Saturday, May 12, 2012

16. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 6

நாம் வசிக்கும் பகுதிகளில் கட்டாயம் ஒரு மாறுபட்ட மனநிலை மனிதரையேனும் நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம்...இவர்களுக்கு, நாமும், நம் தேவைக்கேற்ப ஒளிந்து கொள்ள நமக்கு பயன்படும் சமூகமும் சேர்ந்து "பை..." என்று பெயரும் வைத்திருப்போம். நான் பார்த்த வரையில், ஏதேனும் ஒன்றின் பின்னால் தறிகெட்டு அலையும் நமக்கு பொருந்தும் அளவு, இப்பெயர், மாறுமட்ட மனநிலை மனிதர்களுக்கு பொருந்துவதில்லை என்றே தோன்றுகிறது. இத்தகைய மனிதர் ஒருவர், சுமார் முப்பது வருடங்கள் எங்கள் தெருவில் தெருவே வீடாக குடியிருந்தார். 1970 - 2000 ஆண்டுகளுக்கு இடையில் மதுரை மைய பகுதிகளில் வசித்த எவருக்கும் இவர் அறிமுகம் தேவையில்லை.

வெள்ளை அங்கியும், நீண்ட தாடியுமாக ஆறடிக்கு மேல் ஒடிசலான தேகத்துடன் வளைய வரும் இவர், கிழக்கே விளக்குத்தூண், மேற்கே பெரியார்   பேருந்து நிலையம், வடக்கே நேதாஜி சாலை, தெற்கே வெளி வீதி என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்வார். இவர், ஒரு முறையேனும் எவரிடமும் காசு கேட்டோ பேசியோ பார்த்ததில்லை. சில சமயம் "over coat" அணிந்து கொண்டு டாக்டர் போல நடமாடுவார். பகல்களில் ஊசி வைத்து ஏதேனும் துணியை தைத்து கொண்டும் இரவுகளில் குப்பைகளை குவித்து தீ மூட்டி அதன் நாக்கையே உற்று பார்த்துகொண்டிருப்பதுமாய் கரைந்து கொண்டிருக்கும் இவர் ஜீவன். பள்ளி நாட்களில் இவர் அருகில் செல்லவே பயமாக இருக்கும். இவரை கடக்க வேண்டியிருப்பின் தெருவின் எதிர்புறம் சென்று மீண்டும் வருவது போன்ற செயல்களை சிறுவயதில் செய்திருக்கிறேன். இவரை பற்றி நான் வைத்திருந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கிய அந்த நாளும் வந்தது...

நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த  நேரம்.Ravi Shastri இறங்கி வந்து long on மேல் சிக்ஸ் அடிப்பது போலவும், Kapil Dev இரண்டு கால்களும் அந்தரத்தில் மடங்கியபடிஇடக்கையை (ஒரு கையால் சாமி கும்பிட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு) கழுத்துக்கு கீழ் வைத்து பந்து வீசப்போகும் காட்சி போலவும் இருக்கும் அட்டை போட்ட நோட்டுக்களையே தேடி வாங்குவது என் பழக்கம். நேதாஜி சாலையில் இன்றும் இருக்கும் "insania" கடையே எங்கள் ஆஸ்தான புத்தகக்கடை.அன்றும் நோட்டு வாங்குவதற்காக இன்சானியா முன் நின்றிருந்தேன். இந்தக் கடைக்கு சற்று தள்ளியுள்ள அம்மன் கோவிலில் விழா...கடையின் இடப்பக்கம் உள்ள மூலையில் நம்மவர் சில குப்பைகளை போட்டு எரித்துக்  கொண்டிருந்தார். கடைக்காரர் சிக்ஸர் அடிக்கும் ravi shastriயை தேடிக்கொண்டிருந்தார்..."நான் வாழ வைப்பேன்" [1979 / TMS / கண்ணதாசன் / இளையராஜா] படத்திலிருந்து "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே..." கோவில் குழாய் ஒலிபெருக்கிகளில் கசிந்து கொண்டிருந்தது...மாலை நேர கூட்டம் நடைபாதைகளில் நிரம்பியிருக்க TMS உருகும் இந்த பாட்டில் மொத்தம் 3 stanza.பொட்டல் வெளியில் பொசுக்கும் வெய்யிலில் தனியே நடக்கும் தகிப்பை கொடுக்கும் வயலினும் புல்லாங்குழலும் வரும் ஒவ்வொரு stanza துவக்கமும் இந்த பாட்டின் இளையராஜா special. திடீரென்று பீறிட்டு கிளம்பிய அழுகை ஒலி வந்த திசை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீயை உற்று நோக்கியபடி பெரும் ஓலத்துடன் அழுத நம் நண்பருக்கும் இந்த பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ? ஒரு வேளை "நீ வாடினால் வண்ண பூ பூ வாடுமே" என்பது போல இவரின் தோட்டத்தில்மலர வேண்டிய ஒரு பூ  வாடியதால் இவர் வாழ்வு வாடி விட்டதோ?
"கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை" என்ற ஆதங்கத்தின் உச்சத்தை தான் அவர் தீயிலே எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாரோ? "காலம் வரும் அந்த தெய்வம் வரும் அந்த நாளும் வரும் நல்ல வாழுவும் வரும்" என்று இவர் நம்பியிருந்து, அந்த காலமும் தெய்வமும் கூட்டு சேர்ந்து இவர் வாழ்வின் மீதேறி மிதித்து கூழாக்கி விட்டதோ? 

