Saturday, March 18, 2017

45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28

"நினைவூட்டும் மணியன் காபி பார்"  - எப்படி இருக்கிறது இக்கடையின் பெயர்? நீங்கள் மதுரைக்காரர் என்றால் இங்கு காபியோ டீயோ குடித்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம். மதுரைவாசியாய் இருந்து கொண்டு வெறும் காபி மட்டுமா கடையில் குடிப்போம் நாம்? கூடவே வடை, பஜ்ஜி, போண்டா ஏதேனும் உள்ளே தள்ளா விட்டால் பிறந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதாகாதே...? கடையின் காபி சுவையை நினைவுபடுத்த இப்பெயரை வைத்தார்களா என்று தெரியாது ஆனால் பிற நினைவுகள் குறித்த மிகுந்த பெயர் பொருத்தம் இக்கடைக்கு உண்டு. மேற்சொன்ன பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் முயற்சியின் பொருட்டு அப்படித்தான் அன்றொரு தினம், அடுத்த ஈடு போண்டா எண்ணெயில் கொதிக்க, அதை எதிர்நோக்கி நண்பர்களுடன் காபி அருந்தியபடி நினைவூட்டும் மணியனில் நின்றிருந்தேன் நான். வானொலியும் வாணலியும் இல்லாத காபி கடை மதுரையில் ஏது? இலங்கையிலிருந்தோ திருச்சியிலிருந்தோ "காத்திருந்தேன் தனியே" என்று உருகத் துவங்கியிருந்த சந்திரசேகருடன் அதே "அலைவரிசை"யில் நாங்களும் இணைந்து கொண்டோம். அப்பொழுத்தான் வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல் என்பது தவிர வேறெந்த அடையாளமும் அதில் இல்லை. ஆனால் அப்பாடல், படம் பிற தகவல்கள் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. சந்திரசேகரா யார் இவர்? ஜேசுதாஸா அருண்மொழியா என்ற தீவிர ஆலோசனைக்குப் பின் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் பின்னாளில் இப்பாடலை பாடியவர் இவர்கள் இருவரும் அல்ல. சந்திரசேகர் என்பவர் என்று தெரிய வந்தது.

இப்போது உள்ளது போல் விரல் சொடுக்கில் பாடல் விபரங்களை கணிணி மூலம் அடையும் வசதி அப்போது இல்லை. எனவே எவ்வாறு அப்பாடலை மீண்டும் கேட்பது என்பதில் எங்கள் சிந்தனை நீண்டது. அருகிலிருந்த ஏற்கெனவே அறிமுகமான கேசட் கடைக்குச் சென்றோம். இருப்பதிலேலே அதீத குரல் வளம் கொண்ட (சுமார் என்று பொருள் கொள்க) நண்பன் ஒருவன் "கா...த்..திருந்தேன் தனியே" என்று காற்று இடையிடையே புகுந்த தொண்டையுடன் பாடிக்காட்ட, எங்களையும் "காதல் நோய்" பீடித்து விட்டதோ என்ற சந்தேகத்துடன், ஒரு நமுட்டுச் சிரிப்புடன், "இது ராசா மகன். இப்போதான் ரிலீஸ் ஆயிருக்கு" என்றார் கடைக்காரர்.

அடுத்த வாரத்தில் இரண்டொரு முறை கேட்க நேர்ந்து நாவினடியில் நினைவிலிருக்கும் தேனின் ருசி போல் மெல்ல படியத் துவங்கியது பாடல். அதிலும் முக்கியமாக இரண்டு சரணங்களிலும் இரையுண்ட பாம்பு நகர்வது போல் ஏதோ ஒன்று, அடியில் - ஸ்வரத்தின் மிக அடியில் மெதுவாய் ஊர்வது மிக வித்தியாசமாக இருந்தது. வாழ்வில் சில நல்லதுகளை கண்டடைய ஏராளமான குப்பைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்னும் மாபெரும் கருத்தை, இரண்டரை மணி நேர கழிவுகளுக்கிடையில் இப்பாடலை வைத்து, "ராஜா மகன்" படக்குழுவினர் மக்களுக்கு பாடம் புகட்டியிருந்தனர். இப்பாடலின் அதிசயத்தை அப்படியே உள்வாங்க தியேட்டர் அவசியமாக இருந்தது. அதன் மிகப்பெரிய துல்லிய ஸ்பீக்கர்கள் அவசியமாக இருந்தது. எனவே படம் பார்த்தாவது என்று முடிவானது.

