் நேரத்தை தின்னும் நெரிசல்கள் இல்லாத ஞாயிற்று கிழமைகள் எழுபதுகளில்  இருந்தது. அந்த வருடங்களில் சிறுவன் சிறுமியாக இருந்தவர்கள் சில வரங்கள் பெற்றிருந்தார்கள். அப்படித்தான் நானும்...

எங்கள் வீட்டிற்கு சின்னத்தம்பி என்னும் ஒருவர் iron செய்ய வருவார். Ramesh ratnayake (தலையில் வெள்ளை band கட்டிக்கொண்டு medium pace போடும் இவரை ஞாபகம் இருக்கிறதா?) மற்றும் Arjuna ranatunga இருவரையும் ஏதோ ஒரு வகையில் கலவை செய்தால் இவரின் உருவம் கிடைக்கும். நீங்கள் அறிந்திராத சின்னத்தம்பியை உங்களுக்கு சற்றேனும் அறிமுகம் செய்தாயிற்று. பெரும்பாலும் ஞாயிற்று கிழமை மதியம் எங்கள் வீட்டின் உயர்ந்த வாசல் படிக்கட்டுகளின் அருகில் iron வண்டியை நிறுத்தி முதலில் கரி போடத் துவங்குவார். ஞாயிறு மதியம் தெருவில் ஒரு ஈ குளுவான் கூட இருக்காது.
பருவ காலம் பொறுத்து அனல் காற்றோ மாலை மழை வருவதற்கு முந்தைய வாசனையை நம் மூக்குக்கு அறிமுகப்படுத்தும் மழை காற்றோ வீசும்.
சிலோன் ரேடியோவில் "டாப் 10", "பாட்டுக்கு பாட்டு", "பட வசனம்" [திரைப்படம் முழுதும் வானொலியில் வரும்] என வரிசையாக நிகழ்ச்சிகள்.
இதில் பெரும்பாலும் சின்னத்தம்பி iron செய்கையில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் பால், bottle இல் தான் வரும். மதியம் காபிக்கு வீடு தயாராகும் போது திறக்கப்படும் பாட்டிலின் silver paper மூடியில் வெண்ணை போன்ற ஆடை ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாக்கிற்கு கொடுத்தபடி அவர் iron  செய்வதை பார்ப்பது என் பழக்கம்.
அவர் iron செய்து முடித்தபின் என்னை iron வண்டியில் உட்கார வைத்து ஒரு "ரவுண்டு" கூட்டிப் போய் வருவார். அதற்காகவே வாசலில் காத்துக் கிடந்த ஞாயிற்று கிழமைகள் பல.
இவ்வாறு "ரவுண்டு" போகும் பொழுது   சொல்லி வைத்தது போல் பெரும்பாலும் ஒலிப்பது "சிட்டுக்குருவி" படத்தில் வரும் "என் கண்மணி" பாடல். அதிலும் குறிப்பாக "தேனாம்பேட்டை super market இறங்கு" என்றவுடன் நான் iron வண்டியிலிருந்து குதிப்பதும் வழக்கமாகி போனது. சில சமயம் "என் கண்மணி" இல்லாமல் "உன்ன நம்பி நெத்தியிலே" ஒலிப்பரப்பாகும் பொழுது அந்த ஞாயிறே வீணானது போல் தோன்றும். இன்று வரை, "என் கண்மணி என் காதலி" எங்கு ஒலித்தாலும் அல்லது தேனாம்பேட்டை சிக்னலை எப்போது கடந்தாலும்  அந்த ஞாயிற்று கிழமைகள் நினைவின் செல்களில் பொங்கி அடங்கும். சின்னத்தம்பி முப்பது வருடங்களுக்கு முன் iron செய்த வெள்ளை கலர் பூ design சட்டை ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

இந்த பாடல், multi track வசதிகள் இல்லாத காலத்தில் இளையராஜாவால் எப்படி சாத்தியப்பட்டது என்பது புதிர். பல்லவியில் மட்டும் "கப்பாஸ்" வித்தியாசமாக வந்து போகும். கப்பாசை வெவ்வேறு தொனிகளில் கையாள்வதிலும் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.  "என் கண்மணி" வந்த பின், அதற்கு சற்றே பிந்தைய கால கட்டத்தில் மற்றுமொரு பாடல் பெரும்பாலும் ஞாயிறு மதியங்களை நினைவூட்டும் - தர்மயுத்தத்தில் வரும் "ஆகாய கங்கை". இது என் அக்காக்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அவர்களின் "frock"ஐ  பிடித்து இழுத்துக்கொண்டே நான் அவர்களுடன் வீடு முழுதும் ஓடித்திரிந்த ஞாயிறுகளில் மனதில் பதிவான பாடல் இது.  "கமக்கம்" என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் Janaki தரும் ஏற்ற இறக்கத்தை ரசித்தால் போதும். இந்த பாடலை முழுவதும் இயக்குவது கப்பாஸ். இந்த பாடலின் highlight இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் வயலினும் அதற்கு மேல் "உருளும்" கப்பாசும். மகிழ்ச்சியின் தளத்தில் சென்று கொண்டிருக்கும் பாடல் இந்த பத்தே நொடிகளில் ஒரு "haunting" ஏற்படுத்தி "nostalgia" [நினைவின் பின்னூட்டம் என்றால் இன்னும் பொருத்தம்] சவாரி போகச்செய்து விடும். பாடலின் வேக மாறுதல்களுக்கு ஏற்ப கப்பாஸ் இடைவெளி கூடிக்குறைவது இப்பாடலின் மற்றொரு speciality. "சீதா(ப்?) புகழ் ராமன்" என்பதை நாம் எத்தனை  விதமான பொருளில் அர்த்தம் செய்து கொள்ளலாம்? இந்த வரி இது போன்ற ஆழமற்ற வரிகள் கொண்ட காதல் பாடலில் waste செய்யப்பட்டிருக்க வேண்டாம்...

