Saturday, April 28, 2012

1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்திறவாய்...

கூட்டுக்குடும்பங்களின் இறுதி அத்தியாயம் துவங்கிய எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த என் போன்ற பலருக்கும் அந்த அத்தியாயத்தின் சில பக்கங்களை அர்த்தம் புரியாமல் புரட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அவ்வாறு புரட்டியது ஒரே வீடு தனி சமையல் என்னும் ஒரு விதமான கூட்டுக்குடும்பத்தின் பக்கங்களை...இது விஷிஷ்டாத்வைதம் போல விசித்திரமான கான்செப்ட். எது எதில் உள்ளது எதில் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவு இருக்காது. ஆனால் ஆனந்தமானது...

சிறியவர்களும் பெரியவர்களுமாய் 13 பேர் நிரம்பியிருந்த வீட்டின் முதன்மை  பொழுது போக்கு, கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்த "desk top monitor" அளவு இருக்கும் பளிங்கு நிற வால்வு ரேடியோ. வயர் கூடை designல் முன் பக்கம் முழுதும் ஓட்டைகளுடன்  on செய்தால் விரல் அளவு உள்ள பச்சை விளக்கு எரிய 10 நொடியும்  சத்தம் வர 10 நொடியும் ஆகும் இதை தொடுவதற்கே எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டன. வீட்டின் பெரியவர்கள் சூடான காபி டம்ளரை நெற்றியில் உருட்டியபடி சரோஜ் நாராயண் சுவாமியை கேட்கும் பொழுது  தலைவலி தருபவை குடும்ப நடப்புகளா உலக நடப்புகளா என்று நமக்கு தெரியாத வயது. "சுழன்றும்  ஏர்பின்னது உலகம்" என்பதை நல்ல மெட்டுடன் பாடும் ஆண்குரல் பின்னர் பாக்டம்பாஸ் 20-20 ஐ எப்படி அதிக மகசூலுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுது திருச்சியில் இருக்கும் knob ஒரு முள் நகர்ந்து இலங்கையில் இறங்கினால் பெரும்பாலும் ஒலிப்பது "பொன் மாலை..." இன்றைய எரிச்சலூட்டும் டாப் 10 போல் அல்லாமல் இயற்கையான ரசனையுடன் [ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ஹப்துல் ஹமீது போன்றோரால்] தொகுத்து வழங்கப்படும் ஞாயிறு டாப் 10 நிகழ்ச்சியில் "பொன் மாலை பொழுது" நான் 1,2,3 வகுப்புகளின் "promoted" போஸ்ட் கார்டு வாங்கி 4 ஆம் வகுப்பு போன பின்பும் முதல் இடத்தில் தொடர்ந்தது. பின்னாளில் கல்லூரி நண்பர்களுடன் ooty 4th mile அருகில் உள்ள pine forestல் "வானம் எனக்கொரு போதி மரம்" கேட்ட நிமிடங்கள் சுஜாதாவின் தலைப்பு போல்  "ஏறக்குறைய சொர்க்கம்". ஆனால்  "விசால பார்வையால் விழுங்கு மக்களை" என்னும் பாரதிதாசன் வரியை ராஜசேகர் தப்பாக புரிந்து கொண்டாரோ என்ற  இன்று வரை எனக்கு சந்தேகம்தான்.
என் சகோதரர் 82-83'ல் டெல்லியிலிருந்து வாங்கி வந்த கெட்டியான கருப்பு உறை போட்ட tape recorder, 87'ல் அப்பா வாங்கிய கிரீம் கலர் national panasonic 2-in-1, 93'ல் மேல மாசி வீதியில் வாங்கிய 16w pmpo philips, 00'ல் domlur modern electricalsல் வாங்கிய 32w pmpo philips '01ல் tokyo akhiabaraவில் வாங்கிய சோனி walkman, '06ல் toronto searsல் வாங்கிய philips mp3 player என அனைத்திலுமே தேடிப்பிடித்து முதலில் கேட்டது பொன் மாலையும் இளைய நிலாவும்தான்.