ராசா மகன், சக்தி சிவத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதிபுத்திசாலித்தனம் என்று நமக்கு நாமே எண்ணிக் கொள்ளும் வயதில் இருந்த நாங்கள், இப்பாடலை திறம்பட கேட்பதற்கு ஒரு "வியூகம்" அமைத்தோம். முதலில் ஒரு நண்பன் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றான். எங்கெங்கு ஸ்பீக்கர்கள் இருக்கின்றன என்று நோட்டமிட்டு அதற்குத் தகுந்த சீட் வரிசை எண்களை தெரிவிப்பது அவன் பணி. அப்போது மொபைல் எல்லாம் வந்திருக்கவில்லை என்பதால் அவன் மீண்டும் வெளியே வந்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும். டிக்கெட் எடுத்த பின் முழுமையாக வெளியே வர இயலாது. சக்தி சிவம் டிக்கெட் கவுண்டரோ கூண்டு போன்றது. பேசினால் கேட்காத தொலைவிலிருந்து பார்வைக்கு மட்டும் தெரியும்படி மட்டுமே அவனால் அதிகபட்சம் வெளியே வர முடியும். ஓரிடத்தில் நிற்பது என்றும், ஏ,பி, சி, டி போன்ற வரிசைகளில் எந்த வரிசையின் இறுதியில் ஸ்பீக்கர்கள் இருக்கின்றனவோ அதை அவன் விரல் எண்ணிக்கையின் மூலம் காட்டுவது என்றும் முடிவானது. அதற்கு சில பயிற்சியும் பின் "தேர்வும்" வைக்கப்பட்டது.

உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து "பச்சை சட்டை போட்ட குமரன் யாரு" என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், "இங்க...இங்க..." என்றோம். "எல்" கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் "உதவியாளராக" இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் பின்னர் ஒரு தனி கதை சொன்னான்...!

வியூகத்தின் அடுத்த கட்டம் "எல்" வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் "எண்ணிக்கை" பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக "எல்" வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. "யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது" என்றான் தன் முயற்சி அனைத்தும் வீணடிக்கப்பட்ட‌ கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள்.

படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து "மாறி உட்காருங்க" என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு மட்டும்
சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் "ராசா மகனின்" ரம்பம் துவங்கியது.

உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து "பச்சை சட்டை போட்ட குமரன் யாரு" என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், "இங்க...இங்க..." என்றோம். "எல்" கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் "உதவியாளராக" இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் ஒரு தனி கதை சொன்னான்...!

வியூகத்தின் அடுத்த கட்டம் "எல்" வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் "எண்ணிக்கை" பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக "எல்" வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. "யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது" என்றான் தன் முயற்சி அனைத்தும் வீண்டிக்கப்பட்ட கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள்.

படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து "மாறி உட்காருங்க" என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் "ராசா மகனின்" ரம்பம் துவங்கியது.

சரி, இந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது? ரேடியோ, டேப் ரெக்கார்டரில் கேட்டால் செவிக்கு கிட்டாது தியேட்டர் ஸ்பீக்கரின் மூலம் மட்டும் செவிக்கு ஈயப்படும்
அத்தகைய உண(ர்)வு எது? இத்தனை எத்தனிப்புகள் அதற்கு தேவையா? இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும். இப்பாடலுக்குள்ளும் மறைந்திருக்கும் அத்தகைய நொடிகளை அடுத்த பகிர்வில் காண்போம். அதுவரை "காத்திருந்தேன் தனியே" என்று பாடிக்கொண்டோ கேட்டுக் கொண்டோ இருப்போம்...

Saturday, January 16, 2016

44. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 27

நகரத்து தெருக்களில் நாராசமாய் ஒலிக்கும் மானுட அவசரத்தின் பிரதிபலிப்பான வாகன ஹாரன் சத்தம் தவிர்த்து வேறேதும் இன்று இருக்கிறதா? முப்பது வருடங்களுக்கு முன் இருந்த தெருவை இன்று நினைப்பில் கூட நம்ப முடியுமா?

மதுரை நகரின் மையப் பகுதியில், இன்று நடக்கக் கூட இயலாத நெரிசல் மிகுந்த சாலையில் தான் அன்றும் இருந்தது எங்கள் வீடு. கார்கள் போனால் அதிசயம்...இருசக்கர வாகனங்களை கணக்கிட்டு விடலாம்...அவ்வப்போது வெள்ளி நிற பேருந்து மட்டுமே போகும் தார் மேல் மெளனம் தடவிய சாலை எங்களது. அதிலும் ஞாயிறு என்றால் மெளனமோ மெளனம்..."இளையநிலா" எதிர்பாரா இடங்களில் எல்லாம் எவ்வாறு புகுந்து இளைப்பாற்றுகிறது என்பதை  எங்கள் தெரு உணர்த்திய மற்றுமொரு நிகழ்வே இப்பதிவு.

வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஞாயிறு மதிய உணவுக்குப் பின் உறக்கத்தில் இருந்த நேரம். நான் வீட்டின் வாசற்படிக்கட்டில் அமர்ந்து பட்டம் தயார் செய்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் தெரு வழியே ஒரு அதிசயம் கடந்து போகும். அது பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் தான் நடக்கும். அன்றும் அந்த கறுப்பு அதிசயம் தெருவின் தொலைவில் தெரிந்தது. புசுபுசுவென்ற ரோமத்துடன், ஒரு பெரிய பொதிக்கு கால்கள் வந்தது போல மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது கரடி. அதன் வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெல்ட் கழுத்தில் ஒரு சுற்று சுற்றி நீண்டு ஒரு தாடி வைத்த மனிதனின் கைகளில் முடிந்திருந்தது...

பாதி செய்திருந்த பட்டத்தை வீட்டுக்குள் வீசியெறிந்து விட்டு கரடி அருகில் வர ஆவலுடன் காத்திருந்தன...எங்கள் வாசற்படி தெருவில் வருவோர் போவோர் சற்று நேரம் அமர்ந்து செல்ல வாகான வடிவம் கொண்டது. கரடி வித்தைக் காரனும் கரடியும் எங்கள் வீட்டின் முன் நின்றனர். ஒடிசலான ஓங்கி வளர்ந்த அவரின் முகத்தில் பழுப்பேறிய தாடி தனித்து நின்றது. ஆங்காங்கே கிழிந்திருந்த ஜோல்னா பை கனமாக தெரிந்ததால் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் ஏற்படுத்தியது. ஜோல்னா பையின் நுனியில் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பின்புற மூடி வறுமையில் தொலைந்திருக்கக் கூடும். சர்க்யூட்டும் பாட்டரியும் வெயிலும் புழுதியுமாய் வெளியில் தெரிந்தபடி இருந்தன...

கரடியின் கண்கள் தண்ணீரில் முக்கியெடுத்த கோலிகள் போல் மினுமினுத்தன. உயர்ந்த வாசற்படியை தன் இரு கைகளினால் பிடித்து எம்பியபடி என்னை பார்த்தது அது. இறங்கு வெயிலின் தகதகப்பில் கரடியையும் அதை பிடித்தபடி நிற்கும் மனிதனையும் கண்ட காட்சி ஒரு அழகோவியம் போல் அடிமனதில் இன்றும் இருக்கிறது. ஜோல்னா பையில் இருந்து ஒரு அழுகிய திராட்சையை எடுத்து கரடியின் வாயிடுக்கில் வைத்தார் அவர். மேலும் கீழும் தலையை ஆட்டியபடி ஒரு குதிகுதித்து மீண்டும் நடக்கத் துவங்கியது அது.

காடும் காட்டுயிரும் என்றுமே வியப்பும் மகிழ்வும் ஊட்டுபவை. கரடியை தொடர்ந்து போனால் காடு பார்க்கலாம் என்று தோன்றியது எனக்கு. வீட்டின் அகன்ற கதவை சாத்துவதற்கும் தோன்றாது அவர்களின் பின்னே நடக்கத் துவங்கினேன். திண்டுக்கல் ரோடு ஆரியபவன் சந்திப்பில் கரடியை சுற்றி கூட்டம் கூடியது. "கரடி வித்தை" நடந்தது. கூட்டம் கலையத்துவங்கியது. வித்தை முடிந்த பின் சில திராட்சைகளை விழுங்கியது கரடி. ஒவ்வொரு பழத்திற்கும் அதன் கண்ணில் தெரிந்த ஏக்கமும் சிறிய உற்சாகமும் நாமும் ஏதாவது அதற்குத் தர வேண்டும் என்று தூண்டியது. அதை கட்டித் தழுவியபடி ஏதேனும் உண்ணக் கொடுப்பது போல கற்பனை செய்து கொண்டேன்.

கரடியை தொட்டுப் பார்க்க பத்து காசு என்று அப்பகுதியில் வசித்த அனைவருமே அறிவோம். என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். ஒரே ஒரு பத்து காசின் தடயம் மட்டுமே வடிவமாக தட்டுப்பட்டது. கரடியை தொட்டுப் பார்ப்பதா ஏதேனும் வாங்கித் தருவதா? சிறிய விஷயங்கள் பெரும் சிக்கலாய் தோன்றுவது தானே வயது? யோசனைக்குப் பின் அருகில் இருந்த ஐஸ் வண்டியில் பால் ஐஸ் ஒன்றை பத்து பைசாவுக்கு வாங்கி கரடியை நோக்கிச் சென்றேன். கரடியை நோக்கி குச்சி ஐஸை நீட்டியபோது "கரடி ஐஸ் எல்லாம் சாப்புடாதுடா" என்று பலமாக சிரித்தபடி தனக்கு வாங்கிக் கொண்டார் வித்தைக்காரர். ஏமாற்றத்துடன் இருந்த என்னிடம் "தொட்டுப் பாக்கறியா" என்றவுடன் வித்தைக்காரர் வேகமாய் பால் ஐஸை சாப்பிட்டு விடக்கூடாதே என்று வேண்டியபடி கரடியை சுற்றி சுற்றி வந்து தொட்டு மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி என்னை கரடியுடன் மேலும் இழுத்துச் சென்றது. வடக்குமாசி வீதி பிள்ளையார் கோவில் முன் அடுத்த வித்தை. இப்போது அவ்வப்போது கரடியை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு...