"teynampettai signal" விளையாட்டு முடிந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற என் திருமணதிற்கு சின்னத்தம்பி வந்திருந்தார் - ஒரு customs officer ஆக வளர்ந்து. அந்த பரபரப்பான தினத்திலும் அவர் என் கைகுலுக்கி வாழ்த்த அருகில் வந்த பொது எங்கள் இருவர் மனத்திலும் ஒரே நொடியில் பற்றி கொண்டு இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த முதல் வார்த்தை "என் கண்மணி" பாடல்தான். எங்கோ இருக்கும் எவரோ இருவரின் நினைவுகளின் வடம் கால் நூற்றாண்டு காலமாக கட்டியிழுத்துச் செல்லும் தேர் எது?


இப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பது போன்ற நாட்களின் நினைவுகளில்  மூழ்கித் திளைக்கும் அனைவரின் பார்வையிலும் பத்தாண்டுகளுக்கு முன் வந்த சேரனின் "பாண்டவர் பூமி"  கட்டாயம் பட்டிருக்கும். இதில் ராஜ்கிரண் தன் பிறந்த ஊருக்குப் போவதாக படத்தில் வரும் 15 நிமிடங்கள் நம் தொண்டைக்குள் உருண்டை ஒன்று திரள்வதை நம்மால் தவிர்க்க இயலாது. இப்போதும் எந்த சேனலில் எப்போது "பாண்டவர் பூமி" போடப்பட்டாலும் அந்த 15 நிமிடங்கள் நான் பார்பதுண்டு. நம் வருடங்களை நாம் மீண்டும் மீண்டும் குடிக்க உதவுகிறது அந்த 15 நிமிடங்கள்.

எங்கள் வீட்டில் கேட்கப்பட்டதை போல் இந்த பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் நூற்றுக்கணக்கான ஞாயிறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களில் பலர் இன்று வெவ்வேறு இடங்களில் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்திருக்கக்கூடும். அத்தகைய அனைவரின் அணைத்து விதமான செல்வங்களையும் சேர்த்து ஈடாக வைப்பினும் அந்த ஞாயிறு மதியங்களை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?



Saturday, March 10, 2012

12. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 2

முன்னர் சொன்ன இளையராஜாவின் இயற்பியலுக்கான அடிப்படை விதிகளின் தொடர்ச்சியாக, இளையராஜாவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாத "கப்பாஸ்" கருவி அவரின் பெரும்பான்மையான பாடல்களில் நாம் அதனுடன் பயணம் போவதற்கான வழிகாட்டியாக இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.


 "தென்றலே என்னைத்  தொடு" படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த நேரம். இந்த படத்தில் நடித்த பெண்ணின் பெயர் கொண்ட, வீட்டில் அதிபுத்திசாலி என்று கருதப்பட்ட, என் ஒன்று  விட்ட அக்கா 12th standard முடித்து மதுரையிலேயே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்திருந்த தினம் அன்று. காலையில் நான் பள்ளிக்கு கிளம்புகையில் தனது அதிக மதிப்பெண்ணுக்காக எனக்கு ஒரு "5 star" [அப்பொழுது கிடைக்கக்கூடிய அதிகபட்ச treat!] வாங்கித்தருவதாக சொல்லியிருந்தார். "5 star" chocolate சுவையை நாக்குக்கு ஞாபகப்படுத்தியபடி school பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டிற்கருகில் வருகையில் வீட்டின் முன் சற்று கூட்டம். என்னை வீட்டிற்குள்  விடாமல், சில வீடுகள் தள்ளியிருந்த, எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான, "ராஜ[ம்] மாமி" வீட்டிற்கு கொண்டு போய் விட்டார்கள். "ராஜ மாமி" என்றழைக்கப்பட்ட Rajalakshmi மாமி Iyengar நெறிமுறையின் படி எப்பொழுதும் நெற்றியில் வைணவ குறியீட்டுடன் பெயருக்கேற்றபடி ஆஜானுபாகுவாய் இருப்பார். வீட்டிற்கு உடனே போயாக வேண்டும் என்று அடம் பிடித்த என்னை அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்றும் 10 நிமிடம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்றும் சொல்லி ஒருவருடன் அனுப்பி வைத்தார். ஆட்கள் நிரம்பியிருந்த எங்கள் வீட்டின் அரக்கு கலர் சுண்ணாம்பு தரையில் பற்கள் கட்டிபோய் கிடத்தப்பட்டிருந்த அக்கா கொடுத்தது ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அதிர்ச்சி. அன்றிரவு முழுதும் ராஜ மாமி என்னை சாப்பிட வைக்கவும் சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்கள் கையாண்டார். அதிலொன்று அவர்கள் வீட்டிலிருந்த மேல்நோக்கி திறக்கும் Panasonic tape recorder மூலம் பலமுறை போடப்பட்ட "தென்றலே என்னைத்  தொடு" பாடல்கள். அவர்கள் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து எங்கள் வீட்டு பக்கவாட்டு ஜன்னல்கள் தெரியுமென்பதால் அந்த மொட்டைமாடி கைப்பிடி காரைச்  சுவரை, விரல்களால் நோண்டியபடி ராஜ மாமியின் புடவைத் தலைப்புக்குள் பாதி மறைந்த படி, அக்காவிற்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்ற அந்த நாள்...என்னையே அறியாமல் "கப்பாஸ்" ரசிக்க துவங்கிய நாள்  போலும்...


"தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் [1,2]...[ இடைவெளி  ]...[3,4,5] என்ற தாளக்கட்டில் பாடல் முழுதும் "Cymbal" உடன் வரும் கப்பாஸ் இந்த பாட்டையே இன்னொரு தளத்திற்கு கொண்டு போகும்.இந்த பாட்டில்தான் எத்தனை கருவிகளை இழையோட வைத்திருக்கிறார் இளையராஜா! இதை எளிமையாக்கி ரசிக்க உதவுவதும் மேற்சொன்ன கப்பாஸ் தான். ராக சகவாசம் உள்ளவர்கள் இப்பாடல் hamsanandham என்பார்கள். சரணங்களின் பிற்பகுதியில் வரும் higher octave chords அற்புதம் என்பார்கள். பாட்டை மூளைக்கு அனுப்புவதற்கு இது தேவைப்படலாம் ஆனால் மனதை நிரப்ப, பாடலை  அனுபவிக்கத் தெரிந்தால் போதுமே!  ஹம்சானந்தமோ இல்லையோ இந்தப் பாட்டு அம்சமான ஆனந்தம் தான். இரண்டு விதமான base guitar stroke வைத்து பாடல் துவங்கும் போதே இது பல அடுக்கு இசைகோர்வை கொண்ட பாடல் என்று மனது தயாராகும். இப்பாடல் நான்கு இசை அடுக்குகளை கொண்டது. அடித்தளத்தில் இருப்பது guitar தரும் இழைகள். இது அவ்வபொழுது மேலடுக்கில் வந்து பரவசப்படுத்தும் (தேகம், மோகம் போன்ற வார்த்தைகள் முடிவில் கவனியுங்கள்...). இதற்கு மேலே கப்பாஸ். இது, இரு வார்த்தைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியையும்  நிரப்பும் [3,4,5] அழகை என்ன சொல்வது...மூன்றாவது அடுக்கு இளையராஜாவின் வழக்கமான வித்தைகளுக்கு...முதல் சரணத்தில் குழலில் வரும் interlude கேட்டு முடித்தபின் இதையே வயலினிலும் கேட்டால் எப்படியிருக்கும் என்ற நினைப்பை புரிந்து இளையராஜா இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இடத்தில் வயலினில் மாற்றியிருப்பார். நான்காவது அடுக்கு நம்மை வருடி விட - பாடல் முழுதும் ஒரு புறத்தில் ஒலிக்கும் சிறு கோர்வைகள் அதைத்தொடர்ந்து மறுபுறத்தில் வேறு கருவிகள் மூலம் பின்தொடர்கிறது...இப்பாடலில் "ம்" என்று முடியும் இடத்திலெல்லாம் அதற்கு பின் ஒரு மாயம் வைத்திருப்பார் இளையராஜா. 


சில வருடங்களுக்கு முன் ராஜ மாமியை சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சென்று பார்த்த பொழுது,  உடம்பை பல்வேறு நோய்களுக்கு குத்தகைக்கு விட்டு தன் பெயரின் பொலிவை இழந்திருந்தார். பேசி விட்டு கிளம்புகையில் மற்றவர்களை வெளியில் இருக்கும்படி சொன்ன ராஜ மாமி,  என்னைத் தனியே சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்து சட்டென்று உடைந்து அழத்தொடங்கினார். அழுகை விசும்பலாகி என் தலையை வருடி "போயிட்டு வா" என்றார். பெரும்பாலான இறுதி சந்திப்புகளை காலம் சூசகமாக நமக்கு தெரிவித்து விடுகிறது!