முழு வீட்டிற்க்கும் சில கதவுகளே பார்த்து பார்த்து பழக்கப்பட்டு, இரண்டு பேருக்கு எதற்கு இதனை கதவுகள் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் முளைத்த குழந்தை வயதில் ஆசிரியையின் கண்டிப்புடன் குழைவும் சேர்ந்து வரும் உமா ரமணனின்   குரல் மெதுவாக மனதில் பதிந்தது "பூங்கதவே"வில்தான் [ இதில் வரும் நாதஸ்வரம் பிறகு புரட்சிக்காரன் என்னும் வறட்சியான படத்தில் "ஒற்றை பார்வையிலே" என்னும் அற்புதமான பாடலில் தவில் base வைத்து பாடல் முழுதும் வருடி விட்டிருந்தார் இளையராஜா]. உமாவின்  பாடல்களை ரசிக்கும் வயது வரும் பொழுது அவர் பாடுவதை நிறுத்தியிருந்தார். பெங்களூர்இல் வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு முறை மதுரை செல்வதற்காக kalasipalyam KPN ல்    அமர்ந்திருந்த பொழுது குப்பைகளுக்கு நடுவில் திடீரென்று "மீட்டாத ஒரு வீணை" என்னும் பாட்டு துவங்க, என்னடா இது இந்த பாட்டை எப்படி விட்டோம் என்று யோசித்து டிரைவரிடம் CD cover கேட்க அவர் ஏற இறங்க பார்த்தபடி கொடுத்தார் - "பூந்தோட்டம்" என்னும் புது படம்! அதற்கு பின் அவரின் குரல் இன்று வரை புதியதாய் வரவில்லை.

நம் ஊர் தொலைகாட்சிகளில் வரும் ராசிக்கல் ஜோசியர்கள் சொல்லும் பலன் போல் இல்லாமல் கீழ்காணும் பாடல்களை ஞாயிறு இரவு நிலவும் அவசரமற்ற அமைதியில் கேட்டால் விசேஷ நிம்மதி கிட்டும்!

அரிது - இனிது - பகுதி 1

பாடல் - படம்

1 . எங்கெங்கோ செல்லும் - பட்டகத்தி பைரவன்
2. பூந்தென்றல் காற்றே - மஞ்சள் நிலா 
3. சிந்து நதிக்கரை - நல்லொதொரு குடும்பம்
4. மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
5. அதிகாலை நேரமே - மீண்டும் ஒரு காதல் கதை







Thursday, April 26, 2012

3. முதல் மழை

முதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். "Gas Stove" இல்லாத நாட்கள் அவை. "Nutan" stove நிரப்ப மண்ணெண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும்  பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் "எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ  கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ்  புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் "நொண்டி யானை"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்]  குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார்  15 வருடம்  என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் "பெரிய யானை"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை "நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும்  தொடர்பு இருக்குமோ?
 . யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் "திருப்புகழ் சபை" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று  உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும்  நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். "பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்" என்று அக்கறையுடன்  திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும் 
tea  கடையில் ஒலித்தது "உறவுகள் தொடர்கதை". இந்த பாட்டு ஓரளவுக்கு  புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் "உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.
"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும்  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. "...வாழ்வென்பதோர்..." என்ற வரியின் முன்னால் வரும்  பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்!

மழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே...  அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில்  மண்டபம் camp கடக்கையில்  ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.
அம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த "தாய் மூகாம்பிகை" - இதில் வரும் "ஜனனி ஜனனி" பாட்டில் வரும்  kollur இடங்களை 
2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த "அலைகள் ஓய்வதில்லை" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் "செந்தாழம்பூவில்"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த "பயணங்கள் முடிவதில்லை", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த "உதய கீதம்" [இவை பற்றி விரிவாக பின்னர்]
இவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.
சமீபத்தில் வந்த "பிச்சைப்பாத்திரம்" பாடலை வெகுவாக ரசித்த அம்மா  பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின்  நம்பிக்கைக்கு  ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து  சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன்  பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "பிச்சைப்பாத்திரம்" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும்  அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் "வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்"  வரியின் வார்ப்பு.

சாதாரண பாடலுக்குள்ளும் "சரக்கு" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:

1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. கண்விழி என்பது - வளையல் சத்தம்
3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்
4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்
5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று


Friday, April 20, 2012

15. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 5

நவராத்திரி தினங்களின் இரவுகளில் பெரும்பாலான ஊர்களில் "மேடைக்  கச்சேரி" ஏற்பாடு செய்யும் வழக்கம் உண்டு. இப்போது   உள்ளது போல் - ஒரு மைதானத்தை பிடித்து, டிவி படம்பிடிக்க, "entry fee" வசூலிக்கும் பகட்டான "weekend" கச்சேரிகள் இல்லை அவை. சாலை மறித்து பந்தல் போட்டு மேடையில் பாடல் கச்சேரி நடக்கும். வழிப்போக்கர்கள் தங்களுக்கு பிடித்த பாடல் என்றால் நின்று கேட்பார்கள். சில பாடல்கள் முடிந்த பின் நகர்ந்து விடுவார்கள். சிலர் மட்டுமே "இருக்கையில்" அமர்ந்து ரசிப்பார்கள்.

