Friday, April 20, 2012

15. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 5

நவராத்திரி தினங்களின் இரவுகளில் பெரும்பாலான ஊர்களில் "மேடைக்  கச்சேரி" ஏற்பாடு செய்யும் வழக்கம் உண்டு. இப்போது   உள்ளது போல் - ஒரு மைதானத்தை பிடித்து, டிவி படம்பிடிக்க, "entry fee" வசூலிக்கும் பகட்டான "weekend" கச்சேரிகள் இல்லை அவை. சாலை மறித்து பந்தல் போட்டு மேடையில் பாடல் கச்சேரி நடக்கும். வழிப்போக்கர்கள் தங்களுக்கு பிடித்த பாடல் என்றால் நின்று கேட்பார்கள். சில பாடல்கள் முடிந்த பின் நகர்ந்து விடுவார்கள். சிலர் மட்டுமே "இருக்கையில்" அமர்ந்து ரசிப்பார்கள்.

நான் மேல்நிலை வகுப்பில் (higher secondary) நுழைந்த இரண்டாம் வருடம், ஒரு நவராத்திரி இரவில், என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று. அங்கு சாலையின் பாதியை அடைத்து போடப்பட்டிருந்த பந்தலில் "பாடல் கச்சேரி" களை கட்டியிருந்தது. traffic நெரிசலில் பேருந்து அகப்பட்டிருக்க, கரகரத்த குரல் கொண்ட அறிவிப்பாளர் விறுவிறுப்பாய் அடுத்த பாடல் பற்றிய "முன்னுரை" விளம்பிக்கொண்டிருந்தார்..."வில்லுப்பாட்டுக்காரன்" படத்தின் "கலைவாணியோ ராணியோ" பாடல்...பாடலின் வசீகரிக்கும் "percussion" செவியில் ஊடுருவ பேருந்திலிருந்து இறங்கி விட்டேன்.  மேடையில் இருந்த வயலின், புல்லாங்குழல், கப்பாஸ் வாசிக்கும் மூவருமே அறுபது வயதை கடந்த தோற்றத்திலிருந்தார்கள். அதிகம் பிரபலமாகாத இந்த பாடலுக்குள்தான் எத்தனை ஆச்சர்யங்கள்! கிட்டத்தட்ட நாம் மறந்து விட்ட ஹார்மோனியம் இந்த பாடலின் பல்லவியின் அடியில் நகரும். இந்த பாடலில் குறிப்பிட்ட நான்கு வரிகளின் முடிவிலும் ஒரு அற்புதம் வைத்திருக்கிறார் இளையராஜா - "வேதங்களும்  நாதங்களும் வேண்டி வந்தது கூட", "வேதனைகளை மாற்றிடும் அவள் விரிந்த சென்பகச்சோலை" , "ஜாடையிலே ஏற்றி விடும் தாகம் என்கிற மோகம்", "ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி" - இந்த வரிகளின் முடிவில் முத்தாய்ப்பாக guitar தரும் அழுத்தமான இரண்டு  strokes !   இந்த இன்பம் நம்மை சரியாக அடைய வேண்டும் என்பது போல் இந்த இடங்களில் மட்டும் தபேலா சற்றே "பின் வாங்கும்"! கப்பாஸ் வாசிப்பவர் இந்த இரண்டு strokes வருகின்ற போதெல்லாம் காட்டிய முகபாவம் இன்றும் நினைவில் பதிந்திருக்கிறது. . மூன்று முதியவர்களும் தங்களுக்குள் இருக்கும் "காதலையும்" பாடல் மீது தங்களுக்கு இருக்கும் "காதலையும்" ஒருவருக்கொருவர் கண்கள் மூலம் பரிமாறிக்கொண்டதும்... இரண்டு சரணங்களுக்கு முன்னும் புல்லாங்குழலும் வயலினும் கிட்டத்தட்ட பேசிக்கொள்ளும் நொடிகளும்...
இந்தப் பாடலுக்கு கால்களும் மனதும் தானாக தாளம் போடாவிட்டால் நம் மானிடத்தன்மையில் ஏதோ குறை என்று பொருள். 

தற்போது நுனி நாக்கால் "பாட்டு (பார்த்து?)  படிக்கும்" பாடகர்கள் இப்பாடலின் "பாதங்களை பார்த்ததுமே பார்வை வரலை மேல" "தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா" என்னும் வரிகளில் SPB  என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கவனிப்பது நல்லது.

இத்தகைய கச்சேரிகளில் சில சமயங்களில் "once more" என்று கூட்டம் சத்தம் போடும். அதை ஏற்று, இசைக்கும் குழு மீண்டும் அதே பாடலை பாடும். "கலைவாணியோ" பாட்டுக்கும் ஒன்ஸ் மோர் நிகழ்ந்தது. எனக்கும் பேருந்தை விட்டு கீழே இறங்கியது வீண்போகவில்லை என்ற மகிழ்ச்சி. மீண்டும் இசைக்கப்பட்ட இந்த பாடலை கண்கொட்டாமல் ரசிக்க முடிந்தது. இசைக்கருவிகள் வாசிக்கும் மனிதர்களின் விரல்களை காலம் தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து பூமிக்கு அனுப்பியிருக்குமோ? இல்லையென்றால் இவர்களின் விரல்கள் தரும் ஸ்வரங்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ முடியுமா?இப்பொழுதெல்லாம் முதல் வகுப்பு படிக்கும் குழந்தை கூட "pocket money" வைத்திருக்கிறது. நம் காலத்திலோ வெளியில் சென்றால் எந்த வேலைக்காக போகிறோமோ அதற்கு தேவைப்படும் பணம் மட்டுமே தருவார்கள். ஏற்கனவே பேருந்துக்கான காசு கழிந்து போனதால் கலைவாணியை நினைத்தபடி வீட்டுக்கு நடந்தே வந்து சேர்ந்தேன். வீடு திரும்பும் நேரம் தப்பியதால் என் அம்மா, தெருவை நோக்கி இருக்கும் எங்கள் வரண்டாவிலிருந்து தலை நீட்டி என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்...பதின்வயதில் பிள்ளைகள் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் ஆயிரம் கவலைகள் அடிவயிற்றில் சுருளும். கலைவாணியை ரசித்ததால் ஏற்பட்ட தாமதம் பற்றி அம்மாவிடம் விளக்கியபோது என்னை கூர்ந்து பார்த்த அம்மாவின் கண்களில், இவன், கவனத்தை சிதறடிக்கும் கலைவாணிகள் ராணிகளிடம் நேரம் வீணடிக்கவில்லை என்ற நம்பிக்கையும் நிம்மதியும் தெரிந்தது. நம்பிக்கைதானே எந்த உணர்வுக்கும் உறவுக்கும் உயிர்நாடி...

3 comments:

  1. There are no words to Greet Our "RAGHA DEVAN" "Dr." "INNISAI ILAVAL" "ISAI GNANI" ILLAYARAJA. He is NOT an ordinary human being, Heaven's Gift.
    - Dr.K.B. JAYARRAMAN M.E., Ph.D

    ReplyDelete
  2. நல்லா அனுபவிசிருகீங்க. இது மாறி ஒவ்வொரு பாடலையும் நீங்க பல விஷயம் பாக்கலாம், அதாவது கேக்கலாம்!
    இன்னொன்னு, போற போக்குல கேக்கிற இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் a அவர் பேப்பர் ல எழுதினது.

    ReplyDelete