அங்கிருந்து சக்தி சிவம் தியேட்டர் வழியே சிம்மக்கல் கடந்து கல்பாலம் வரை கரடி என்னை தன் வசீகரத்தால் என்னை கடத்தியது. வைகையில் ஆங்காங்கே தண்ணீர் தென்பட்டது. ஒரு வரிசைக் கல்லில் கரடியை கட்டியவர் அருகில் அமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்தார். கரடி ஆற்றில் குதித்து விடுமோ என்று பயமாக இருந்தது. மெதுவாக தன் டிரான்ஸிஸ்டரை திருகித் தட்டினார். சில திசைகளில் கரகரவென்றும் சில திசைகளில் தெளிவாகவும் அவ்வப்போது ஏற்ற இறக்கமான சத்தங்களுடன் பாடித் துவங்கியது அந்தச் சிறிய வெள்ளைப் பெட்டி.





அன்றைய வருடங்களில், இலங்கை வானொலியின் ஞாயிறு தரவரிசை பட்டியலில் இளையநிலா தவறாமல் இருக்கும் என்று அனேகமாக அனைத்துத் தமிழர்களும் அறிந்திருப்பார்கள். அதை மயில்வாகனம் சர்வானந்தா போன்றோர் அறிவிக்கும் தொனியையும் மறந்திருக்க மாட்டார்கள். கரடி வித்தைக்காரருக்கும் அது தெரியுமா, வைகை நதியோரம் அமர்ந்து அப்பாடலை கேட்பது அவர் பழக்கமா, அல்லது அதற்காகவே திட்டமிட்டு அவரின் ஞாயிறு மாலையை கல்பாலத்தில் முடிப்பாரா? கரடியை வைத்து வித்தை காட்டுபவருக்கும் இளையநிலாவுக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு விசை எது? கல்பாலத்திலிருந்து கரடியை கூட்டிக் கொண்டு எங்கு போவார்? பாடலை முணுமுணுத்தபடி போவாரா?
இவை எதற்குமே என்னிடம் பதில் இல்லை. ஆனால் அன்று அந்த பாதி ரிப்பேரான டிரான்ஸிஸ்டரிலிருந்து இளையநிலா பாடத்துவங்கிய போது அவரின் விரல்கள் ஜோல்னா பையில் தாளம் போடுவதை நான் பார்த்தேன். அலையும் முகிலினங்கள் போல் இலக்கற்ற வாழ்க்கை ஆயிற்றே என்று முன்னேற்றத்தின் முகவரிகள் தொலைத்த துன்ப மழையை தனக்குள்ளே தேக்கிய கனத்த மேகமாய் அவர் இந்தப் பாடலை கேட்டிருக்கக் கூடும்...யார் கண்டது? இளையராஜாவை இன்னார்தான் ரசிக்க முடியும் என்று விதியேனும் இருக்கிறதா என்ன?

வைகையின் நீண்ட மணல்வெளியின் தொடுவானில் சூரியன் இறங்குவதை பார்த்தபடி இருந்த எனக்கு வீட்டை விட்டு வெகுதூரம் வந்து விட்டதன் கிலி தொற்றியது...சுமார் மூன்று மணி நேரம் என்னைக் காணாமல் இந்நேரம் எங்கெல்லாம் தேடத்துவங்கினரோ...ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கி விரைந்தேன். அதன் பின் நடந்தவை பாடல் கேட்ட கதையின் பரப்பளவிற்கு தொடர்பில்லாதவை!



 

Sunday, July 19, 2015

43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26

ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில் மேற்கொண்டு நகராது நிற்கும் நொடியில் அதை கண்டுபிடிக்க முடியக்கூடும்!

அப்படித்தான், இளையநிலா உலவிய இரவுகள் வழியே வருடங்களை அடித்து இறக்கி ஆழ்மனதில் மீதமிருக்கும் பால்யத்தின் மிச்சங்களில் மிதக்கத் துவங்குகையில் தென்படத்துவங்குகிறது அப்பாடல் கேட்ட முதற் பொழுதுகள்...

மதுரை வரலாற்றில் 1813ல் இருந்து நீதிமன்றங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் உண்டு. அதில் ஓரிடமான டி.எம் கோர்ட் இருந்த இடத்தில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நின்று செல்லும். வரலாற்றில் நாம் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ, அதன் சுவடின் மேல் நிற்கும் போதே நமக்கு ஒருவித புல்லரிப்பு நிகழத்தான் செய்கிறது. பெரியாரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலை வழியாக மேல மாசி வீதி திரும்புகையில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாரா என்று பேருந்தின் ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கையில் அவர் அங்கு நில்லாத நாள் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று, இன்று அவர் இல்லாத பொழுது மனது நெகிழ்கிறது. கரையான் தின்ற கறுப்பு வெள்ளை புகைப்படம் போல பழுப்பாக மனதில் மீதமிருக்கும் அந்த மாலை நேரக் காட்சியில் அம்மாவின் மெலிந்த உருவத்தின் பின்புலத்தில் மேலெழும்பி நிற்கும் சாரத்தில் நின்றிருக்கும் விளம்பரத் தட்டியில் தான் "பயணங்கள் முடிவதில்லை" என்பதை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருந்தேன்.... 50, 100, 150, 200, 250, 300 என்று "நாட்கள்" மட்டும் மாறிக்கொண்டே இருக்க "பயணங்கள் முடிவதில்லை" மட்டும் அந்தத் தட்டியில் தொடர்ந்து பயணித்து வந்தது.

எண்ணற்ற ஞாபகங்களின் சினைமுட்டைகளை சிந்தனையில் உருவாக்க உதவிய இலங்கை வானொலி தான் இளையநிலாவை என்னுள் இறக்கியது. ஒரு ஞாயிறு மதியம் மனதில் சூல் கொண்ட முகிலினங்கள் என்னுடன் வயது தோறும் மழை பொழிந்தபடி வலம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் விளம்பரத் தட்டியில் இருந்த இளையநிலா விதையை பார்வைத் தண்ணீரால் மட்டுமே பதியன் செய்து வந்த என் உள்ளத் தொட்டியில் கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் சென்ற பொழுது அந்த மறக்க முடியாத நாள் மொட்டு என் மாமாவின் தயவில் மலர்ந்தது. ஒரு வார இறுதியில் எங்கள் மாமா இருந்த தெருவே காலியாகி "பிளாஸா" தியேட்டரில் இடம் பெயர்ந்திருந்தது. சுமார் அறுபது டிக்கெட்டுக்களை மாமா கையால் எண்ணிய பொழுது நான் அவரின் சட்டை நுனியை பிடித்தவாறு நின்றிருந்தேன். இசையின் தரிசனம் புலன்களின் வழியே உள்ளிறங்கும் பொழுது ஏற்படும் உள்ளத்தின் பூரிப்பில் நீடிக்கும் நிச்சலமற்ற நிலையின் அனுபவிப்பின் ஆரம்பம் அன்று நிகழ்ந்தது. இலங்கை வானொலி அடைகாத்த முட்டைகள் உடைந்து உற்சாகத்தின் உயிர்ப்பு உருவமெடுத்து தியேட்டரின் இருபுற சுவர்களில் வரிசையாய் இருந்த பெரும் ஸ்பீக்கர்களின் வழியே ஆர்ப்பரித்து உலாவின...சில வரிகள் காலத்தின் பெருவெளியில் நீண்ட நாள் நீந்தும் என்பதை இப்படத்தின் இயக்குனரும் கேமிரா மேனும் உணர்ந்திருந்தார்கள் போலும். எனவே தான் "முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" இரண்டாம் முறை பாடப்படும் பொழுது உணர்வின் எழிலை உதடுகளின் உச்சரிப்பின் வழியே பெண்மை முன் வைப்பது போல் படமாக்கினரோ...

அந்த நாள் நகர்ந்த பிறகு செவிகள் பெறும் இன்பத்தில் விழிகளுக்கும் பங்கு தர சில ஆண்டுகள் காத்திருந்த பின், தூர்தர்ஷன் தயவில் வெள்ளிக்கிழமை இரவு செவிகளும் விழிகளும் அதனதன் பங்கை பிரித்துக் கொண்டன. அதொன்றும் அத்தனை எளிதாக இல்லை. பெரும்பாலும் பழைய பாடலை ஒளியும் ஒலியும் இறுதியில்தான் போடுவார்கள். முகிலனங்கள் அலைவதை மனம் பார்க்கத் தயாராகும் பொழுது "செய்திகள் தொடரும்" ஸ்லைடு போட்டு மழை பொழிய காத்திருந்த மனதின் மேகத்தை கலைத்து விடுவார்கள்.

 மேல்நிலை வகுப்புகளிலும் கல்லூரி காலத்திலும் தேர்வுகளின் முன்னிரவுகளிலும் தேர்வுக்கு கிளம்பும் பொழுதுகளிலும் இளைய நிலா இறை வணக்கமாய் டேப் ரெக்கார்டரின் வழியே பலம் ஊட்டியது. இறைவனை விட இளையநிலா மனதை "வழிப்படுத்தும்" என்ற நம்பிக்கை எனக்கு! பெரும்பாலும் தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா என் நெற்றியில் வைக்கும் விபூதியில் அவரது நம்பிக்கையும், பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும் இளைய நிலாவில் எனது நம்பிக்கையும் நங்கூரம் இட்டிருந்தன. இப்பாடல் ஓட்டியே அறுந்து சிதைந்த கேசட்டுகளின் எண்ணிக்கை கனிசமாய் இருக்கும்.

மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உள்ளிருந்த கல்லூரிக்கு, குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டால் நடையே கதி. அப்போதெல்லாம் ஷாப்பிங் காம்ப்பெளக்ஸ் பக்கம் இருவழி போக்குவரத்து உண்டு.  பின்னர் தோன்றி இன்றிருக்கும் கே.பி.என் டிராவல்ஸ் எதிர்புறம் அன்று பஸ் ஸ்டாப் இருந்தது.அவ்வப்போது கல்லூரிப் பேருந்தா இல்லை இளைய நிலாவா என்று அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை கடவுள் பரிசோதித்து பார்ப்பதுண்டு . சளைக்காமல் நானும் இளைய நிலாவின் பக்கமே நிற்பேன். ஒரு முறை அப்பேருந்தின் வழக்கமான கண்டக்டர் "என்ன தம்பி காலேஜ் சேர்ந்தா பொண்ணுங்கள பார்க்கறதுக்கு நின்னுருவீங்களோ? காலேஜ் வரைக்கும் போற பஸ்ஸ விட்டுட்டு ஸ்டாப்ல சும்மா நின்னு பார்த்துகிட்டுருக்க‌..." என்று கேட்ட போது மனதுக்குள் சிரித்து கொண்டேன். சுட்டெரிக்கும் மதுரை வெயிலில் "வரும் வழியில் பனிமழை"யில் நனைந்து நின்றிருந்தேன் என்று அவரிடம் சொல்ல முடியுமா?சொன்னால்தான் புரியுமா?
 
பிறகு சாட்டிலைட் சேனல்கள் உதயமாயின. வீட்டின் எப்பகுதியில் நானிருந்தாலும் எந்த சேனலினிலேனும் இளையநிலா ஓடுவதை எதேச்சையாக அம்மா பார்க்க நேர்ந்தால் "உன் பாட்டு போடறாண்டா" என்று குரல் கொடுப்பார். பயணங்கள் முடிவதில்லை படம் போடப்படுகிறது என்று தெரிந்தால், படம் துவங்கி பத்தாவது நிமிடம் முடிகையில் எனக்கான தேநீர் காத்திருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த நான், விளம்பர இடைவெளிகளை தோராயமாக கணக்கிட்டு அப்பாடலை மட்டும் பார்க்கும் வித்தை கற்றறிந்து களிப்படைந்த வருடங்கள்...நினைவின் பழுப்பேறிய வருடங்கள்...அம்மாவின் அழைப்புக் குரல் போல இப்பாடலும் இன்று வரை அலுக்கவேயில்லை - ‍இரண்டின் ஒலியலைகளும் நினைவின்அடுக்குக்களில் மட்டுமின்றி அதன் இடைவெளி இடுக்குகளிலும் எல்லாம் நுழைந்து அமர்ந்து விட்டதாலோ என்னவோ!


Sunday, May 17, 2015

42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25

1990களின் இறுதி...வேலைக்குச் சேர்ந்த புதிது...அதிக வேலைபளுவால் நீளும் அலுவலக இரவுகளை இலகுவாக்க அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...அப்படித்தான் அன்றும், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத குளிரூட்டப்பட்ட கூண்டுக்குள் நாளின் பெரும்பகுதியை கழிக்கும் என் போன்று மென்பொருள் இயந்திரங்களில் செயலற்று போயிருந்த மனதின் பொத்தானை அழுத்தியபடி எங்கள் தளம் முழுதும் பரவியது இளையநிலா.


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை. கரும்பு எப்படி இனிக்கும் என்பது பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை...


அந்த இரவின் பொழுதில் ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை "can you play that again " என்று தன் இருக்கையில் இருந்து அழைத்தார் ரஞ்சன். எங்கள் குழுவின் மேலாளர்களில் ஒருவர். மேலாளர்களுக்கான பாசாங்கற்றவர். பெங்காலிகள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்ற கூற்றை நாம் நம்புவதற்கு மற்றுமொரு சாமானிய சான்று ரஞ்சன். கிடார் வாசிப்பார். மிக முக்கியமான நீண்ட மீட்டிங்குகளின் முடிவில் சோர்வேதுமின்றி ஏதோ ஒரு டுயூனை "லலலா" என்று முணுமுணுத்தபடி வெளியேறுவார்.

மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு என் தோளை பின்னிருந்து ஒரு கை தொட்டது. அவர்தான்...இது இளையராஜா தானே என்றார். நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. பாடலின் முடிவில் வரும் கிடாரை இளையராஜாவைத் தவிர வேறொருவர் கோர்த்திருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்றவர் "நநந..." என்று அதை வாசிப்பதைப் போன்ற அபிநயங்களை கை மடக்கிக் காட்டியபடி பாடிய காட்சி அப்படியே புகைப்படம் எடுத்தது போல் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. நான் இதை காப்பி செய்து கொள்கிறேன் என்று தனது கணிணியில் ஏற்றம் செய்து கொண்டார். சில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேலை முடிந்து கிளம்பும் தறுவாயில், "நிறைய வேலை பார்த்தாயிற்று. இங்கு வா" என்று தன் இருக்கைக்கு அழைத்தார். அவரின் கணிணியிலிருந்து ஒரு வீடியோ போட்டார். இளையநிலாவின் இறுதியில் வரும் கிடாரை அவர் தன் வீட்டில் வாசித்துப் பார்க்கும் வீடியோ... "தினமும் சற்று நேரமேனும் இதை பிராக்டிஸ் செய்து வருகிறேன். கேட்கும்படியாகவது இருக்கிறதா" என்றார். "பிரமாதமாய் இருக்கிறது " என்றேன் நான். "அப்படிச் சொல்லாதே. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதன் பக்கத்தில் கூட என் வாசிப்பு இல்லை என்றார். counterpoint என்றால் என்ன என்று ஆவலுடன் கேட்டேன். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்று சிரித்தார். "இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது" என்றார்.

தான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல என்றவர், வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க நினைத்த நான், என் இருக்கைக்கு வரும்படி வேண்டினேன். "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" ஓட விட்டேன். "இதுல salil சாயல் நிறைய இருக்கு" என்றவரிடம் "சாயல் இல்லை. இது அவரோடது தான்" என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு "counterpoint" ஏற்பட்டது போல இருந்தது.

தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?

அன்றிரவு அலுவலக வண்டியில் வீடு திரும்பும் பொழுது கவுண்ட்டர்பாயிண்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் வந்தது. ஞாபகங்கள் என்பதே சட்டென்று வரும் "கவுண்டர்பாயிண்ட்"களின் கோர்வைகள் தானே? அப்போது நாங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவரை அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருந்தேன். ஒரு முறை அவர், "இளையராஜா கேஸட் நிறைய இருக்கு சார். போயிட்டே இருக்கலாம்" என்றார். போயிட்டே இருக்கலாம்...ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் counterpointக‌ள்?

என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு counterpoint புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா? தொடர்வோம்...

குறிப்பு: ஆங்கிலத்தில் நிகழ்ந்த ரஞ்சனுடனான உரையாடல்கள் இங்கு தமிழில் உருமாற்றப்பட்டிருக்கின்றன.

Sunday, November 23, 2014

41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24

உடல் மட்டுமல்லாது மனதின் அடி முதல் நுனி வரை சில்லிடச் செய்யும் பனி விழும் இரவின் துவக்கத்தில் நண்பர்கள் குழுவுடன் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன் நான்...கோவைக்குச் செல்லும் இறுதிப் பேருந்து கிளம்புவதற்கு சற்று நேரமிருந்தது. வாயைத் திறந்து ஊதினாலே பனி பல வடிவமெடுத்து நம்முன் நடனமாடுவது போல நகர்ந்து போகும் அழகை பார்த்து வியந்து கொண்டிருந்தோம்...

அரசு பேருந்துக்கே உரிய அரைகுரையாக இயங்கும் ஷட்டர்களின் வழியே ஊடுருவிய பனிக்காற்றில் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே ஸ்வெட்டர்கள் தாண்டி நாங்கள் சில்லிட்டுப் போயிருந்தோம்...வண்டியில் லைட் வெளிச்சத்தில் பனி படர்ந்த மரங்கள் அடர்ந்த மலைப்பாதை உருகிய மெழுகால் உருவாக்கப்பட்ட ஓவியம் போல இருந்தது...

குளிர் குறைந்ததாக உணர்ந்த போது நள்ளிரவுக்கு அருகில் எங்களை கோயமுத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஷெட்டுக்கு போய் விட்டிருந்தது அந்த பேருந்து. அஞ்சு மணிக்குத்தான் மதுரைக்கு முதல் பஸ் என்று தெரிந்து வாயிலுக்கு அருகிலேயே இருந்த நடைபாதையில் அமர்ந்து கொண்டோம். அவ்வாறே இன்னும் சில பயணிகளும் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அன்றையே இரவின் மறுபகுதியை கடக்க ஆயத்தமாயிருந்தனர்.