நான் மேல்நிலை வகுப்பில் (higher secondary) நுழைந்த இரண்டாம் வருடம், ஒரு நவராத்திரி இரவில், என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று. அங்கு சாலையின் பாதியை அடைத்து போடப்பட்டிருந்த பந்தலில் "பாடல் கச்சேரி" களை கட்டியிருந்தது. traffic நெரிசலில் பேருந்து அகப்பட்டிருக்க, கரகரத்த குரல் கொண்ட அறிவிப்பாளர் விறுவிறுப்பாய் அடுத்த பாடல் பற்றிய "முன்னுரை" விளம்பிக்கொண்டிருந்தார்..."வில்லுப்பாட்டுக்காரன்" படத்தின் "கலைவாணியோ ராணியோ" பாடல்...பாடலின் வசீகரிக்கும் "percussion" செவியில் ஊடுருவ பேருந்திலிருந்து இறங்கி விட்டேன்.  மேடையில் இருந்த வயலின், புல்லாங்குழல், கப்பாஸ் வாசிக்கும் மூவருமே அறுபது வயதை கடந்த தோற்றத்திலிருந்தார்கள். அதிகம் பிரபலமாகாத இந்த பாடலுக்குள்தான் எத்தனை ஆச்சர்யங்கள்! கிட்டத்தட்ட நாம் மறந்து விட்ட ஹார்மோனியம் இந்த பாடலின் பல்லவியின் அடியில் நகரும். இந்த பாடலில் குறிப்பிட்ட நான்கு வரிகளின் முடிவிலும் ஒரு அற்புதம் வைத்திருக்கிறார் இளையராஜா - "வேதங்களும்  நாதங்களும் வேண்டி வந்தது கூட", "வேதனைகளை மாற்றிடும் அவள் விரிந்த சென்பகச்சோலை" , "ஜாடையிலே ஏற்றி விடும் தாகம் என்கிற மோகம்", "ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி" - இந்த வரிகளின் முடிவில் முத்தாய்ப்பாக guitar தரும் அழுத்தமான இரண்டு  strokes !   இந்த இன்பம் நம்மை சரியாக அடைய வேண்டும் என்பது போல் இந்த இடங்களில் மட்டும் தபேலா சற்றே "பின் வாங்கும்"! கப்பாஸ் வாசிப்பவர் இந்த இரண்டு strokes வருகின்ற போதெல்லாம் காட்டிய முகபாவம் இன்றும் நினைவில் பதிந்திருக்கிறது. . மூன்று முதியவர்களும் தங்களுக்குள் இருக்கும் "காதலையும்" பாடல் மீது தங்களுக்கு இருக்கும் "காதலையும்" ஒருவருக்கொருவர் கண்கள் மூலம் பரிமாறிக்கொண்டதும்... இரண்டு சரணங்களுக்கு முன்னும் புல்லாங்குழலும் வயலினும் கிட்டத்தட்ட பேசிக்கொள்ளும் நொடிகளும்...
இந்தப் பாடலுக்கு கால்களும் மனதும் தானாக தாளம் போடாவிட்டால் நம் மானிடத்தன்மையில் ஏதோ குறை என்று பொருள். 

தற்போது நுனி நாக்கால் "பாட்டு (பார்த்து?)  படிக்கும்" பாடகர்கள் இப்பாடலின் "பாதங்களை பார்த்ததுமே பார்வை வரலை மேல" "தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா" என்னும் வரிகளில் SPB  என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கவனிப்பது நல்லது.

