Saturday, September 29, 2012

25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15


சமீபத்தில் சிவகாசியில் நிகழ்ந்த கோரமான விபத்தை பற்றிய செய்திகளை படிக்கையில் ஏற்படும் சோகத்துடன் சேர்ந்து, நம் அனைவரின் ஞாபகமும் ஒரு நொடியேனும் நம் சிறுவயது பட்டாசு தாகத்தின் மீது சென்று திரும்பியிருக்கும். தீபாவளி சமயத்தில் மட்டும் முளைக்கும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருந்த (கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) "அணில் பட்டாசு கூட்டுறவு விற்பனை" நிலையத்தில் நான் அடம்பிடித்து வாங்கிய 1983ஆம் ஆண்டுக்கான பட்டாசு முப்பத்தெட்டு ரூபாய் நாற்பது பைசாவிற்கான பில் ஒன்று என்னிடம் இருக்கிறது.

நாற்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் கூட, பை கொள்ளாமல் நிரம்பி வழியும் பட்டாசுகளுடன் வீடு திரும்பிய காலம் அது. தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்பே, அணில் படம் போட்ட விலைப்பட்டியல் ஒன்றை அப்பா வாங்கி வந்து விடுவார். எனது பள்ளிப்புத்தகங்களில் குடியிருக்கும் "அணில்" என்னுடனே பள்ளி சென்று வரும். எந்த பாடம் படிக்கிறேனோ, அந்தப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். நூறு ரூபாயில் துவங்கும் அந்த வருடத்திற்கான பட்டாசு கனவு, தினமும், "காசை கரியாக்காதே" "உபயோகமாக செலவழி" போன்ற பொருளாதார மேம்பாட்டு அறிவுரைகளினால் தேய்ந்து, நாற்பதில் வந்து நிற்கும். கடலில் குளிக்க நினைக்கும் ஒருவன், கப்பில் நீர் பிடித்து கால் கழுவுவது போன்ற வேறுபாடு அது.

இவ்வளவு தான் பட்ஜெட் என்று உறுதியானவுடன், ஆயிரம் வாலாக்கள் அமைதியாக உறங்கி விட, லட்சுமி வெடி போன்ற, "குறைந்த விலை, அதிக சத்தம், நிறைய பேப்பர்" போன்ற "நடுத்தர வர்க்கத்தின் நண்பர்கள்" வகை பட்டாசுகளை "டிக்" செய்து, "எத்தனை" என்ற column கீழ், பத்தில் எழுதத் துவங்கி, இரண்டு வாரங்களில், அது மூன்று , நான்கு என்று மாறி, எங்கோ துவங்கி எங்கோ முடித்தாலும், அந்த சிறிய தொகையிலும், மனதையும் கையையும் நிறைத்தன அன்றைய தீபாவளிகள்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த 1983 தீபாவளி. என் அப்பாவுடன் நான் மேற்சொன்ன "அணில்" கடையில் நின்றிருந்தேன். நன்றாக இருட்டி விட்ட வேளை. லேசான தூறல்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு நாள் கழித்து தீபாவளி. கடையிலிருக்கும் அனைத்தையும் வாங்கி வெடிக்க முடியாதா என்று நினைக்கும் வயது. பட்டாசுகளை நவராத்திரி கொலு பொம்மைகள் போல படிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளின் நடுவே ஒரு பொம்மைபோல ஒரு ரேடியோவும் இருந்தது. "அப்படி இல்லை. தம்பி எவ்வளவு நல்லா..."என்று ஒருவர் சொல்லும், பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் ["அமுதே தமிழே" / Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981] துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"அமுதே தமிழே" பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.

பட்டாசு வாங்கும் பொழுது பிடித்த கோவில் புறாவின் அழகில் பல ஆண்டுகள் வளர்ந்த‌ பின், தஞ்சாவூரிலிருந்து ஒரு பின்னிரவு பேருந்து ஏறி விடியலில் நாலு மணி அளவில் மதுரையில் இறங்கி உள்ளூர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். டீக்கடையில் பாய்லர்கள் முதல் கொதிநீருக்கான தங்கள் தினத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தன. சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  பேருந்து நிலையத்தையே ஒரு சோகக் கரைசலில் முக்கி எடுப்பது போல ஒலித்தது...

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?

1 comment:

  1. Are you well versed with raagas? can you also detail them for the songs you are explaining in these posts? It will be useful for many.

    ReplyDelete