இருவர் தூங்க நால்வர் விழித்திருக்க அனைவருக்கும் ஒரு மணி நேரத் தூக்கம் என்ற திட்டத்துடன் அனைவரும் தூங்கி விழித்த போது பேருந்து நிறுத்த வாசலுக்குப் பக்கத்திலிருந்து வந்த ஊதுவத்தி மணமும் பாய்லர் சத்தமும் அதிகாலை நான்கைத் தாண்டியதை அறிவித்தது. அனைவரும் டீ வேண்டி அடுத்த நிமிடம் அக்கடை முன் இருந்தோம். டீக்கடைக் காரர் பத்து நிமிடம் ஆகுமென்றபடி அன்றைய கடைக்கான அன்றாட ஆயத்தங்களை செய்யத் துவங்கினார். திருநீறு நிரம்பிய நெற்றியும் தொப்பைக்குப் பொருந்தாத கலர் பனியனுமாய் அவர் அங்குமிங்கும் கடைக்குள் அலைவதை டீக்கான ஆவலுடன் பார்த்திருந்தோம்...

"மதுரையா?" என்றார் டீக்கடைக்காரர் எங்களிடம். நாம் பேசும் வார்த்தைகளையும் உச்சரிப்பையும் வைத்தே நம் ஊரை எவரேனும் கண்டுபிடிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படும். "ஆமா" என்று வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியில் சேர்வது போல, "நானும் மதுரைதான் ஓடின ஓட்டத்துல கோயமுத்தூருக்கு வந்து நின்னாச்சு" என்று அசால்டாக ஒரு தத்துவத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தார்...

பொதுவாக டீக்கடைகளில் முதலில் ஏதேனும் பக்தி பாடல்கள் தான் போடுவார்கள். கடவுள் மீது பற்றா அல்லது வியாபாரம் பற்றியா கவலையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் நாங்கள் நின்று கொண்டிருந்த டீக்கடையிலிருந்து, நெற்றியில் பட்டையுடன் இருந்தவரிடமிருந்து அந்த அதிகாலை வேளையில் "கும் கும்" என்று காதுக்குள் இடிப்பது போன்ற கிடார் சத்தத்துடன் ஒரு பாடல் [உன்னை வாழ்த்தி பாடுகிறேன் / 1991 / ஜேசுதாஸ் / ஜானகி] "ஒரு ராகம் தராத வீணை" என்று கிளம்பியதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அமைதியாக இருந்த அந்த சூழலில், காற்றில் நடந்து வரத்துவங்கியது ஜானகியின் ஹம்மிங். பொழுதின் தொட்டிலில் நம்மை போட்டு தாலாட்டுவது போல இருந்தது அது. மிகவும் வித்தியாசமாக, மிக அதிகமாக "bass" வைத்தது போல, அந்தப் பாடல் கடையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பால் கொதிப்பதை அறிந்த நாங்கள் அருகில் சென்று நின்று கொண்டோம்.

கடை கூரையின் நான்கு மூலைகளிலும் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்துதான் அந்த "கும் கும்" வந்து கொண்டிருந்தது. நாங்கள் பானையை பார்த்தபடி இருந்ததை பார்த்த கடைக்காரர், "ஸ்பீக்கர்தான்... பானைக்குள்ள வச்சிருக்கேன் என்றார்". பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு கேட்டா பாட்டே வேற மாதிரி கேக்குமுங்க சாதா ஸ்பீக்கர் கூட தியேட்டர் எபெக்ட் கொடுக்கும் என்றார். உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ரப்பர் பேண்டை இழுத்து தோல் மேல் விட்டது போல விழுந்தது பாடலில் வரும் அனைத்து வாத்தியங்களிலும் விழுந்த ஒவ்வொரு அடியும். ஊர் திரும்பிய சில நாட்களில் தண்ணீர் பானையை ஸ்பீக்கர் மேல் கவிழ்த்தி வைத்த போது அம்மா, இவனுக்கு என்னாயிற்று என்ற கவலையுடன் என்னை பார்த்தது ஞாபகமிருக்கிறது. "இந்தப் பாட்ட ரெண்டு வருஷம் முன்னாடி கேட்டேன். அப்பறம் தினம் இந்தப் பாட்டப் போட்டுத்தான் பொழுத துவக்கறது. இளையராஜா பாட்டுன்னு தெரியும் ராகம்னா என்ன தாளம்னா என்னாங்கறதுலாம் நமக்கெதுக்குங்க காலைல பாட்டப்போட்டா ஒரு ஏலக்கா டீயை உள்ள இறக்கின மாதிரி இருக்கு" என்றபடி எங்களிடம் டீ கிளாஸ்களை நீட்டினார். பாடல் முடியும் தருணத்தில் இருந்தது. டீ குடிக்கும் முன்பாகவே குடித்து முடித்தது போன்ற நினைப்பு எங்களுக்கும் தோன்றியது. பாட்டு ஆரம்பத்துல வர ஜானகியோட ஹம்மிங்குக்கும் காலை நேரத்துக்கும் எப்படியோ இளையராஜா முடிச்சு போட்டுருக்கார் என்றான் நண்பன். ஊரெங்கும் பொழுது புலர்ந்திருந்தது...

Sunday, July 20, 2014

40. அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌  "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 /  KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து  சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

Sunday, March 16, 2014

39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர்  மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?