இத்தகைய கச்சேரிகளில் சில சமயங்களில் "once more" என்று கூட்டம் சத்தம் போடும். அதை ஏற்று, இசைக்கும் குழு மீண்டும் அதே பாடலை பாடும். "கலைவாணியோ" பாட்டுக்கும் ஒன்ஸ் மோர் நிகழ்ந்தது. எனக்கும் பேருந்தை விட்டு கீழே இறங்கியது வீண்போகவில்லை என்ற மகிழ்ச்சி. மீண்டும் இசைக்கப்பட்ட இந்த பாடலை கண்கொட்டாமல் ரசிக்க முடிந்தது. இசைக்கருவிகள் வாசிக்கும் மனிதர்களின் விரல்களை காலம் தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து பூமிக்கு அனுப்பியிருக்குமோ? இல்லையென்றால் இவர்களின் விரல்கள் தரும் ஸ்வரங்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ முடியுமா?இப்பொழுதெல்லாம் முதல் வகுப்பு படிக்கும் குழந்தை கூட "pocket money" வைத்திருக்கிறது. நம் காலத்திலோ வெளியில் சென்றால் எந்த வேலைக்காக போகிறோமோ அதற்கு தேவைப்படும் பணம் மட்டுமே தருவார்கள். ஏற்கனவே பேருந்துக்கான காசு கழிந்து போனதால் கலைவாணியை நினைத்தபடி வீட்டுக்கு நடந்தே வந்து சேர்ந்தேன். வீடு திரும்பும் நேரம் தப்பியதால் என் அம்மா, தெருவை நோக்கி இருக்கும் எங்கள் வரண்டாவிலிருந்து தலை நீட்டி என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்...பதின்வயதில் பிள்ளைகள் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் ஆயிரம் கவலைகள் அடிவயிற்றில் சுருளும். கலைவாணியை ரசித்ததால் ஏற்பட்ட தாமதம் பற்றி அம்மாவிடம் விளக்கியபோது என்னை கூர்ந்து பார்த்த அம்மாவின் கண்களில், இவன், கவனத்தை சிதறடிக்கும் கலைவாணிகள் ராணிகளிடம் நேரம் வீணடிக்கவில்லை என்ற நம்பிக்கையும் நிம்மதியும் தெரிந்தது. நம்பிக்கைதானே எந்த உணர்வுக்கும் உறவுக்கும் உயிர்நாடி...

Saturday, April 7, 2012

14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமணத்திற்கு முன் தினம் இரவு திருமண மண்டபத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாக "second show" போகும் வழக்கம் இன்றைய multiplex சூழலில் மழுங்கியிருக்கலாம் (இப்போதெல்லாம் எத்தனை பேர் திருமணத்திற்கு முன் தினமே மண்டபத்திற்கு வருகிறார்கள்?). அவ்வாறு நினைவிலிருக்கும் பல "night show" இரவுகளில் அருமையானது என் முதல் "second show " அனுபவம்.

வடபழனியில் தெரிந்தவர் ஒருவரின் திருமணத்தில் முதல் நாள் விழா முடிந்து, மண்டபத்தில் இரும்பு chair வரிசை குலைந்து ஆங்கங்கே "உலகக் கதை" பேசும் குழுக்கள் வசம் சென்றிருக்க, சுமார் 20 பேர் கொண்ட கூட்டம் மண்டபத்திற்கு அருகிலிருக்கும் AVM தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்த "நல்லவனுக்கு நல்லவன்" செல்லத்  தயாராகிக் கொண்டிருந்தது.
சில நாட்களாக மாமாவின் பின்னாலே "கொடுக்கு" போல சுற்றி கொண்டிருந்த நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, அம்மா அப்பாவின் அனுமதி, தூங்கக்கூடாது, நடுவில் போரடிக்கிறது போகலாம்  என்று சொல்லக்கூடாது,"cone ice" கிடையாது என்ற நீளமான "லிஸ்ட்" அனைத்தின் சம்மதம் பெற்று என் முதல் "second show " அனுபவத்திற்கு அழுது அடம்பிடித்து கிளம்பிய இரவு கடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும் நேற்று போல் நினைவில் இருக்கிறது. serial bulb ஒளிரும் cut out பார்த்துக் கொண்டிருக்கையில் மாமா ஒரு கத்தை டிக்கெட்டுகளுடன் வரிசையிலிருந்து வெளிவந்தார்...அப்பொழுதெல்லாம் a/c என்பதை அறிய நமக்கிருந்த ஒரே இடம் "தியேட்டர்"! screen விலகுவதற்கு முன்பே போடப்பட்ட படத்தின் பாடல்களில் "உன்னைத்தானே..." "சிட்டுக்குச்  செல்ல சிட்டுக்கு" இரண்டுமே முதல் முறையே ஒரு விதமான வசீகரம் கொடுத்தாலும் வருடக்கணக்கில் இந்த பாடலை கேட்கப்போகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. "காடு மலை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் தேனீர் குடிக்கும் விளம்பரம், இந்திரா காந்தி பசுமை புரட்சியை பார்வையிடும் டாகுமெண்டரி இவையெல்லாம் கடந்து ஆரம்பித்த  படம் போரடிக்க, அந்த பாடல்களை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, மீண்டும் வந்தது "உன்னைத்தானே...". இப்பாடல் முழுவதும் நான் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பித் திரும்பி இரண்டு பக்க சுவர்களில் இருந்த "speaker"களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட அற்புதமான இசைக்கோர்வை கொண்டது இந்தப் பாடல். "triplet " மற்றும் தபேலா என்று இரண்டு வகை "base " உள்ள இப்பாடலில் வலது காதுக்குள்  (வலது பக்க ஸ்பீக்கர்)  ஒவ்வொரு வார்த்தைக்கேற்ப அதன் பின்னே தேனை ஊற்றும்   கிடார் அற்புதம்.இடது காது மற்ற அற்புதங்களை உள்வாங்கும். கப்பாஸ் மேலோங்கி ஒலிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.உங்கள் tape recorder வலது பக்க  ஸ்பீக்கர் off செய்தோ அல்லது உங்கள் வலது காது head phone நீக்கியோ கேட்டு பாருங்கள் - guitar இல்லாமல் தபேலா மற்றும் கப்பாஸ் இரண்டின் மூலம் இந்த பாடல் எப்படி இருக்கிறது என்றும் ரசிக்க முடியும். பாட்டில் வரும் பெண் குரல் மஞ்சுளா என்பவருடையது. "இழுத்தால்" என்று இவர் செய்யும் உச்சரிப்பு, பயிற்சி குறைவா, பிழையா என்பதை விட அந்த வரியின் பொருளுக்கேற்ற பாவத்தில் அமைந்திருப்பது போலவே தோன்றும்.

இந்த பாடல் கேட்ட உற்சாகம் வடியும் முன்னரே வந்தது "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"..."காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே; நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே" [வைரமுத்து] என்னும் சிறப்பான வரியை உள்ளடக்கிய இந்த பாட்டின் இறுதியில் repeat ஆகும் பல்லவியின் பின், கடலலை போல எழும்பும் violin  - நம் வயதிற்கேற்ப உணர்ச்சிகளை குவிக்கும் வாய்ப்பு தரும். இந்த இரண்டு பாடல்களுக்குமே ஒரே pattern - அதாவது triplet drum மற்றும் தபேலா base . வார்த்தைகளுக்கு பின் அதன் சாயலிலேயே பின் தொடரும் கிடார். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் triplet மேல் போகும் வயலின் அல்லது வீணை. பாட்டின் நடை நம்முடைய செவியில் நங்கூரமிட உதவும் கப்பாஸ்...வாழ்க்கை முழுதும் ரசிப்பதற்கான 2 பாடல்கள் ready. பாடல் முழுவதும், வரிகளுக்கு பின்னே அதே தொனியில் ஒலிக்கும் கிடாரை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததும் இந்த இரண்டு பாடல்கள்தான். பெரும்பான்மையான ilayaraja பாடல்கள் இந்த guitar "கல்வி" கற்காமல் முழுமையாக ரசித்ததின் திருப்தி தராது.

படம் முடிந்து, ஆளரவமற்ற தெருக்களை அர்த்தசாமத்தில் கடந்து, மண்டபத்தில் நீளமாக விரிக்கப்பட்டிர்க்கும் சிகப்பு ஜமுக்காளங்கள் ஒன்றில் படுத்து காலை விழித்த பொது கண்ணெரிச்சல் என்றால் என்ன என்பதன் முதல் அனுபவமும் கிட்டியது. திருமண விருந்து முடிந்து அருகில் இருந்த என் மாமா வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் சாலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை BBC உறுதி செய்திருந்த நிலையில் நம் ஆகாஷ வாணியும் தூர்தர்ஷனும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தெருக்களிலும் தெரிந்தது.
அன்று மதியத்துக்கு மேல் செய்தி ஊர்ஜிதமாக, எல்லா ரேடியோ அலைவரிசையிலும் shenoi , வீணை என்று சோக கீதம் போட, மூன்று நாட்கள் நகரம் முழுதும் சோகம் மூடிக்கொண்ட நாட்கள். நானோ, முந்தைய இரவு கேட்ட இரண்டு பாடல்களின் பிடியில் இருந்தேன் - மீண்டும் கேட்க ஆவலாய் ரேடியோவை எங்கு திருப்பியும் பாடல் கிடைக்காத ஏமாற்றத்தில்...
இன்று, vadapalani arcot road என்றால், இரண்டு பாடல்களும், இந்திரா காந்தி இறந்த அன்று கூட்டம் கூட்டமாக சாலையில் கூடிய மக்களும் arcot road எங்கும் இறைந்து கிடப்பது போலத்தான் ஞாபகம் வருகிறது....
இந்திரா காந்தி மரண நிகழ்வின் தீவிரமும் அதன் பின்னால் இருந்த தேசத்தின் வலிகளையும் அறியாமல் பாடலுக்காக ரேடியோ திருப்பிய அந்த நாட்களை நினைத்தால் இன்று நகைப்பாக இருக்கிறது. வயதின் அறியாமை, முக்கியத்துவங்களின் மேல் எப்படியெல்லாம் முகமூடி போடுகிறது!