Thursday, April 26, 2012

3. முதல் மழை

முதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். "Gas Stove" இல்லாத நாட்கள் அவை. "Nutan" stove நிரப்ப மண்ணெண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும்  பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் "எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ  கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ்  புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் "நொண்டி யானை"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்]  குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார்  15 வருடம்  என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் "பெரிய யானை"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை "நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும்  தொடர்பு இருக்குமோ?
 . யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் "திருப்புகழ் சபை" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று  உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும்  நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். "பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்" என்று அக்கறையுடன்  திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும் 
tea  கடையில் ஒலித்தது "உறவுகள் தொடர்கதை". இந்த பாட்டு ஓரளவுக்கு  புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் "உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.
"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும்  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. "...வாழ்வென்பதோர்..." என்ற வரியின் முன்னால் வரும்  பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்!

மழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே...  அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில்  மண்டபம் camp கடக்கையில்  ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.
அம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த "தாய் மூகாம்பிகை" - இதில் வரும் "ஜனனி ஜனனி" பாட்டில் வரும்  kollur இடங்களை 
2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த "அலைகள் ஓய்வதில்லை" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் "செந்தாழம்பூவில்"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த "பயணங்கள் முடிவதில்லை", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த "உதய கீதம்" [இவை பற்றி விரிவாக பின்னர்]
இவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.
சமீபத்தில் வந்த "பிச்சைப்பாத்திரம்" பாடலை வெகுவாக ரசித்த அம்மா  பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின்  நம்பிக்கைக்கு  ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து  சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன்  பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "பிச்சைப்பாத்திரம்" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும்  அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் "வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்"  வரியின் வார்ப்பு.

சாதாரண பாடலுக்குள்ளும் "சரக்கு" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:

1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. கண்விழி என்பது - வளையல் சத்தம்
3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்
4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்
5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று


2 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete