Saturday, April 7, 2012

14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமணத்திற்கு முன் தினம் இரவு திருமண மண்டபத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாக "second show" போகும் வழக்கம் இன்றைய multiplex சூழலில் மழுங்கியிருக்கலாம் (இப்போதெல்லாம் எத்தனை பேர் திருமணத்திற்கு முன் தினமே மண்டபத்திற்கு வருகிறார்கள்?). அவ்வாறு நினைவிலிருக்கும் பல "night show" இரவுகளில் அருமையானது என் முதல் "second show " அனுபவம்.

வடபழனியில் தெரிந்தவர் ஒருவரின் திருமணத்தில் முதல் நாள் விழா முடிந்து, மண்டபத்தில் இரும்பு chair வரிசை குலைந்து ஆங்கங்கே "உலகக் கதை" பேசும் குழுக்கள் வசம் சென்றிருக்க, சுமார் 20 பேர் கொண்ட கூட்டம் மண்டபத்திற்கு அருகிலிருக்கும் AVM தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்த "நல்லவனுக்கு நல்லவன்" செல்லத்  தயாராகிக் கொண்டிருந்தது.
சில நாட்களாக மாமாவின் பின்னாலே "கொடுக்கு" போல சுற்றி கொண்டிருந்த நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, அம்மா அப்பாவின் அனுமதி, தூங்கக்கூடாது, நடுவில் போரடிக்கிறது போகலாம்  என்று சொல்லக்கூடாது,"cone ice" கிடையாது என்ற நீளமான "லிஸ்ட்" அனைத்தின் சம்மதம் பெற்று என் முதல் "second show " அனுபவத்திற்கு அழுது அடம்பிடித்து கிளம்பிய இரவு கடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும் நேற்று போல் நினைவில் இருக்கிறது. serial bulb ஒளிரும் cut out பார்த்துக் கொண்டிருக்கையில் மாமா ஒரு கத்தை டிக்கெட்டுகளுடன் வரிசையிலிருந்து வெளிவந்தார்...அப்பொழுதெல்லாம் a/c என்பதை அறிய நமக்கிருந்த ஒரே இடம் "தியேட்டர்"! screen விலகுவதற்கு முன்பே போடப்பட்ட படத்தின் பாடல்களில் "உன்னைத்தானே..." "சிட்டுக்குச்  செல்ல சிட்டுக்கு" இரண்டுமே முதல் முறையே ஒரு விதமான வசீகரம் கொடுத்தாலும் வருடக்கணக்கில் இந்த பாடலை கேட்கப்போகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. "காடு மலை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் தேனீர் குடிக்கும் விளம்பரம், இந்திரா காந்தி பசுமை புரட்சியை பார்வையிடும் டாகுமெண்டரி இவையெல்லாம் கடந்து ஆரம்பித்த  படம் போரடிக்க, அந்த பாடல்களை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, மீண்டும் வந்தது "உன்னைத்தானே...". இப்பாடல் முழுவதும் நான் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பித் திரும்பி இரண்டு பக்க சுவர்களில் இருந்த "speaker"களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட அற்புதமான இசைக்கோர்வை கொண்டது இந்தப் பாடல். "triplet " மற்றும் தபேலா என்று இரண்டு வகை "base " உள்ள இப்பாடலில் வலது காதுக்குள்  (வலது பக்க ஸ்பீக்கர்)  ஒவ்வொரு வார்த்தைக்கேற்ப அதன் பின்னே தேனை ஊற்றும்   கிடார் அற்புதம்.இடது காது மற்ற அற்புதங்களை உள்வாங்கும். கப்பாஸ் மேலோங்கி ஒலிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.உங்கள் tape recorder வலது பக்க  ஸ்பீக்கர் off செய்தோ அல்லது உங்கள் வலது காது head phone நீக்கியோ கேட்டு பாருங்கள் - guitar இல்லாமல் தபேலா மற்றும் கப்பாஸ் இரண்டின் மூலம் இந்த பாடல் எப்படி இருக்கிறது என்றும் ரசிக்க முடியும். பாட்டில் வரும் பெண் குரல் மஞ்சுளா என்பவருடையது. "இழுத்தால்" என்று இவர் செய்யும் உச்சரிப்பு, பயிற்சி குறைவா, பிழையா என்பதை விட அந்த வரியின் பொருளுக்கேற்ற பாவத்தில் அமைந்திருப்பது போலவே தோன்றும்.

