Tuesday, January 3, 2012

8. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி - 4

கால்கள் தரையில் பாவாமல், நாமே இயக்கி, நாம் நகரும் அனுபவம் நமக்கு பெரும்பாலும் முதல் முறை வாய்ப்பது சைக்கிளில் தான். ஜாதி மத பேதமின்றி உலகமெங்கும் அனைவருமே, தன் உறவுக்கார பையனோ, பக்கத்துக்கு வீட்டு பையனோ முதல் சில நாட்கள் handle bar வளைந்து நாம் சைக்கிளுடன் சாய்கையில் தாங்கிப்பிடிக்கவும் பின்னர் சில நாட்கள் நம்முடன் ஓடிவரவும் அப்பாவின் மேற்பார்வையில் "பாடம்" படித்திருப்போம். 


என் பெரியம்மா ஒருவருக்கு Race course colonyயில்  ஜாகை. நடுவில் ஒரு ground இருக்க நாற்புறமும் இன்றைய "apartment" வகையறாக்களுக்கு முன்னோடியான வடிவத்தில் A,B,C.. "Block"க்குகளாக வீடுகள். Colony வாயிலில் ஒரு பிள்ளையார் கோயில். அதனருகில் ஒரு வாடகை சைக்கிள் கடை (எல்லா கடைகளிலும் ஏன்  துருபிடித்த சில சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அன்று ஒரு புதிர்). ஒரு மணி நேரத்திற்கு 50 paisa வாடகை. ஐந்தாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் முதல் முறை சைக்கிள் ஸ்பரிசம்... திரும்பும்  வளைவுகளில் என் பயிற்சியின்மையை பறைசாற்றும் வகையில் ஒரு பக்கமாய் சரிந்து விழுந்து கொண்டிருக்கும் நொடிகளில் வயிற்றில் ஏற்படும் ஒரு இம்சை... (பயத்தின் சாயல்களுக்கெல்லாம் ஒரே ரேகைதானோ?) சைக்கிள் ஒட்டிப்பார்த்த  பரவசம் அன்றைய நாள் முழுதும் பச்சை மாங்காய் சுவைத்த நாக்கு போல் ஒரு தினுசாக ஒட்டியிருக்கும். அருகிலிருக்கும் reserve line groundல் மாதத்திற்கு சில நாட்கள் திரை கட்டி இரவில் படம் போடுவார்கள். படத்திற்கு முன் பாடல்களும் ஒலிக்கும். குடும்பம் குடும்பமாக மணலில் அமர்ந்து படம் பார்ப்பார்கள். மனதில் சைக்கிள் ஒட்டிய நினைவும் நாளை எப்படி ஓட்ட வேண்டும் என்ற கனவுமாக அந்த மணலில் அமர்ந்திருந்த நாட்களில் சில பாடல்கள் சுவடாய் தேங்கிப் போயின..

"தேவன் தந்த வீணை" ["நான் பாடும் பாடல்"] - SPB, Janaki, Jeyachandran என்று இந்த பாடலுக்கு 3 versions. ஆனால், Jayachandran குரலும், அந்த verionனுக்கு மட்டும் ilayaraja base guitarல் கொடுத்த extra வருடலும் வரியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அந்த வருடலும் ஏறி இறங்குவதுமாய் தோட்டத்தில் வீசும் காற்றில் ஊஞ்சலாடுவது போல் ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் பொழுது (head phone அவசியம் தேவை)...

பரபரப்பான violin தரும் tea குடித்த தெம்புடன் துவங்கும் "பூமாலையே தோள் சேரவா" என்னும் "கீதாஞ்சலி" பாடல் நிறைய பேரின் விருப்பம். இதே கீதாஞ்சலியில் "மலரே பேசு மௌன மொழி" என்னும் பாட்டு ஒரு தபேலா-கப்பாஸ்-வீணை combination ஸ்பெஷல்.  எந்த ஒரு பாடலிலும் ஒரு violin அல்லது flute bit போட்டு அதை நாம் வாழ்நாள் முழுதும் "வாசித்து" கொண்டே இருக்க வைக்கா விட்டால் இளையராஜாவுக்கு தூக்கம் வாராது போலும்! அத்தகைய flute bit இந்த பாட்டிலும் உண்டு.