பாட்டு முடிந்த சில  நொடிகளில் இவர் அழுகை நின்று விட்டது. பார்த்திருந்தவர்களின் மானுடம் உறைந்து போய் கிடக்க  அவர் தன் உடமைகளுடன் நடக்கத் துவங்கினார்...அன்று நள்ளிரவே நான் மொட்டை மாடியிலிருந்து பார்க்கையில் எங்கள் வீட்டருகில் இவர் மீண்டும் தீயை மூட்டியிருந்தார். "தீக்குள் விரலை வைத்தால்..." என்ற வரிக்கு ஆயிரம் அர்த்தங்கள் இல்லையா? வெள்ளைத் தாளில் வரைந்த  சோகச்சித்திரம் போல எங்கள் தெருவில் உலவிய இவர் கசங்கிய காகிதமாய் காலத்துடன் போனார்...

நாம் சாலையை கடக்கும் வேளையிலோ பேருந்து நிலையங்களின் அழுக்கான  மூலையிலோ இவர் போன்ற பலரை பார்க்கிறோம். இவர்கள் இப்படி ஆனதன் ஆதார நொடிகளின் பின்னணி இசை போல ஏதேனும் ஒரு பாடல் இவர்களுக்குள் பதிந்து, அந்த  பாடல் இவர்களின் மூளைக்குள் உலை போல் எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்குமோ? இவர்களை குறிக்க நாம் பயன்படுத்தும் "பை..." வார்த்தையை உபயோகத்திலிருந்து நீக்கலாம் இல்லையா?

பி.கு: 

(i) இளையராஜா இந்த பாடலை, இன்றைய நவீன recording முறைகளை பயன்படுத்தி மெருகூட்டி, பாடல் முழுதும் அடியில் guitar ஒட விட்டு, மது பாலகிருஷ்ணன் போன்ற ஒருவரை பாட வைத்து தன் படத்தில் மீண்டும் வெளியிட்டு "remix" என்றால் இதுதான் என்று நம்மை மகிழ வைப்பாரா?

(ii)இதே படத்தில் வரும் "திருத்தேரில் வரும் சிலையோ" பாடலுக்கு முன் வரும் இசை, சற்றே மாறுப்பட்ட பல்லவி design ஆகிய இரண்டையும் தவற விடாதீர்கள்...

6 comments:

  1. //நம் நண்பருக்கும் இந்த பாட்டிக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ //

    kurai solvathagak karutha vendam , intha pathivin contexte intha siru pizhaiyinal mari vidugirathu , kavaniyungal...

    ReplyDelete
  2. பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி Madhav. திருத்தம் செய்திருக்கிறேன்.

    குமரன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Nanri kumaran.

    ungalathu matra pathivaugalayum vasithen. arumaiyana nostalgic pathivugal. keep it up...

    ReplyDelete
  5. Romba arumayaga irunthathu...maduraiyil innum idhu pondru manithargal irukkirargal. avargalukkul oru ''enthan ponvanname'' urainthu konduthan irukkirathu..but athu velivara kovil thiruvizha irunthalum antha paadal olikka than yarum illai.

    ReplyDelete
  6. அருமையான பதிவு,கடவுளை எத்தனை முறை பார்த்தாலும் புதிது புதிதாய் தோன்றுவது இயல்பே

    ReplyDelete