Saturday, March 10, 2012

12. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 2

முன்னர் சொன்ன இளையராஜாவின் இயற்பியலுக்கான அடிப்படை விதிகளின் தொடர்ச்சியாக, இளையராஜாவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாத "கப்பாஸ்" கருவி அவரின் பெரும்பான்மையான பாடல்களில் நாம் அதனுடன் பயணம் போவதற்கான வழிகாட்டியாக இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.


 "தென்றலே என்னைத்  தொடு" படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த நேரம். இந்த படத்தில் நடித்த பெண்ணின் பெயர் கொண்ட, வீட்டில் அதிபுத்திசாலி என்று கருதப்பட்ட, என் ஒன்று  விட்ட அக்கா 12th standard முடித்து மதுரையிலேயே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்திருந்த தினம் அன்று. காலையில் நான் பள்ளிக்கு கிளம்புகையில் தனது அதிக மதிப்பெண்ணுக்காக எனக்கு ஒரு "5 star" [அப்பொழுது கிடைக்கக்கூடிய அதிகபட்ச treat!] வாங்கித்தருவதாக சொல்லியிருந்தார். "5 star" chocolate சுவையை நாக்குக்கு ஞாபகப்படுத்தியபடி school பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டிற்கருகில் வருகையில் வீட்டின் முன் சற்று கூட்டம். என்னை வீட்டிற்குள்  விடாமல், சில வீடுகள் தள்ளியிருந்த, எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான, "ராஜ[ம்] மாமி" வீட்டிற்கு கொண்டு போய் விட்டார்கள். "ராஜ மாமி" என்றழைக்கப்பட்ட Rajalakshmi மாமி Iyengar நெறிமுறையின் படி எப்பொழுதும் நெற்றியில் வைணவ குறியீட்டுடன் பெயருக்கேற்றபடி ஆஜானுபாகுவாய் இருப்பார். வீட்டிற்கு உடனே போயாக வேண்டும் என்று அடம் பிடித்த என்னை அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்றும் 10 நிமிடம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்றும் சொல்லி ஒருவருடன் அனுப்பி வைத்தார். ஆட்கள் நிரம்பியிருந்த எங்கள் வீட்டின் அரக்கு கலர் சுண்ணாம்பு தரையில் பற்கள் கட்டிபோய் கிடத்தப்பட்டிருந்த அக்கா கொடுத்தது ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அதிர்ச்சி. அன்றிரவு முழுதும் ராஜ மாமி என்னை சாப்பிட வைக்கவும் சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்கள் கையாண்டார். அதிலொன்று அவர்கள் வீட்டிலிருந்த மேல்நோக்கி திறக்கும் Panasonic tape recorder மூலம் பலமுறை போடப்பட்ட "தென்றலே என்னைத்  தொடு" பாடல்கள். அவர்கள் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து எங்கள் வீட்டு பக்கவாட்டு ஜன்னல்கள் தெரியுமென்பதால் அந்த மொட்டைமாடி கைப்பிடி காரைச்  சுவரை, விரல்களால் நோண்டியபடி ராஜ மாமியின் புடவைத் தலைப்புக்குள் பாதி மறைந்த படி, அக்காவிற்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்ற அந்த நாள்...என்னையே அறியாமல் "கப்பாஸ்" ரசிக்க துவங்கிய நாள்  போலும்...


"தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் [1,2]...[ இடைவெளி  ]...[3,4,5] என்ற தாளக்கட்டில் பாடல் முழுதும் "Cymbal" உடன் வரும் கப்பாஸ் இந்த பாட்டையே இன்னொரு தளத்திற்கு கொண்டு போகும்.இந்த பாட்டில்தான் எத்தனை கருவிகளை இழையோட வைத்திருக்கிறார் இளையராஜா! இதை எளிமையாக்கி ரசிக்க உதவுவதும் மேற்சொன்ன கப்பாஸ் தான். ராக சகவாசம் உள்ளவர்கள் இப்பாடல் hamsanandham என்பார்கள். சரணங்களின் பிற்பகுதியில் வரும் higher octave chords அற்புதம் என்பார்கள். பாட்டை மூளைக்கு அனுப்புவதற்கு இது தேவைப்படலாம் ஆனால் மனதை நிரப்ப, பாடலை  அனுபவிக்கத் தெரிந்தால் போதுமே!  ஹம்சானந்தமோ இல்லையோ இந்தப் பாட்டு அம்சமான ஆனந்தம் தான். இரண்டு விதமான base guitar stroke வைத்து பாடல் துவங்கும் போதே இது பல அடுக்கு இசைகோர்வை கொண்ட பாடல் என்று மனது தயாராகும். இப்பாடல் நான்கு இசை அடுக்குகளை கொண்டது. அடித்தளத்தில் இருப்பது guitar தரும் இழைகள். இது அவ்வபொழுது மேலடுக்கில் வந்து பரவசப்படுத்தும் (தேகம், மோகம் போன்ற வார்த்தைகள் முடிவில் கவனியுங்கள்...). இதற்கு மேலே கப்பாஸ். இது, இரு வார்த்தைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியையும்  நிரப்பும் [3,4,5] அழகை என்ன சொல்வது...மூன்றாவது அடுக்கு இளையராஜாவின் வழக்கமான வித்தைகளுக்கு...முதல் சரணத்தில் குழலில் வரும் interlude கேட்டு முடித்தபின் இதையே வயலினிலும் கேட்டால் எப்படியிருக்கும் என்ற நினைப்பை புரிந்து இளையராஜா இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இடத்தில் வயலினில் மாற்றியிருப்பார். நான்காவது அடுக்கு நம்மை வருடி விட - பாடல் முழுதும் ஒரு புறத்தில் ஒலிக்கும் சிறு கோர்வைகள் அதைத்தொடர்ந்து மறுபுறத்தில் வேறு கருவிகள் மூலம் பின்தொடர்கிறது...இப்பாடலில் "ம்" என்று முடியும் இடத்திலெல்லாம் அதற்கு பின் ஒரு மாயம் வைத்திருப்பார் இளையராஜா. 


சில வருடங்களுக்கு முன் ராஜ மாமியை சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சென்று பார்த்த பொழுது,  உடம்பை பல்வேறு நோய்களுக்கு குத்தகைக்கு விட்டு தன் பெயரின் பொலிவை இழந்திருந்தார். பேசி விட்டு கிளம்புகையில் மற்றவர்களை வெளியில் இருக்கும்படி சொன்ன ராஜ மாமி,  என்னைத் தனியே சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்து சட்டென்று உடைந்து அழத்தொடங்கினார். அழுகை விசும்பலாகி என் தலையை வருடி "போயிட்டு வா" என்றார். பெரும்பாலான இறுதி சந்திப்புகளை காலம் சூசகமாக நமக்கு தெரிவித்து விடுகிறது!



3 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஆச்சர்யமான ஒற்றுமை - எனது ஏழாவது வகுப்பின் நினைவு/நிகழ்வு - அது சிறிய ஒண்டு குடித்தன வீடு, எந்த ஒரு அசாதாரண நிகழ்வுக்கும், நாங்கள் பெரியம்மா வீட்டில் (ஜானகி பவனம்) இருந்து பள்ளி சென்ற நினைவு ... இனிமையான இளமைகால நாட்கள்........

    ReplyDelete