"சிறிய பறவை" ["அந்த ஒரு நிமிடம்" - வைரமுத்து] வல்லின வார்த்தைகள் வரிசையாய் வந்த பின் "மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்" என்று காதல் பாட்டில் இலக்கணம் புகுத்தி..

அடுத்த நாள் மட்டுமல்ல சைக்கிள் பழகிய நாட்கள் தோறும் அந்த மணலில் கேட்ட இத்தகைய பாடல்கள் சைக்கிளில் தொற்றிக்  கொண்டு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ? காலத்தின் கைக்குழந்தையாய் அதன் பின்னே தவழும் நாட்களில் நம்முடன் வரும் இத்தகைய பாடல்களை தள்ளத்தான் தோன்றுமோ?









6 comments:

  1. ராஜாவிற்கு கிடைத்த வாத்திய காரர்களைப் போலவே ரசிகர்களும் அமைந்திருப்பதால் தான் அவரால் சிறப்பான பாடல்களை தரமுடிகிறதோ.ஒரு பதிவில் நீங்கள் மேற்கோள் காட்டிய "தச்சனால் இழைக்கப் பட்ட மரம் போல்" நீங்களும் வார்த்தைகளால் வலைப்பதிவை இழைத்திருக்கிறீர்கள்.Hats off to KAMALAM Teacher.

    ReplyDelete
  2. தேவன் தந்த வீணை padal "நான் பாடும் பாடல்" padam illai. The movie is "Unnai naan santhithen"

    ReplyDelete
  3. Anonymous சொன்னது போல் அந்த பாடல் இடம் பெற்ற படம் உன்னை நான் சந்தித்தேன்.

    ReplyDelete
  4. "பூ மாலையே தோள் சேரவா" இடம் பெற்றது "கீதாஞ்சலி" யில் அல்ல.அது இடம் பெற்ற படம் "பகல் நிலவு".மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படம்.

    ReplyDelete
  5. படப்பெயர்கள் குறித்த தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. காலத்தின் கைக்குழந்தையாய் அதன் பின்னே தவழும் நாட்களில் நம்முடன் வரும் இத்தகைய பாடல்களை தள்ளத்தான் தோன்றுமோ?//

    அருமையான வாசகம். விழாக்களுக்கு பெயர் போன மதுரையில் இருந்து இதையெல்லாம் அனுபவிக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். என்னுடைய பள்ளிப்பருவத்தில், எங்கள் பள்ளியின் பின்னால் முருகன் தியேட்டர் இருக்கும், அங்கே மதிய காட்சியில் ஓடும் எத்தனையோ படங்களின் வசனம், பாடல்கள் (அதுவும் அதிக படியான ஓசை எழுப்பும் வகையில் வரும்) கேட்டு படிப்போம். வெளியே வந்தால் டீக்கடை, சைக்கிள் கடை என பாடல்கள் (இசைஞானி பாடல்கள் என்றால் விரும்பி, நின்று எங்களை அறியாமல் கேட்டு செல்வோம்) ஒலித்துகொண்டே இருக்கும். விழாக்கள், பண்டிகைகாலங்களில் என பாடல்கள் காற்றில் எங்கிருந்தாலும் கேட்டுகொண்டே இருக்கும். வீடுகளின், மக்களின் பெருக்கம் இன்று ஒரு பாடலும் கேட்கவில்லை. அதே தெரு, அதே பள்ளி, அதே தியேட்டர், அதே டீக்கடை, சைக்கிள் கடை இருக்கு. இன்றைய பாடல்கள் ஒலிப்பது தான் இல்லை, இரவில் இசைஞானியின் பாடல்கள் ஒலிப்பதை தவிர.

    ReplyDelete