இந்த பாடல் கேட்ட உற்சாகம் வடியும் முன்னரே வந்தது "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"..."காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே; நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே" [வைரமுத்து] என்னும் சிறப்பான வரியை உள்ளடக்கிய இந்த பாட்டின் இறுதியில் repeat ஆகும் பல்லவியின் பின், கடலலை போல எழும்பும் violin  - நம் வயதிற்கேற்ப உணர்ச்சிகளை குவிக்கும் வாய்ப்பு தரும். இந்த இரண்டு பாடல்களுக்குமே ஒரே pattern - அதாவது triplet drum மற்றும் தபேலா base . வார்த்தைகளுக்கு பின் அதன் சாயலிலேயே பின் தொடரும் கிடார். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் triplet மேல் போகும் வயலின் அல்லது வீணை. பாட்டின் நடை நம்முடைய செவியில் நங்கூரமிட உதவும் கப்பாஸ்...வாழ்க்கை முழுதும் ரசிப்பதற்கான 2 பாடல்கள் ready. பாடல் முழுவதும், வரிகளுக்கு பின்னே அதே தொனியில் ஒலிக்கும் கிடாரை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததும் இந்த இரண்டு பாடல்கள்தான். பெரும்பான்மையான ilayaraja பாடல்கள் இந்த guitar "கல்வி" கற்காமல் முழுமையாக ரசித்ததின் திருப்தி தராது.

படம் முடிந்து, ஆளரவமற்ற தெருக்களை அர்த்தசாமத்தில் கடந்து, மண்டபத்தில் நீளமாக விரிக்கப்பட்டிர்க்கும் சிகப்பு ஜமுக்காளங்கள் ஒன்றில் படுத்து காலை விழித்த பொது கண்ணெரிச்சல் என்றால் என்ன என்பதன் முதல் அனுபவமும் கிட்டியது. திருமண விருந்து முடிந்து அருகில் இருந்த என் மாமா வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் சாலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை BBC உறுதி செய்திருந்த நிலையில் நம் ஆகாஷ வாணியும் தூர்தர்ஷனும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தெருக்களிலும் தெரிந்தது.
அன்று மதியத்துக்கு மேல் செய்தி ஊர்ஜிதமாக, எல்லா ரேடியோ அலைவரிசையிலும் shenoi , வீணை என்று சோக கீதம் போட, மூன்று நாட்கள் நகரம் முழுதும் சோகம் மூடிக்கொண்ட நாட்கள். நானோ, முந்தைய இரவு கேட்ட இரண்டு பாடல்களின் பிடியில் இருந்தேன் - மீண்டும் கேட்க ஆவலாய் ரேடியோவை எங்கு திருப்பியும் பாடல் கிடைக்காத ஏமாற்றத்தில்...
இன்று, vadapalani arcot road என்றால், இரண்டு பாடல்களும், இந்திரா காந்தி இறந்த அன்று கூட்டம் கூட்டமாக சாலையில் கூடிய மக்களும் arcot road எங்கும் இறைந்து கிடப்பது போலத்தான் ஞாபகம் வருகிறது....
இந்திரா காந்தி மரண நிகழ்வின் தீவிரமும் அதன் பின்னால் இருந்த தேசத்தின் வலிகளையும் அறியாமல் பாடலுக்காக ரேடியோ திருப்பிய அந்த நாட்களை நினைத்தால் இன்று நகைப்பாக இருக்கிறது. வயதின் அறியாமை, முக்கியத்துவங்களின் மேல் எப்படியெல்லாம் முகமூடி போடுகிறது!


   

3 comments:

  1. Im also geting the same feeling when i here those lines in "chittukku chella..." song.

    I think its Raja's wonder.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete
  3. பிரசாத்July 23, 2012 at 9:00 AM

    அருமையான பாடல்கள். மேலும் ஜேசுதாஸ் துள்ளல் இசையில் முதன்முதலாக பாடிய 'வச்சுக்கவா உன்ன மட்டும்' பாடல் மிக நன்றாக இருக்கும். இளையராஜாவின் சிறப்பான இசைமெட்டில் 'செங்கரும்புச் சாற கொண்டு வரவா' என்ற வரிகளை கேட்க மிக இனிமையாக இருக்கும்.

    ReplyDelete